ஆதி: 16:5 அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும்…… கர்த்தர் எனக்கும், உமக்கும் நடுநின்று நியாயம் தீர்ப்பாராக என்றாள்.
மனைவியை திருப்தி படுத்துவதாக எண்ணி , தேவன் வாக்குத்தத்தம் பண்ணின குழந்தையை பெற்று கொள்ளும் முயற்சியில் , சாராயுடைய திட்டத்தின் படி ஆகாரோடு இணைந்தான் ஆபிராம் என்று நாம் பார்த்தோம்.
இதனால் விளைந்தது என்ன? சாராய் நினைத்தது ஓன்று , ஆனால் நடந்தது வேறு! ஆதி:16: 4 கூறுகிறது, “ ஆகார் தான் கர்ப்பவதியானதைக் கண்ட போது தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள்” என்று. இவ்வளவு நாட்களாக சாராய் சொல் படி கேட்டு, வாழ்ந்து வந்த ஆகாருக்கு, அவள் வயிற்றில் வளரும் குழந்தை ‘இனி நீ அவளுக்கு அடிமை இல்லை’ என்ற எண்ணத்தைக் கொடுத்தது.
இன்றும் கூட ஒரு ஆணின் செயலால், இரு பெண்கள் இடையே பிரச்சனைகள் வருவது, புதிதான காரியம் அல்ல.
இங்கு ஆகாரின் கரம் ஓங்கியதால், சாராயின் மனது நொறுங்கியது. மறுபடியும் தன் கணவனிடம் ஓடுகிறாள்! எனக்கு நேரிட்ட அநியாயம் உம்மேல் சுமரும்…… கர்த்தர் எனக்கும், உமக்கும் நடுநின்று நியாயம் தீர்ப்பாராக என்கிறாள். அதற்கு ஆபிராம் “ இதோ உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்” என்றான்.
வேதாகமத்தை கூர்ந்து கவனியுங்கள்! ஆதி: 16: 3 ம் வசனத்தில், மறுமனையாட்டியாக உயரத்தப் பட்ட ஆகார், 5 ம் வசனத்தில், மறுபடியும் அடிமைப் பெண்ணாக மாறுகிறாள். சற்று சிந்தித்து பாருங்கள்! ஆகார் அவர்கள் இருவரையும் பற்றி என்ன நினைத்திருப்பாள்? அவளைத் தன் சொந்த ஊரிலிருந்தும், சொந்த ஜனத்திலிருந்தும் பிரித்து அடிமையாக அழைத்து வந்ததுமில்லாமல், அவள் விருப்பத்தை ஒரு கணம் கூட கேட்காமல், அவளை ஆபிராமுடன் சேர சொல்லினர், அவள் குழந்தையுண்டானவுடன், அவளைக் கடினமாக நடத்தினர் ( ஆதி: 16:6) என்று பார்க்கிறோம். இரக்கத்தையும், அன்பையும் காட்ட வேண்டிய தேவனுடைய பிள்ளைகளான ஆபிராமும், சாராயும் ஆகாரிடம் இரக்கமில்லாமல் நடந்து கொள்கிறதினால், அவள் வீட்டை விட்டு ஓடிப்போகிறாள். ஆபிராம் சாராய் என்ற இரண்டு தேவனுடைய பிள்ளைகளின் வாழ்வும் ஒரு அந்நியப் பெண் முன்பு கெட்டுப் போயிற்று அல்லவா?
கர்த்தருக்கு கீழ்ப்படிந்து , அவருக்கு பொறுமையோடு காத்திராமல், அவசரமாக எடுத்த முடிவால் தங்களுடைய உள்ளத்திலும், இல்லத்திலும் நிம்மதியை இழந்து தவித்தனர் ஆபிராம், சாராய் தம்பதியினர். இத்தனைப் பிரச்சனைகளுக்கும் யார் காரணம்? இது நிச்சயமாக தேவனாகியக் கர்த்தரின் திட்டத்தில் இல்லை! ஆனால் அநேகமுறை பழி என்னமோ கர்த்தர்மேல் தான் சுமருகிறது!
பொறுமை என்பது இனிமையான கனியை கொடுக்கும்! அநேக காரியங்களில் நாம் பொறுமையில்லாமல் செயல் படும்போது நம் குடும்பம் நிம்மதியை இழந்து விடும்! எந்த முடிவையும் அவசரமாக எடுத்து விட்டு அதற்கு சாதகமாக ஒரு வசனத்தையும் காட்டும் வழக்கம் நம்மில் அநேகருக்கு உண்டு! இப்படிப்பட்ட செயல்களால் நம்முடைய சாட்சியே கெட்டுப் போய்விடும்!
எதை செய்தாலும் நிதானமாக தேவனுடைய சமூகத்தில் காத்திருந்து அவருடைய சித்தத்தின்படி செய்ய தேவன் நமக்கு உதவும்படி ஜெபிப்போம் இல்லையானால் நம்முடைய சாட்சி புறஜாதியினர் முன்பு காற்றில் பறந்துவிடும்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
Sister Thanks a lot for sharing God’s word with me. – Stellajohnson
On Thu, Sep 24, 2020, 6:02 AM Prema’s Tamil Bible Study & Devotions wrote:
> Prema Sunder Raj posted: “ஆதி: 16:5 அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி:
> எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும்…… கர்த்தர் எனக்கும், உமக்கும்
> நடுநின்று நியாயம் தீர்ப்பாராக என்றாள். மனைவியை திருப்தி படுத்துவதாக எண்ணி
> , தேவன் வாக்குத்தத்தம் பண்ணின குழந்தையை பெற்று கொள்ளும் முயற”
>
Thank you dear sister! sorry for the delay! missed your message! God bless you!