யாத்தி:14: 1-3 கர்த்தர் மோசேயை நோக்கி: நீங்கள் திரும்பி மித்தோலுக்கும், சமுத்திரத்துக்கும் நடுவே…… சமுத்திரக்கரையிலே பாளயமிறங்குவீர்களாக.
அப்பொழுது பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைக் குறித்து:அவர்கள் தேசத்திலே திகைத்து திரிகிறார்கள், வனாந்திரம் அவர்களை அடைத்துப் போட்டது என்று சொல்லுவான்’.
இதுவரை நாம் மோசேயின் வாழ்வைப்பற்றி படித்துக் கொண்டிருந்தோம். இனி நாம் இஸ்ரவேல் மக்களுடன் நம்முடைய பிரயாணத்தைத் தொடருவோம்!
சில நேரங்களில் நாம் உபயோகப்படுத்தும் நூல் சிக்கு ஆடி விடும். அப்படிப்பட்ட ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து சிக்கி இருக்கும் நுல்களை பிரிப்பது சாதாரணமான வேலை இல்லை என்று அனுபவப்பட்டவர்களுக்கு தான் தெரியும். தெரியாமல் ஒரு முனைக்கு பதிலாக வேறொரு முனையை இழுத்துவிட்டால் சிக்கு அதிகமாகி விடும். அந்த நூல் உபயோகப்படுத்தப் பட வேண்டுமானால் மிகப் பொறுமையாகவே அதை பிரித்து எடுக்க வேண்டும்.
அப்படித்தான் நம் வாழ்க்கையும் கூட! ஆம் நம் வாழ்க்கையிலும் கூட இவ்வாறு பல சிக்குகள் நிறைந்து காணப்படுகிறது என்பது உண்மை அல்லவா? உன்னுடைய வாழ்க்கையில் எவ்விதமான சிக்கு காணப்படுகிறது என்று எனக்கு தெரியாது. ஆனால் இதை வாசிக்கிற பல பேர்களின் வாழ்க்கையில் வெளியே சொல்ல முடியாத பல இன்னல்கள் உள்ளன என்று மாத்திரம் எனக்குத் தெரியும். எதிர்பார்க்காத நோய், வேலை இழப்பு, குடும்ப பிரச்சனைகள், பணத்தட்டுப்பாடு, நம் குடும்பத்தில் ஒருவரை இழந்து போனது, கடன் பிரச்சனைகள் இப்படி எத்தனையோ எண்ணிலடங்காத பிரச்சனைகள்! சீக்கிரம் என் வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் நீங்கி விடாதா என்ற பெருமூச்சு நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் உண்டு!
இப்படிப்பட்ட பெருமூச்சுதான் இஸ்ரவேல் மக்களிடமிருந்து வந்தது. 400 வருடங்கள் பார்வோனுக்கு அடிமைகளாய் எகிப்தில் வதை பட்ட அவர்களை மீட்க, மோசே என்ற தலைவனை கர்த்தர் அனுப்பினார். எகிப்தை விட்டு வெளியேறிய அவர்கள் கர்த்தர் வாக்குத்தத்தம் பண்ணின கானானுக்குள் பிரவேசிக்க எவ்வளவு ஆவலோடு இருந்திருப்பார்கள். இந்த லட்சக்கணக்கான மக்களும் அவர்கள் புறப்பட்டு வந்த எகிப்து தேசத்தின் வட கிழக்கில் உள்ள கானானை நோக்கித்தானே வேகமாய் நடக்க ஆரம்பித்திருப்பார்கள்? எகிப்திலிருந்து கானான் என்னப்படும் இஸ்ரவேலுக்கு பஸ்ஸில் சென்ற அனுபவம் உள்ளதால் அது எவ்வளவு தூரம் என்று என்னால் மனதில் கணிக்க முடிகிறது! அது வெறும் 613 கிலோ மீட்டர் தான்! நாம் ஒருநாளில் காரில் பயணிக்கும் தொலைவுதான்!
ஆனால் நடந்தது என்ன? அவர்கள் எகிப்தின் கிழக்கு எல்லைக்கு வந்தபோது கர்த்தர் மோசேயுடன் பேசி அவர்களை வடகிழக்கில் அல்ல, தென்மேற்கு திசையில் வழிநடத்தி, அங்கே உள்ள வனாந்திரத்துக்கும் , சமுத்திரத்துக்கும் நடுவே பாளயமிறங்கும் படி உத்தரவு அளித்தார்.
என்னைப் போல உங்களுக்கும் இந்த திசைகளைப் பற்றி ஞானம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது, கர்த்தர் அவர்கள் போக வேண்டிய திசையில் அல்ல நேர் எதிரான திசையில் நடத்தினார் என்று.
இஸ்ரவேல் மக்கள் இப்படி வனாந்திரத்தில் பாளயமிறங்கிய செய்தி பார்வோனை எட்டிய போது, அவன் அவர்கள் வழி தப்பி, குழப்பம் அடைந்து காடுகளில் திகைத்து அலைந்து திரிகிறார்கள் என்று எண்ணுவான் என்று கர்த்தர் மோசேயிடம் கூறுவதை நாம் இன்றைய வேத பகுதியில் காண்கிறோம். என்ன ஆச்சரியம்! இதை முன்கூட்டியே அறிந்த தேவனாகியக் கர்த்தர் அவர்களை ஒருபக்கம் வனாந்தரமும் மறுபக்கம் சமுத்திரமும் உள்ள இடத்துக்கு அழைத்துச் செல்கிறார்!
ஒருபுறம் வனாந்திரம்! மறுபுறம் சமுத்திரம்! இங்கே தான் கர்த்தர் தம்முடைய மகா பெரிய கிருபையை இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்படுத்த விரும்பியது மட்டும் அல்ல, அதன் மூலம் பார்வோனுக்கும் தன்னுடைய மகத்துவமான வல்லமையை வெளிப்படுத்த விரும்பினார்.
இதை வாசிக்கும்போது ஒருவேளை நீ இது என்னுடைய வாழ்க்கை போலவே உள்ளது என்று எண்ணலாம்! முன்பின் தெரியாத வனாந்திரத்தில் அலைந்து திரிகிறாயா? கர்த்தர் ஏன் என்னை இங்கு கொண்டு வந்தார்? என்னைக் கை விட்டு விட்டாரோ? நான் எப்படி இதிலிருந்து தப்பிப்பேன் என்றெல்லாம் எண்ணுகிறாய் அல்லவா?
ஒருவேளை குழப்பங்களும், சிக்கல்களும் பின்னி பிணைந்து இருக்கும் உன் வாழ்க்கையில் ஒருவேளை கர்த்தரின் பொறுமையான கரம் கிரியை செய்து சிக்கல்களை நீக்கிக் கொண்டிருக்கலாம்! உன்னைத் தாக்கியிருக்கும் அந்த நோய்… உன்னுடைய இழப்பு…… உன்னுடைய தோல்வி…… குடும்ப பிரச்சனை….உன்னை ஆழ்த்தும் கடன் தொல்லை ….. என்ற இந்த வனாந்திரமும், உன்னை சூழ்ந்திருக்கும் சமுத்திரமும் தேவன் தம்முடைய கிருபையையும், மகத்துவத்தையும் உன் வாழ்வில் வெளிப்படுத்தப்போகும் ஒரு இடமாகும்! இந்த இருண்ட சூழ்நிலை உன் வாழ்வில் இல்லாவிடில் கர்த்தர் உன்னோடு இருப்பதையும் அவர் உனக்காக வனாந்திரத்தின் வழியாய் ஒரு பாதையை ஆயத்தமாக்குவதையும் நீ காண முடியாது!
II கொரி: 4: 17 மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
premasuderraj@gmail.com