சங்கீதம்: 119:133 “ உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும்.”
நாம் இந்தப் புதிய ஆண்டில் லேவியராகமத்தை படிக்க ஆரம்பிக்கிறோம். அநேகர் இதை வாசிக்க கஷ்டப் படுகிறதை பார்த்திருக்கிறேன். ஒன்றுமே புரியவில்லை, சொன்னதையே திருப்பி சொல்வது போல உள்ளது என்று பலர் கூறுவார்கள்.
அடுத்த சில வாரங்கள் நாம் லேவியராகமத்தின் மூலமாய் தம்மை வெளிப்படுத்தும் தேவனாகிய கர்த்தரின் தன்மைகளைப் பற்றி படிப்போம். அவரைப் பற்றியும், அவருடைய கிரியைகள் பற்றியும் முழுவதும் அறிந்து கொள்ள நாம் வாசிக்கவே விரும்பாத லேவியராகம புத்தகம் நிச்சயமாக உதவும்.
லேவியராகமம் என்ற பெயர் இந்த புத்தகத்துக்கு சூட்டப் பட்டதின் காரணம் என்ன தெரியுமா? யாக்கோபின் பன்னிரண்டு குமாரரில் ஒருவனான லேவியின் கோத்திரத்து புத்திரர், தேவனுடைய சமுகத்தில் நின்று சேவை செய்யும் ஆசாரியராக தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். தேவனாகிய கர்த்தர் தம்முடைய ஊழியக்காரராகிய ஆசாரியருக்கு கொடுத்த கட்டளைகளை இந்த புத்தகத்தில் வாசிக்கிறோம். இதில் நாம் வாசிக்கும் காரியங்கள் அனைத்தும், தேவனாகிய கர்த்தர் தம்முடைய தாசனாகிய மோசேயின் மூலம், ஆசாரியனாகிய ஆரோனுக்கும், ஆரோன் மூலமாய் இஸ்ரவேல் மக்கள் அனைவருக்கும் தம்முடைய தன்மையை வெளிப்படுத்திக் கொடுத்த கட்டளைகள்.
இன்று நாம் இந்தப் புத்தகத்தின் மூலம் , நம்முடைய தேவனாகிய கர்த்தரை விதி முறைகளை நிலைப்படுத்துகிற தேவனாகக் காண்போம். நான் இதை முதலில் எழுதுவதற்கு காரணம் என்னவெனில், சில நேரங்களில் நாம் இந்த புத்தகத்தில் தேவ்னாகிய கர்த்தரை ஒரு தொட்டால் சிணுங்கியைப் போல உணருகிறோம் அல்லவா? இதைத் தொட்டால் குற்றம், அதைத் தொட்டால் குற்றம், காணிக்கை இப்படி செலுத்தப் பட வேண்டும், பலி இப்படி செலுத்தப் பட வேண்டும், பலியிடப்படும் ஆடுகள் இவ்வாறு வெட்டப்பட வேண்டும் என்பது போன்ற சில கட்டளைகள் கர்த்தரை நமக்கு மிகவும் கடுமையானவராகக் காட்டுகின்றன அல்லவா?
லேவியராகமம் 11 ம் அதிகாரத்துக்கு வரும்போது, நாம் மிருக ஜீவன்களில் எவற்றை சாப்பிடலாம், எவற்றை சாப்பிடக் கூடாது என்ற கட்டளைகள், நம் தலையை சுற்ற வைத்து விடுகின்றன. அதைப் போலத்தான் ஆசாரியரின் ஆடையைப் பற்றின கட்டளைகளும் கூட! எப்படித்தான் இவற்றையெல்லாம் கடை பிடித்தார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது!
இந்த புத்தகத்தை வாசிக்கும்போது தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த விதிமுறைகள் தான் நம் கவனத்துக்கு வருகின்றன! ஆனால் இவற்றை ஏன் தேவன் கொடுத்தார் தெரியுமா? 400 வருடங்கள் இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் அடிமைத்தனத்தில் வாழ்ந்து வந்ததால் அவர்களுக்கு எந்த விதி முறைகளும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதனால் இந்த புத்தகத்தில் நாம் வாசிக்கும் தகன பலிகளான காணிக்கைகளாகட்டும், சுத்திகரிப்பாகட்டும், அல்லது உள்ளே பின்னி பிணைத்திருக்கும் சில வாழ்க்கை வரலாறுகளாயிருக்கட்டும், இவை அனைத்திலும் நாம், தேவனாகிய கர்த்தர் தம்மை விதிமுறைகளின் தேவனாக வெளிப்படுத்துவதைக் காண்கிறோம்.
நான் நடத்தி வந்த நிறுவனத்தில் பெண்கள் துணியில் கிராஸ் ஸ்டிச் என்கிற தையலில் வசனங்களை தைப்பார்கள். அவர்கள் தைத்து முடிக்கும் போது அந்தத் துணி அழுக்கடைந்து விடும். இதன் பின்னர் அவர்கள் சில விதிமுறைகளை பின்பற்றி அதைப் பார்வையை கவரக்கூடிய அளவுக்குக் கொண்டு வருவார்கள்! முதலில் அதில் உள்ளத் தேவையில்லாத துண்டு நூல்களை வெட்டி எடுத்து விட்டு, அதைத் துவைத்து, கஞ்ஜி போட்டு காய வைத்து, பின்னர் சரியாக அயன் பண்ணி, அந்தத் துணிக்கு பின்னால் ஒரு அட்டையை வைத்து, எந்த சுருக்கமும் இல்லாமல் இழுத்து, கண்ணாடி உறைக்குள் டிசைன் வெளியே தெரியும்படி வைத்து, பிரேம் பண்ணினாற் போல் பக்குவமாக வைப்பார்கள். அந்தக் கடைசி வேலைதான் அதற்கு அழகு கொடுத்து, வெளி நாடுகளுக்கு எக்ஸ்போர்ட் பண்ணும் தரத்துக்கு கொண்டு வரும்!
இந்த வேலையைத் தான் தேவனாகியக் கர்த்தரும் லேவியராகமத்தில் செய்வதைப் பார்க்கிறோம். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் சந்ததியாரை தம்முடைய சொந்த ஜனமாக தெரிந்து கொண்ட தேவன், 400 வருடங்கள் அடிமைத்தனத்தில் வாழ்ந்து, தரமில்லாமல் இருந்த இந்த மக்களை, தரமுள்ள தம்முடைய ஜனமாக நிலைப் படுத்துவதற்காகத்தான் இத்தனை விதி முறைகளையும் கற்றுக் கொடுத்தார். அநியாயமும், முரட்டு தனமும் இவர்களை ஆளவொட்டாதிருக்க இந்த விதிமுறைகள் நிச்சயமாகத் தேவைப் பட்டன.
இந்த விதிமுறைகள் அந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்களுக்கு மட்டும் அல்ல, இன்றைய நூற்றாண்டில் வாழும் நமக்கும் கூடநம்முடைய வாழ்க்கையை சீராக்க உதவுகின்றன! கர்த்தர் கொடுத்த விதிமுறைகளைப் படிக்கும் போது ஒன்றை மட்டும் நினைவு கொள்ளுங்கள்!
நாம் செய்வதில் குற்றம் காண்பவர் அல்ல நம் தேவன்! நாம் செய்வதை சரிவர செய்யும்படி விதிமுறைகளை கடைப்பிடிக்கச் செய்பவர்தான்! அவர் கொடுத்திருக்கிற விதிமுறைகள் நம்மை அழித்து விட அல்ல நம்மை அழகுபடுத்தவே!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்