உபாகமம்:2:7 ”உன் தேவனாகிய கர்த்தர் உன் கைக்கிரியைகளிலெல்லாம் உன்னை ஆசீர்வதித்து வருகிறார். இந்த பெரிய வனாந்தரவழியாய் நீ நடந்து வருவதை அறிவார். இந்த நாற்பது வருஷமும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருந்தார். உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை..”
நேற்று நாம் உபாகமம் புத்தகத்தை ஆரம்பித்தோம். இந்த புத்தகம் இஸ்ரவேல் மக்களின் பிரயாணத்தை சரித்திரபூர்வமாக விளக்கும் புத்தகம் மாத்திரம் அல்ல, வல்லமையுள்ள தீர்க்கதரிசியாகிய மோசேயின் ஆவிக்குரிய பிரயாணத்தின் நாட்குறிப்பும்கூட என்று பார்த்தோம்.
அன்றன்று கர்த்தர் கொடுக்கும் செய்தியை தியானமாக எழுதுவது என் வழக்கம். இன்றைய தியானத்துக்காக ஜெபத்தோடு இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தபோது இந்த வசனம் கண்களில் பட்டது. இந்த வசனத்தை கர்த்தர் எனக்காகவே காண்பித்தார். சில முக்கியமான முடிவுகள் எடுக்க தேவனின் வழிநடத்துதலுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கும் எனக்கு நான் நேசிக்கும் என் தேவன் கடந்த நாற்பது வருட குடும்ப வாழ்க்கையில் எங்களோடு இருந்ததை நான் மறந்து போகாதபடி இந்த வசனம் என்னைத் தட்டி எழுப்பியது!
உபாகமம் புத்தகத்திலிருந்து தேவனாகிய கர்த்தர் தம் தாசனாகிய மோசேயிடம் கூறிய இந்த வார்த்தைகள், கோரமான வெயிலினால் வாடிய மலரின்மேல் வானிலிருந்து விழுந்த பனித்துளி போல் எனக்கு இருந்தது. உண்மையை சொல்லப்போனால் கண்களில் நீர் பெருகியது.
உபாகமத்தில் மறைந்து கிடந்த இந்த முத்துக்கள் மூலம், கர்த்தர் என்னோடு பேசி, உனக்கு ஏதாவது குறை நான் வைத்திருக்கிறேனா? உன் கையின் பிரயாசங்களையெல்லாம் நான் ஆசீர்வதித்திருக்கிறேன். நீ நடந்து வரும் பாதையையும் அறிவேன். இம்மட்டும் நான் உன்னை வழிநடத்தவில்லையா? உனக்கு என்ன குறை வைத்தேன்? என்று கேட்பது போல இருந்தது. கடந்துவந்த பாதையை நினைவுகூறும்போது கர்த்தர் ஒருநாளும் எங்களை கைவிட்டதே இல்லை என்று திட்டமாக என்னால் கூறமுடியும்!
தேவனுடைய தாசனாகிய மோசே தன்னுடைய நாற்பதுவருட அனுபவங்களை திரும்பி பார்க்க ஆரம்பித்தபோது, பரமபிதாவானவர் தாம் அவர்களோடு வனாந்தர பிரயாணம் முழுவதும் இருந்ததை ஞாபகப்படுத்தினார். கர்த்தர் மோசேயிடம், ”மோசே நீங்கள் வனாந்தரத்தில் நடந்த போதும், கல்லும் முள்ளுமான பாதைகளை கடந்த போதும், தண்ணீர் கசப்பாக இருந்தபோதும், எதிரிகள் தாக்கியபோதும், மனசோர்புகள் தாக்கியபோதும் நான் உங்கள் அருகாமையில் உங்களோடு கூட நடந்து வரவில்லையா? மோசே இன்னொன்றும் மறந்து போகாதே கடந்த நாற்பது வருடமும் நீங்கள் ஒன்றிலும் குறைவு படவில்லை.” என்று நினைவூட்டினார்.
பின்னர் மோசே இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி இந்த நாற்பது வருஷமும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருந்தார். உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை என்று அறிவீர்கள் அல்லவா என்று நினைவூட்டினான்.
இன்று உங்களுடைய வாழ்க்கையை சற்றுத் திரும்பிப் பாருங்கள்! தேவனுடைய வழிநடத்துதல், அவருடைய பாதுகாப்பு, அவருடைய அன்பின் அரவணைப்பு இவற்றை நீங்கள் அனுபவித்ததில்லையா? நீங்கள் வனாந்திரத்தில் நடந்த போதும், கடலைக் கடந்த போதும், எதிரிகளை சந்தித்தபோதும் அவர் உங்களை தம்முடைய கரத்தினால் தாங்கி, வழிகளை செம்மையாக்கி, இருளை நீக்கி, மன்னாவால் போஷித்து நடத்தவில்லையா? எதில் குறைவு பட்டு போனீர்கள்?
இவரே நம் தேவன்! காட்டு புஷ்பங்களை உடுத்துவிக்கிறவர்! ஆகாயத்துப் பறவைகளைப் போஷிக்கிறவர்! உங்களுடைய தேவைகளை அறிந்தவர்! உன் வாழ்வில் குறைகள் உண்டா? பாரங்கள் உண்டா? தேவைகள் உண்டா? அவற்றையெல்லாம் கர்த்தரிடம் ஒப்புக்கொடுத்திருக்கிறாயா? இனி அவர் உனக்காக கவலைப்படுவார்! நீ கவலைப்படத் தேவையில்லை!
ஏன் மலைபோல வருகிற பெரிய செலவைக் குறித்து கவலைப்படுகிறாய்? ஏன் எதிர்காலத்தைக் குறித்து பயப்படுகிறாய்? ஏன் பிள்ளைகளின் படிப்பைக் குறித்து கலங்குகிறாய்? கடந்து வந்த பாதையை நினைத்துப்பார்! அவர் உன்னோடு நடந்து கொண்டிருப்பதை உணர்வாய்! அவர் என்றுமே உன்னை விட்டு விலகினதில்லை என்பது தானே உன்மை! பின்னர் ஏன் இந்தக் கலக்கம்!
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்துவிடுங்கள். ( 1 பேது: 5:7 )
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.
ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி! இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசீர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் premasunderraj@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்