யோவான் 15:15 நான் உங்களைச் சிநேகிதர் என்றேன்
பிதாவாகிய தேவனைப் பற்றி சில நாட்கள் சிந்திக்கலாம் என்று சொன்னேன்!
நெருக்கமான நண்பர்களோடு பேசிக் கொண்டு இருக்கும்போது நேரம் போவதே தெரியாது அல்லவா? நம்மில் பலர் நண்பர்களுக்கு எவ்வவளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? தம் நண்பர்களை தங்கள் குடும்பத்துக்கும் மேலாக கருதுபவர்களைப் பார்த்ததுண்டா?
நாம் வாசிக்கும் இந்த வசனத்தில், கர்த்தராகிய இயேசுவானவர் நம்மோடு கொள்ள ஆசைப்படும் உறவை வெளிப்படுத்துகிறார். இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்கிறதில்லை, சிநேகிதர் என்றேன் என்றார். தேவன் நம்மை ஒரு நல்ல, நம்பகமான நண்பர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவருடைய இருதயத்தை நம்மோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறார். இருளான வேளையிலும், கடினமான சூழ்நிலைகளிலும் அவரை முற்றிலும் நம்பும் ஒரு நண்பராக நாம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
கர்த்தரகிய இயேசு, தேவனுடைய குமாரன், ஆதியிலே வார்த்தையாக இருந்து வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லவர், மகத்துவமுள்ளவர், நம்முடைய இரட்சகர், இன்று நம்மிடம் நட்பை எதிர்பார்க்கிறார். இதை நினைக்கும்போது புல்லரிக்கிறதல்லவா?
நான் ஸ்கூலில் படித்த போது அங்கு எல்லோராலும் விரும்பப்பட்ட அழகான, திறமையுள்ள ஒரு பெண் இருந்தாள். என்னுடைய வகுப்பு இல்லை ஆனால் நாங்கள் ஒரே வருடத்து மாணவிகள். எல்லோரும் அவளுடைய நட்பை விரும்பினார்கள் . நான் அமைதியாக ஒதுங்கியிருப்பேன். இவள் என்னை எங்கு கண்டு கொள்ள போகிறாள் என்று நினைப்பேன். அவளுடைய தெளிவான பேச்சும், உயரமான உருவமும், நீண்ட கூந்தலும், அவளுடைய பெற்றோர் இருந்த நல்ல மதிப்பான நிலையும் அவளுக்கு அந்த பள்ளியில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்க செய்தது.
ஆனால் ஒருநாள் நான் ஆச்சரியப்படும் விதமாக அவள் தானாகவே என்னிடம் வந்து என்னோடு நட்புடன் பேசினாள். எனக்கு சொல்ல முடியாத அளவு மிகவும் சந்தோஷம். அன்றிலிருந்து பலமுறை அவளோடு பேசியிருக்கிறேன், அவளுடன் பேசிய சில மணித்துளிகளை என்னால் மறக்கவே முடியவில்லை. இன்று அவள் தமிழ்நாடே தலைநிமிந்து பார்க்கும் ஒரு உயர்ந்த பதவியில் இருக்கிறாள், அதனால் நான் இங்கு அவள் பெயரையோ பதவியையோ குறிப்பிட விரும்பவில்லை.
ஆனால் இன்றைய வேதாகமப் பகுதியில், கர்த்தராகிய இயேசு நான் உங்களை என் சிநேகிதர் என்றேன் என்று சொன்ன இந்தக் காரியம் நமக்கு பதினாயிரம் மடங்கு சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய ஒன்றல்லாவா?
தேவாதி தேவனோடு நட்பு!!!! அவர் இதை என்னிடமும் உன்னிடமும் விரும்புகிறார்! தினமும் என்னோடு பேச வேண்டுமாம்! என்னோடு நடக்க வேண்டுமாம்! என்னுடைய வாழ்க்கையில் நடக்கும் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள வேண்டுமாம்! அது எத்தனை மகா பெரிய சிலாக்கியம் எனக்கு!
அவரை நண்பராகக் கொள்வதால் அவர் என்னைக் கண்மணி போல் காக்கிறார்! அவர் எனக்காக உறங்குவதுமில்லை, தூங்குவதுமில்லை! நான் அவரோடு பேசும்போது மகிழ்ச்சியடைகிறார், ஏனெனில் அவருடைய நட்பை நான் ஏற்றுக்கொண்டதால் பரலோகத்தில் அத்தனை மகிழ்ச்சி!
இவரை நண்பராகக் கொண்டதற்காக நான் கர்த்தருக்கு என்றென்றும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன். என்னுடைய நன்மையை விரும்பும் ஒரு நண்பர், என்றும் மாறாத நட்பையும், நம்பகமான நட்பையும் நமக்கு அளிப்பவர்!
சாது சுந்தர்சிங் சொன்னர்,’ நாம் பத்து அல்லது இருபது நிமிடம் ஜெபம் பண்ணவே கஷ்டப்படுகிறோமே! எப்படி ஆண்டவோடு கூட நித்தியமாய் வாழப்போகிறோம்! இங்கேயே அவரோடு அதிகம் பேசி, அவரோடு வாழப் பழக வேண்டாமா? என்று. உண்மைதானே! இன்று நாம் அவரோடு அதிக நட்பு கொள்ளாவிட்டால் பரலோகத்தில் போய் என்ன செய்வோம்?
தேவாதி தேவனுடைய விலை மதிப்பற்ற நட்பு உனக்கு வேண்டாமா?
இன்று நீ நான் கர்த்தருடைய சிநேகிதர் என்று சொல்ல முடியுமா?
இல்லையானால் அவர் தம்முடைய நட்புக்காய் உன்னை அழைக்கும் அழைப்பை இன்றே ஏற்றுக்கொள்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்