சங்: 34:8 கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள், அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
நம் ஒவ்வொருவருக்கும் எதிர்பார்ப்புகள் உண்டு. நாம் ஒரு நான்கு எதிர்பார்ப்புக்ளைப் பற்றிப்படிக்கப்போவதாக சொல்லியிருந்தேன்.
உங்களிடம் ஒரு கேள்வி! யாருடனாவது பழகும்போது அவர் மிகவும் நல்லவராகவும், மனதுக்கு பிடித்தவராகவும் இருந்து, பின்னால் நீங்கள் எதிர்பாராத அளவுக்கு முற்றிலும் மாறான குணம் படைத்தவர் என்று தெரிய வரும் போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது? நிச்சயமாக உங்கள் ஒவ்வொருவருக்கும் இப்படிப்பட்ட அனுபவம் இருக்கும் என்று நினைக்கிறேன்.
நம்முடைய வாழ்வில் மறுபடியும் மறுபடியும் பார்த்தவுடன் நல்லவர் என்று நம்ப வைக்கக்கூடிய பலரை கடந்து வருகிறோம். அவர்கள் நல்லவர்களைப் போலக் காணப்படலாம், பேசவும் செய்யலாம். நாம் அதில் மயங்கி அவர்கள் வலையில் விழுந்து விடுவோம். அதன் பின் என்றாவது ஒருநாள் ஏதாவது ஒரு சம்பவத்தின்போது நாம் சுத்தமாக எதிர்பார்க்காத ஒரு காரியத்தை அவர் செய்யும்போதுதான் நாம் ஏமாந்துவிட்டோம் என்று புரியும்.
வேதத்தில் நான் வாசித்த ஒரு சம்பவம் என்னை மிகவும் கவர்ந்தது. லூக்கா 7 ம் அதிகாரத்தில், யோவான் தன்னுடைய சீஷர்களை இயேசுவினிடத்தில் அனுப்பி, வருகிறவர் நீர்தானா? அல்லது இன்னொருவர் வர காத்திருக்க வேண்டுமா என்று கேட்கும்படி சொல்லி அனுப்பினார். அந்த வேளையில் இயேசு அநேக அற்புதங்களை செய்து கொண்டிருந்தார். பின்னர் அவர்களை நோக்கி, நீங்கள் போய் கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள் என்றார்.
இதற்கு அர்த்தம் என்ன? நீர் உண்மையாகவே மேசியாவா? உம்மை நம்பலாமா என்ற அவர்களுடைய கேள்விக்கு அவர், ஆம்!, நான் தான்! என்று கூறாமல் அவர்களைத் தம்முடன் தங்க வைத்து, தம்முடைய அற்புதங்களை அவர்களைக் காண செய்து, நீங்கள் கண்டவைகளையும், கேட்டவைகளையும் விசுவாசித்தவைகளையும் பற்றி சொல்லுங்கள் என்றார்.
கர்த்தர் நம்மிடம் கூட, நான் நல்லவர், நான் உண்மையானவர், நான், நான், நான் என்று கூறுவதே இல்லை! அதற்கு மாறாக அவர், கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள் என்கிறார்.
நான் சிறிய வயதில் எதையும் சாப்பிட ரொம்ப கஷ்டப்படுவேன். அப்பொழுது என்னுடைய அம்மா ஒன்று மட்டும் கூறுவார்கள். முன்னால் வைக்கும் சாப்பாட்டில் ஒரு பிடி மட்டும் சாப்பிட வேண்டும். ஒருவேளை அந்த ருசி எனக்கு பிடிக்கவில்லையானால் அதை விட்டு விடலாம். ஆனால் அந்த ஒரு பிடி மட்டும் கட்டாயம் சாப்பிட வேண்டும்! சாப்பிடுவதா இல்லையா என்று முடிவு எடுக்கும் முன் அந்த சாப்பாட்டை ருசி பார்க்க வேண்டும்.
ஒருவேளை நல்லவர் என்று நம்பிய ஒருவர் உன்னைக் கைவிட்டதால் இன்று உன்னால் கர்த்தரைக்கூட நம்ப முடியாத நிலையில் நீ இருக்கலாம். ஒரு நிமிஷம்! கர்த்தரை நீ ருசித்துப் பார்! அவர் எத்தனை நல்லவர் என்று உனக்குத் தெரியும்!
நீ நம்பிய ஒருவர் உன்னுடைய எதிர்பார்ப்புகளை உடைத்து, தன்னுடைய உண்மையில்லா குணத்தினாலும், பொய்யினாலும், துரோகத்தினாலும் உன்னுடைய நம்பிக்கையை உடைத்தெரிந்திருக்கலாம்! அதனால் இன்று நீ மிகுந்த கசப்புடன் உன் பரலோகப் பிதாவைக்கூட நம்ப முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கலாம்! கர்த்தரை நீ ருசித்துப் பார்! அவர் எத்தனை நல்லவர் என்று உனக்குத் தெரியும்!
நீ ஒருவேளை உண்மையாக நம்பக்கூடிய ஒரு கடவுளைத் தேடிக்கொண்டிருக்கிறாயா? ஒரு நிமிஷம்! கர்த்தராகிய இயேசுவை ருசித்துப் பார்! அவர் எத்தனை நல்லவர் என்று உனக்குத் தெரியும்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்