2 சாமுவேல் 11:27 …. தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பாயிருந்தது.
இப்பொழுதெல்லாம் என்னால் எதையும் கூர்ந்து பார்க்கவே முடிகிறதில்லை. அதோ பார் ஒரு அழகான பறவை அந்த மரத்தின் மேல் இருக்கிறது என்று என் கணவர் சொன்னால் மேலே பார்த்துவிட்டு எதையும் காணாமல் கண்களை அகற்றி விடுவேன்.
ஆனால் நம்முடைய தேவனாகிய கர்த்தர் நாம் பார்ப்பது போல அல்ல, வித்தியாசமாகப் பார்க்கிறார். இதைத்தான் நாம் கர்த்தரின் பார்வையில் என்று வாசிக்கிறோம்.
கர்த்தரின் பார்வை என்ற வார்த்தை எபிரேய மொழியில் பூமியெங்கும் பார்க்கும் பார்வை என்ற அர்த்தத்தில் உள்ளது.
சிலநேரங்களில் எப்பொழுதுமே அலட்சியமாகக் கடந்து போகும் மலைப்பகுதியை சற்று கூர்ந்து பார்த்தால் அது வேறொரு கண்ணோட்டத்தைத் தரும். ஒருநாள் நான் எப்பொழுதும் எடுக்கும் பாதையில் காரில் வந்து கொண்டிருந்தபோது அந்த மலைத்தொடரில் ஒரு வித்தியாசத்தைப் பார்த்தேன். அந்த மலைகளுக்கு பின்னால் என்றுமே கண்ணில் படாமல் ஒளிந்து கொண்டிருந்த சிகரங்கள் சூரிய ஒளியில் பளிச்சென்று ஜொலித்தன. ஏதோ அந்த மலைகளுக்கு பின்னால் பரலோகமே தெரிந்தாற் போல இருந்தது.
இங்கு கர்த்தரின் பார்வை தாவீதை உள்ளும் புறம்பும், ஆரம்ப முதல் முடிவு வரைப் பார்த்தது. அவருடைய பார்வையில் எதுவுமே மறைக்கப்படவில்லை. தாவீதின் வாழ்க்கை மொத்தத்தையும் கர்த்தரின் பார்வை கண்டது. அவனுடைய சிறுவயதிலேயே கர்த்தரை அவன் அதிகமாய் நேசித்து, அவரை விசுவாசித்த நாட்கள், கோலியாத்தை கர்த்தருடைய நாமத்தில் எதிர்த்த நாட்கள், அவன் நன்மை செய்த நாட்கள், கர்த்தருக்கு கீழ்ப்படிந்த நாட்கள், அவருடைய சித்தத்துக்கு கீழ்ப்படிந்து அவரிடம் அவன் விசாரித்த நாட்கள், அவன் யுத்தத்தில் கிடைத்த சம்பத்தை, யோராம் அவனுக்கு அன்பளித்த அனைத்தையும் கர்த்தருக்கு அர்ப்பணித்த நாட்கள், அனைத்து இஸ்ரவேலுக்கும் அவன் முன்னோடியாக வாழ்ந்த நாட்கள், தன் மக்களிடம் இரக்கமாய் நடந்து கொண்ட நாட்கள் அனைத்தும் அவர் கண்களுக்கு முன் வந்தது.
ஆனாலும் கர்த்தரின் பார்வையில் தாவீது உரியாவிடம் நடந்து கொண்டது பொல்லாப்பாய் பட்டது.
நாம் ஒருவரிடம் உள்ள குறைகளைப் பார்க்கும்போது அந்தக் குறைகள் மட்டுமே நம் கண்ணில் படுகிறது. ஆனால் கர்த்தரின் பார்வை அப்படியல்ல ஒருவரிடம் உள்ள நற்குணத்தையும், சகல குணங்களையும், குறைகளையும் சேர்த்துத்தான் பார்க்கின்றன!
இன்று இந்த சத்தியம் எனக்கு மிகவும் ஆறுதல் தருகிறது. கர்த்தரின் பார்வை எத்தனை ஆழமானது! அவர் பார்வையில் மறைக்கப்படும் எதுவுமே என் வாழ்க்கையில் இருக்க முடியாது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! இன்று நாம் நேசிக்கிற இந்த தேவன் எல்லாவற்றையும் காண்பவர்! என்னில் உள்ள குறையை மட்டும் அல்ல மற்ற எல்லாவற்றையும் கூட பார்க்கிறார். இது எனக்கு எவ்வளவு உற்சாகத்தைக் கொடுக்கிறது தெரியுமா!
கர்த்தர் தாவீது உரியாவுக்கு செய்த காரியத்தை பொல்லாப்பாய்க் கண்டார். ஆனாலும் கர்த்தரின் பார்வை அவனுடைய மொத்த வாழ்க்கையையும் பார்த்தது. அவனுடைய உள்ளத்தின் ஆழத்தைக் கண்டது. அதனால் தான் கர்த்தர் பாவியாகிய அவனை இன்னும் நேசித்தார். எத்தனை இரக்கமுள்ள தேவன் அவர்.
இன்று கர்த்தரின் பார்வையில் நீ எப்படி காணப்படுகிறாய்? கர்த்தர் உன்னை உள்ளும் புறம்புமாய், உன்னில் உள்ள நன்மை தீமை யாவற்றையும் பார்க்கிறார் என்று உணரும்போது நீ என்ன நினைக்கிறாய்?
ஒருவேளை இன்று நீ வழி தவறிப் போய்க் கொண்டிருப்பாயானல் உன்னைக் காணும் தேவனிடம் ஒப்புவித்து ஜெபி!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்