Bible Study

மலர்:1இதழ்: 74 குடும்பம் ஒரு பரிசு!

யோவான்:13: 34 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்கு கொடுக்கிறேன்

உங்களில் யாராவது ராஜாவின் மலர்களுக்கு புதிதாக வந்திருப்பீர்களானால், ஒரு சிறு முன்னுரை கொடுக்க விரும்புகிறேன்!

நாம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆதியாகமத்திலிருந்து ஆரம்பித்தோம். நம்முடைய வேத ஆராய்ச்சியில் நாம் பெண்களைப்பற்றி மாத்திரம் படிக்கவில்லை. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு என்று பலரைப் பற்றிப் படித்தோம்.

ஆனால் வேதத்தில் ஏதாவது ஒரு பெண்ணின்பெயர் வரும்போது அதை நிறுத்தி, ஆராய்ந்து, அந்தப் பெண்ணின் பெயர் ஏன் வேதத்தில் இடம் பெற்றது? இவளைப் போன்ற பெண் என்னைப் போன்ற பெண்களுக்கு என்ன கற்றுக் கொடுக்கிறாள்? என்று ஆராய்வது நம் வழக்கம்.

ராஜாவின் மலர்கள் நம்மை ஆதியாகமத்திலுள்ள எல்லா பெண்களின் குடும்ப வாழ்க்கையையும் பகிர்ந்து கொள்ள செய்தது. கடந்த சில வாரங்களாக நாம்  யாத்திராகம புத்தகத்தில் வரும் பெண்களைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம்.

எபிரேயக் குழந்தைகளை சிசுகொலையினின்று காத்த சிப்பிராள், பூவாள் என்ற மருத்துவச்சிகளை சந்தித்தோம்! பார்வோன் குமாரத்தியைப் பற்றியும், மோசேயின் தாயாகிய யோகெபெத் பற்றியும் அறிந்து கொண்டோம். சில நாட்களாக மோசேயின் சகோதரி மிரியாமை சந்தித்து, தேவனால் தீர்க்கதரிசி என்றழைக்கப்பட்ட, இஸ்ரவேல் மக்களுக்கு துதி ஆராதனை நடத்திய பெண்ணைப் பற்றி  பல காரியங்களை கற்றுக்கொண்டோம்.

இந்த வாரம் முழுவதும், மோசேயின் வாழ்வில் முக்கிய இடம் பிடித்த, அவன் மனைவியாகிய சிப்போராள் என்ற பெண்ணைப் பற்றி படிக்கலாம்.

நாம் மோசேயின் தாயாகிய யோகெபெத் பற்றி படிக்கும்போது அவள் பிள்ளைகளுக்கு கர்த்தராகிய தேவனைப் பற்றி கற்றுக் கொடுத்ததால் அவளுடைய மூன்று பிள்ளைகளும் இஸ்ரவேலின் தலைவர்களானார்கள், அவள் குடும்பம் கர்த்தரால் ஆசிர்வதிக்கப்பட்டது என்று பார்த்தோம். அதனால் குடும்பத்தில் எல்லாமே வெண்ணெயும், சர்க்கரையும் போல இருந்தது என்று எண்ணிவிடாதீர்கள்!

நாம் விசுவாசிகளாய் இருந்தால் நம் குடும்பத்தில் எல்லாமே சந்தோஷமாக அமையவேண்டும் என்று எண்ணுகிறோம்! கிறிஸ்தவர்களாக இருப்பதால் நம் குடும்பத்தில் உள்ள எல்லோரின் எண்ணங்களும் ஒன்று பட்டு விடுமா? எல்லோரும் எல்லா காரியத்திலும் ஒன்று பட்டு செயல்படுவார்களா? புதிய ஏற்பாட்டின் இரு பெருந்தலைவர்கள் பவுலும், பர்னபாவும், மாற்கு என்றழைக்கப்பட்ட யோவானை தங்களுடன் ஊழியத்துக்கு அழைத்து செல்லும் விஷயத்தில் கருத்து வேறு படவில்லையா?  அதனால் அவர்கள் பிரிந்து வேறு வேறு திசைக்கு சென்றனர் என்று வேதத்தில் வாசிக்கிறோமே!

நம் குடும்பங்களிலும் கருத்து வேறுபாடுகள் வருவது சகஜமே!

 வீட்டில் உள்ள பெரியவர்கள் மறைந்து போவதும், புதிய நபர்கள் திருமணத்தின்  மூலம் குடும்பத்தில் இணைக்கப்படுவதும் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கிற சம்பவம் தான்! சில நேரங்களில் வேறே கலாச்சாரத்தில் உள்ள பெண்களோ அல்லது ஆண்களோ நம் குடும்ப உறுப்பினராகும்போது நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம்! அவர்களை நாம் கிறிஸ்துவின் அன்போடு ஏற்றுக் கொள்கிறோமா?

அனுபவம் இல்லாமல் பேசாதீர்கள், வேறு கலாச்சாரத்திலிருந்து ஒரு பெண்ணை ஏற்றுக்கொண்டால் குடும்பத்தில் என்ன குழப்படிகள் நடக்கும்  தெரியுமா? என்று யாரோ என்னைப் பார்த்துக் கூறுவது போல உள்ளது.

அனுபவத்துடன் தான் பேசுகிறேன்! எங்கள் குடும்பத்தில், கிறிஸ்தவ குடும்பம், இந்து குடும்பம், தமிழ் நாட்டு கலாச்சாரம், வட நாட்டு கலாச்சாரம் , மேலை நாட்டு கலாச்சாரம் என்று எல்லாம் ஒன்றாகி உருகி ஒரு குடும்பம் என்ற பாத்திரமாகியிருக்கிறோம்!

 நாம் கிறிஸ்துவைப் போல அன்பினாலும் அரவணைப்பினாலும் குடும்பத்தைக் கட்டும்போது நம் குடும்பத்தில் அமைதி காணப்படும், கலாச்சாரங்களும், ஜாதி, மத வேறுபாடுகளும் பிரிவினையைக் கொண்டு வர முடியாது.

நாளையிலிருந்து சில நாட்கள் நாம், மீதியான் தேசத்து வனாந்தரத்தில் வளர்ந்த சிப்போராள் என்ற பெண்ணுக்கும், எகிப்திய நாட்டில் பார்வோன் குமாரத்தியின் வளர்ப்பு மகனாய் அரண்மனை சுகத்தில் வாழ்ந்த மோசேக்கும், மத்தியில் வளர்ந்த காதல் திருமணத்தையும், பின்னர் பெண்களாகிய நாம் கர்த்தருடைய கிருபையால் நம்முடைய குடும்ப நலனுக்காக வளர்க்க வேண்டிய குணாதிசயங்கள் இவைகளைப் பற்றி படிக்கப் போகிறோம்.

கடந்த வருடம் நாங்கள், கென்யா தேசத்தில் உள்ள  நைரோபிக்கு  சென்றிருந்தபோது ‘டெஸ்மொண்ட் டுடு விருந்தினர் விடுதியில்’ தங்கினோம். அங்கே கண்ட நீ உன் குடும்பத்தை தெரிந்துகொள்ளவில்லை, உன் குடும்பத்தார் கர்த்தர் உனக்கு கொடுத்த பரிசு ,  நீ அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசு   என்ற அவருடைய வாசகம் உள்ளத்தில் நிலைத்தது.

நாம் குடும்ப உறவுகளைப் பற்றி படிக்கப் போகிற இந்த நாட்களில் தேவன் நமக்கு பரிசாக அளித்திருக்கிற நம் குடும்பத்துக்காக தேவனுக்கு நற்றி செலுத்துவோம்!

ஜெபம்: நல்ல ஆண்டவரே! என்னுடைய குடும்பத்துக்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். எங்கள் குடும்பத்தில் என்றும் சந்தோஷமும்  சமாதானமும் நிலைத்திருக்கட்டும்.  ஆமென்!

Leave a comment