கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 892 உன்னுடைய கூடாரத்துக்குள் இன்று யாருக்கு விருந்து?

நியா:  4:19 ” அவன் அவளைப் பார்த்து : குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தா, தாகமாயிருக்கிறேன் என்றான்; அவள் பால் துருத்தியை திறந்து, அவனுக்குக் குடிக்கக் கொடுத்து, திரும்பவும் அவனை மூடினாள்.

இன்றைக்கு மதியம் நான் சாப்பிட உட்கார்ந்த போது எனக்கு உடம்பில் சர்க்கரை குறைந்து விட்டது. நான் வேகவேகமாக சாப்பிட ஆரம்பித்தேன், ஆனால் அதி வேகமாக சர்க்கரை குறைந்து கைகளும் கால்களும் நடுங்கவும், கண்கள் சொருகவும் ஆரம்பித்தன, வாய் குழறியது. என் மருமகள் ஆரஞ்சு ஜூஸை என் வாயில் சிறிது சிறிதாக ஊற்றினாள். சற்று நேரம் கழித்து கண்களில் தெளிவும், உடம்பில் தெம்பும் திரும்ப வந்தது.

இப்படியாக கால்கள் தள்ளாடி, கண்கள் சொருகிய நிலையில்தான் சிசெரா யாகேலுடைய கூடாரத்துக்குள் சென்றிருப்பான். அவன் பாராக்கின் சேனைகளின் கண்களுக்குத் தப்ப பல நாட்கள் ஓடியிருந்திருப்பான். அதுமட்டுமல்ல பாலஸ்தீனிய பாலைவனத்தின் அனல் அவன் உடம்பில் இருந்த சொட்டு நீரையும் உறிஞ்சியிருக்கும். நாவு உலர்ந்து, ஒரு சொட்டு தண்ணீருக்கும், ஒரு பிடி உணவுக்கும் சரீரம் ஏங்கியவனாய் யாகேலின் கூடாரத்துக்குள் நுழைகிறான்.

எது எப்படியாயிருந்தாலும் சரி, யாகேல் தன்னுடைய கூடாரத்துக்குள் எதிர்பாராத வேளையில் நுழைந்த சிசெராவை எப்படி உபசரித்தாள் என்பதே நமக்கு முக்கியம்.

அங்கு அவள் கணவன் ஏபேர் இருந்ததாகத் தெரியவில்லை. அவன் இல்லாததால் தான் சிசெரா யாகேலுடைய கூடாரத்துக்குள் வந்தான். சரித்திரத்தை திரும்பி பார்த்தால், அக்காலத்திலே  கணவன் மனைவியாக இருந்தாலும் அவர்கள் தனித்தனி கூடாரத்திலே வாழ்ந்தனர். ஆபிரகாமும் சாராளும் தனிக் கூடாரங்களிலே வாழ்ந்தனர். ஈசாக்கு ரெபெக்காளை மணந்த போது அவளைத் தன் தாயின் கூடாரத்துக்கு அழைத்து சென்றான் என்று வேதம் சொல்லுகிறது.

யாகேலுடைய உபசரிப்பைப்பற்றிப் பார்க்குமுன்  சில முக்கியமான காரியங்களைக் கவனிப்போம்.

முதலாவதாக, ஆதிப் பழங்குடி நாடோடி மக்களிடம் ஒரு வழக்கம் இருந்தது. ஒருவனுடைய கூடாரத்தில் போய் அவனோடே புசித்துக், குடித்து விட்டால் அவர்களுக்குள் அது சமாதானத்துக்கு அறிகுறி. எதிரியுடைய கூடாரமாகவே இருக்கட்டும், அவனோடு புசித்துக் குடித்து விட்டால் ஒருவன் தைரியமாகத் தங்க முடியும். ஐயோ பாவம் சிசெரா யாகேலுடைய கூடாரத்தை அப்படித்தான் நினைத்துவிட்டான், புசித்துக் குடித்துவிட்டால்  சமாதானம் என்று.

இரண்டாவதாக, முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று!  நாவு ஒன்றோடுன்று ஒட்டிக்கொண்டு வந்த சிசெராவுக்கு வேண்டியது தண்ணீர் தான். ஆனால் யாகேல் தண்ணீருக்கு பதிலாக பால் ஊற்றிக் கொடுப்பதைப் பார்க்கிறோம்.

இந்த சிறிய சங்கதியில் என்ன பெரிதாக இருக்கிறது? என்று நினைக்கலாம்! நம் வீடுகளில் படுக்கப்போகும்போது பால் குடிக்கும் பழக்கம் உண்டு அல்லவா? அதே மாதிரி மரிக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கும் பால் கொடுக்கும் பழக்கம் உண்டு! பால் நித்திரையை வருவிக்கும்! யாகேல் தண்ணீரைக் கேட்ட நாகத்துக்கு பாலைக் கொடுக்கிறாள்!  அவனுக்கு மீளாத நித்திரையைக் கொடுக்க அவள் முடிவு செய்து விட்டாள்!

யாகேலின் வாழ்க்கை நமக்குத் தெளிவான ஒரு சத்தியத்தை விளக்குகிறது! பொல்லாதவன் அவள் கூடாரவாசலை அடைந்தவுடனேயே அவனை ஒழித்துவிட முடிவுகட்டி விட்டாள்.

சிசெராவுக்கு அவளுடைய கூடாரத்தில் இடமில்லை!

நம்மை சிலந்தி வலை போல் பற்றிக் கொண்டிருக்கும் பாவங்கள் யாவுமே நம்முடைய வாழ்க்கை என்னும் கூடாரத்துக்குள் நுழைந்த போது நாம் அழைத்து விருந்து வைத்து,  நம்மோடு தங்க வைத்தவைகள் தான்.

சிசெரா போன்ற பொல்லாங்கனுக்கு நம் கூடாரத்தில் விருந்து வைக்காமல், அவனை நம் வாழ்க்கையை விட்டு ஒரேயடியாக விரட்டும் ஞானத்தை தேவனாகிய கர்த்தர் நமக்கு அருளும்படியாக ஜெபிப்போம்.

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment