கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 1197 ஒரு சிறைக்கைதியை விடுவிப்பது போன்றது மன்னிப்பு!

நியாதிபதிகள்:  11: 39,40 ” இரண்டுமாதம் முடிந்தபின்பு, தன் தகப்பனிடத்திற்குத் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின் படி அவளுக்குச் செய்தான்; அவள் புருஷனை அறியாதிருந்தாள்.

இதினிமித்தம் இஸ்ரவேலின் குமாரத்திகள் வருஷந்தோறும் போய் , நாலு நாள் கீலேயாத்தியனான யெப்தாவின் குமாரத்தியைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமாயிற்று,

நினைப்பதும் , மறப்பதும் என்ற வார்த்தைகள் இரண்டு வல்லமையான காந்தங்களைப் போல நம் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கின்றன அல்லவா? இவைதான் நம் வாழ்வின் தரத்தை அமைப்பவை என்றால் மிகையாது.

இன்றைய வேதாகமப்பகுதி கூறுகிறது, இஸ்ரவேல் மக்கள் வருடந்தோறும் நான்கு நாட்கள் தங்கள் தேசத்தின் குமாரத்தி ஒருத்தியை நினைத்து புலம்புவார்கள் என்று பார்க்கிறோம். அவளை அவர்கள் மறக்க விரும்பவில்லை என்றுத் தெரிகிறது.

மூன்று  வருடங்களுக்கு முன்பு எங்களுடைய வேதாகமக் கல்லூரி நண்பர்களோடு நாற்பது வருட நட்பைக் கொண்டாட பெங்களூரில் கூடினோம்.   கடந்த வருடங்களில் நடந்த அநேக காரியங்களை நினைத்து சிரித்து மகிழ்ந்தோம், மறக்க வேண்டிய காரியங்களும் இருந்தது. ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல நினைக்க வேண்டியவைகளும், மறக்க வேண்டியவைகளும் இருந்தன. சில காரியங்கள் நினைவை விட்டு அழியாமல் இருந்தாலும், சில காரியங்கள் துருப்பிடித்த பூட்டு போல நினைவிலிருந்து மங்கிவிட்டன.

வேதத்தில் தாவீது ராஜா, எதை நினப்பது, எதை மறப்பது என்பதை சங்கீதம்: 25:6,7ல் எவ்வாறு கூறுகிறார் என்று பார்ப்போம்.

கர்த்தாவே உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய காருண்யங்களையும் நினைத்தருளும்,அவைகள் அநாதிகாலமுதல் இருக்கிறதே.

என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்; கர்த்தாவே உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.

தாவீது தேவனாகிய கர்த்தர் தாம் இரக்கமும் கிருபையும் உள்ள தேவன் என்பதை நினைவுகூறும்படி கேட்கிறான். பின்னர் தன்னுடைய கடந்தகால பாவங்களையும், மீறுதல்களையும் நினையாதிருக்கும்படி வேண்டுகிறான்.

கர்த்தருடைய தாசனாகிய தாவீது தேவன் தன்னை மறந்து விட  விரும்பவில்லை, தேவன் தம்முடைய இரக்கத்தாலே அவனுடைய பாவங்களை மறந்துவிட வேண்டும் என்று விரும்பினான். அவனுடைய பாவத்தினால் ஏற்பட்ட பிளவைக் கர்த்தர் மறந்து, குணமான சீரானத் தொடர்பை அவனுடன் கர்த்தர் ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினான்.

நம்முடைய நற்குணங்களையும், நற்செயல்களையும் மட்டும் நினைவுகூறுகிற பரலோகத்தகப்பன் நமக்கு உண்டென்பது , காதுகளுக்கு இனிமையாக உள்ளது அல்லவா! அவருடைய இரக்கங்களும், கிருபையும் அநாதி கால முதல் உள்ளதாலே தான் இது சாத்தியம்!

இதை எழுதும்போது கர்த்தர் எனக்கு நினைவுபடுத்தியது என்னவெனில், தேவன் என் பாவங்களை மன்னித்து மறந்து விடவேண்டும் என்று தாவீதைப்போல விரும்புகிற  நான் , பிறருடைய தவறுகளை மன்னிக்காவிடில்  என்ன பிரயோஜனம் ? என்று.

எதை நினைப்பேன்? எதை மறப்பேன்? தாவீது தேவனிடம் அவருடைய கிருபையின் இரக்கத்தாலே எல்லாவற்றையும் மன்னித்து மறக்கக்  கேட்டதைப் போல், நாமும் மற்றவர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து மறப்போமானால் நம் வாழ்வு எவ்வளவு இனிமையாக இருக்கும்!

மன்னித்து மறப்பது என்பது ஒரு சிறைக்கைதியை விடுவிப்பது போல! அந்த சிறைக்கைதி மன்னிக்காமலும் மறக்காமலும் இருந்த  நீதான் என்பதை அப்பொழுது உணர்ந்து கொள்வாய்!

தேவனே நான் எதை நினைவுகூறவேண்டும், எதை மறக்க வேண்டும் என்ற ஞானத்தை இன்று எனக்குத் தாரும்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment