கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1201 வெறுமையான பாத்திரம் நான்……

நியாதிபதிகள்: 13:2,3  “அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா, அவன் மனைவி பிள்ளை பெறாத மலடியாயிருந்தாள்.

கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ பிள்ளை பெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய்.”

இன்றைய வேதாகமப் பகுதியில் வரும் மலடு என்ற வார்த்தைக்கு பயனின்மை, வறண்டது , தரிசுநிலம், என்ற அர்த்தங்களைப் பார்த்தேன்.

இந்த வார்த்தை பலருடைய வாழ்க்கையில் எவ்வளவு ரணத்தை ஏற்படுத்தியிறது என்பதை அறிவேன். வேதாகமத்தின் காலத்தில் குழந்தையின்மை கடவுளுடைய சாபமாகவே கருதப்பட்டது. பழைய ஏற்பாட்டில் சாராளிலிருந்து, புதிய ஏற்பாட்டின் எலிசெபெத் வரையிலும் மட்டும் அல்ல இந்த நூற்றாண்டு வரையிலும் கூட இது பெண்களுக்கு கொடுமையாகவே உள்ளது.

நாம் வாசிக்கிற இந்த இரண்டு வசனங்களில் இருமுறை பிள்ளை பெறாத மலடு என்ற வார்த்தை கொடுக்கப்பட்டுள்ளதே , அது  அந்த சமூகம் பெண்களை எவ்வளவு தாழ்வாகப் பார்த்தது என்பதைக் காட்டுகிறது.

நாம் மலடு என்ற வார்த்தையை பிள்ளை பெறாத கர்ப்பத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறோம். ஆனால் பிள்ளை பெற்ற ஒரு தாய் தன் இருதயத்தில் மலடாக இருக்கமுடியும், தன் ஆத்துமத்தில் மலடாக இருக்க முடியும்.

மலடு என்ற வார்த்தைக்கு தரிசு நிலம், எதுவுமே விளையாத நிலம் என்ற அர்த்தத்தையும் பார்த்தேன். பயனற்ற வாழ்க்கையும், கனியில்லாத வாழ்க்கையும் கூட மலட்டுத்தன்மை தான்.  என் வாழ்க்கையின் மூலம் யாருக்குமே எந்த  பயனுமில்லை என்று என்றாவது எண்ணியுள்ளாயா? உன் வாழ்க்கை வறண்ட நிலமாக காய்ந்து காணப்படுகிறதா? ஏதோ ஒரு வெறுமை உன்னில் காணப்படுகிறதா? வெறுமையான உன் வாழ்க்கையென்னும் பாத்திரத்தை கர்த்தருடைய கரத்தில் கொடுப்பாயானால், அவர் அதை நிரப்ப ஆயத்தமாக இருக்கிறார்.

ஏசா:35: 2 வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும் என்று வேதம் சொல்கிறது. பயனற்ற வறண்ட நிலம் செழிப்பாக மாறும். வெறுமையாய், காலியாய் இருந்த பாத்திரம் நிரப்பப்படும்!

இதுதான் மனோவாவின் மனைவிக்கு நடந்தது.  கர்த்தருடைய தூதனானவர் அவளுக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி, பிள்ளை பெறாத மலடியான அவள் கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாள் என்று வாக்குக் கொடுத்தார். என்ன அருமை! தரிசு நிலமான , பயனில்லாத உன்னையும் கர்த்தரால் மாற்ற முடியும். உன் வாழ்க்கையில் கர்த்தர் கிரியை செய்யும்படி உன்னை அவர் கரத்தில் ஒப்புக்கொடு!

நாம் ஜெபத்தில் கேட்பது எதுவோ அதைவிட பலமடங்கு அதிகமாக நமக்கு கொடுக்கும்படியாக கர்த்தர் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார்  என்று எஸ்.டி.கோர்டன் அவர்கள் கூறியதை எங்கோ படித்தேன். உன் வனாந்தர வாழ்க்கையை செழிப்பாக்குவதே தேவனுடைய திட்டம்!

உன் வாழ்க்கையின் எந்தப்பகுதி இன்று மலடாக, வறண்டு, வெறுமையாக காணப்படுகிறது?

உன் வெறுமையான பாத்திரத்தை நிரப்பும்படி கர்த்தரிடத்தில் ஒப்புவி! நிரப்பப்படுவாய்! மகிழ்ந்து களிகூறுவாய்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

Leave a comment