கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1836 சந்தேகம் இருளைப் பார்க்கும்! விசுவாசமோ பகலைக் காணும்!

எண்ணா:14:42  ”நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறியஅடிக்கப்படாதபடிக்கு ஏறிப்போகாதிருங்கள்; கர்த்தர் உங்கள் நடுவில் இரார்.”

ஒருமுறை அமெரிக்காவின் பிலடெல்பியாவிலிருந்து நியூ யார்க் வரை ஒரு சிறிய விமானத்தில் பயணம் செய்தோம். அன்று மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த சிறிய விமானம் பயங்கரமாக குதிக்க ஆரம்பித்து விட்டது. உள்ளே இருந்தவர்கள் அலற ஆரம்பித்து விட்டனர். எனக்கு பயத்தில் தொண்டை அடைத்து மூச்சுத் திணற ஆரம்பித்து விட்டது.

சில நேரங்களில் நம் வாழ்க்கையும் மேகமூட்டத்துக்குள்ளாகப் பறக்கும் விமானத்தைப் போன்றதுதான். எல்லாமே தவறாக இயங்குவதுபோல நமக்குத் தோன்றலாம்! ஆனால் நம் ஓட்டுநராகிய இயேசு கிறிஸ்துவை நம்பி, விசுவாசத்தோடு காத்திருந்தால், அவரைப் பின்பற்றுபவர்களை அவர் சரியான பாதையில் பத்திரமாக அழைத்து செல்வார்!

நாம் இஸ்ரவேல் மக்களின் வனாந்தர பயணத்தைத் தொடருவோம்!

இஸ்ரவேல் மக்கள் கானான் தேசத்தின் எல்லையை அடைந்தவுடன், கர்த்தர் அவர்களுக்கு அந்த தேசத்தைக் காண்பித்தார். அதை அவர்கள் சுதந்தரித்துக்கொள்ளப் போவதாக வாக்களித்தார். ஆனால் அங்கு வாழ்ந்து வந்த இராட்சதரைக் கண்டவுடன் அவர்கள் கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிக்காமல், அவர் வழிநடத்துதலை சந்தேகித்து, அவரை அசட்டை பண்ணினார்கள். இந்த வனாந்தரத்திலேயே செத்தால் நலமாயிருக்கும் என்று அழுதார்கள். அதற்கு தண்டனையாக கர்த்தர், அவர்கள் வாய்ச்சொல் பிரகாரமே, அவர்களுக்கு நாற்பது வருட வனாந்தரத்தை கொடுத்தார் என்று பார்த்தோம்.

கர்த்தரின் வழிநடத்துதலை சந்தேகப்பட்ட அவர்கள், வெகுசீக்கிரம் அவருடைய வழிநடத்துதலை மறுதலித்தார்கள். கர்த்தர் தங்களுக்கு அருளிய தண்டனையைக் கேட்டவுடன், நாங்கள் பாவம் செய்தோம், கர்த்தர் சொன்ன அந்தக் கானான் தேசத்துக்குள் நாங்களே போய்விடுவோம், என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையை மீறி தாங்களே கானானுக்குள் போய்விடலாம் என்ற எண்ணத்துடன், அந்த தேசத்தில் வாழ்ந்த பலசாலிகளாகிய கானானியரையும், அமலேக்கியரையும், எதிர்த்து போரிடத் துணிந்தனர்.

 நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறியடிக்கப்படாதபடிக்கு ஏறிப்போகாதிருங்கள்; கர்த்தர் உங்கள் நடுவில் இருக்கமாட்டார், நீங்கள் தோல்வியடைவீர்கள் என்ற மோசேயின் குரல் அவர்கள் செவிகளில் எட்டவேவில்லை.

எங்களுக்கு கர்த்தர் தேவையில்லை, நாங்களே எங்கள் எதிரிகளை பார்த்துக்கொள்ளுகிறோம், எங்கள் வழியை நாங்களே பார்த்துக்கொள்ளுவோம்! என்ற எண்ணத்துடன் அவர்கள் மலையின் மேல் ஏறி எதிரிகளோடு போராடத் தொடங்கினர்.

என்ன நடந்தது? வேதம் சொல்லுகிறது, அமலேக்கியரும், கானானியரும், அவர்களை  முறிய அடித்து ஓட, ஓட துரத்தினார்கள் என்று. என்ன பரிதாபம்! கர்த்தர் தன் பிள்ளைகளுக்கு வெற்றி மேல் வெற்றியைக் கொடுக்கவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார். ஆனால் அவரை நாம் சந்தேகிக்கும்போது வெற்றிக்குப்பதிலாக, தோல்விதான் கிடைக்கிறது.

அவர்கள் கர்த்தருடைய வழிநடத்துதலை சந்தேகப்படாமலிருந்திருந்தால் எவ்வளவு, சந்தோஷத்தோடு, வெற்றிவாகையோடு கானானுக்குள் சென்றிருக்கலாம்! அதற்கு மாறாக, இப்பொழுது எவ்வளவு அவமானம்! வேதனை! தோல்வி!

கர்த்தருடைய பிள்ளைகளே! ஒருவேளை நாம் இஸ்ரவேல் மக்களைப் போல மேகமூட்டங்களுக்குள்ளே பிரயாணம் செய்து கொண்டிருக்கலாம்! நம் மாலுமியாகிய இயேசு கிறிஸ்துவின் மேல் நம்பிக்கையில்லாமல், நம் வாழ்க்கையின் பிரச்சனைகளை நாமே சீர்ப்படுத்திக்கொள்ளலாம் என்று நினைக்கலாம். அது தோல்வியில் தான் முடியும்!

யாரோ ஒருவர் கூறியது நினைவில் வருகிறது!

கர்த்தர் உனக்கு வெளிச்சத்தில் வாக்குத்தத்தம் பண்ணியதை, நீ இருளில்இருக்கும்போது சந்தேகப்படாதேஎன்று.

சந்தேகம் தடைகளைத்தான் பார்க்கும், ஆனால் விசுவாசம் நேரான வழியைப் பார்க்கும்! சந்தேகம் இரவின் இருளைத்தான் பார்க்கும், ஆனால் விசுவாசம் பகலைப் பார்க்கும்! சந்தேகம் ஒரு அடி எடுத்துவைக்க கூட பயப்படும்! ஆனால் விசுவாசம் நம்மை உயரப் பறக்க செய்யும்!

கர்த்தாவே! நான் பிரச்சனைகள் என்ற மேகமூட்டத்துக்குள்ளே பிரயாணம் செய்துகொண்டிருந்தாலும், நீர் எங்கள் ஓட்டுநரானபடியால், உம்முடைய வழிநடத்துதலை விசுவாசித்து, பயமின்றி வாழ்க்கைப் பயணத்தை தொடர பெலன் தாரும் என்று ஜெபிப்போமா!  

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment