கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1969 திருப்தியுள்ள வாழ்வு காத்திருக்கிறது!

ரூத்: 1: 6  “கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் (நகோமி) மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து,

நாம் ரூத் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறோம். அயல் நாட்டில் விதவையாக வாழ்ந்த நகோமி, தன் மருமக்களோடு கூட அப்பத்தின் வீடாகிய பெத்லேகேமுக்கு திரும்பி செல்ல முடிவு செய்தாள் என்று பார்த்தோம்.

பெண்களுக்கு பொதுவாகவே மன தைரியமும், பொறுமையும் அதிகம் என்று நினைப்பவள் நான். புற்று நோய் வந்த வாலிபரை மணக்க முன்வந்த பெண்களைப் பார்த்திருக்கிறேன். எத்தனை மன தைரியம்! கணவரின் ஊழியத்துக்கு பக்க பலமாய் நின்று குடும்ப பாரத்தை சுமக்கும் பெண்கள் உண்டு! பெரிய பொறுப்புகளில் இருக்கும் பெண்களுக்கு எல்லாமே இலகுவாக நடந்து விடுகிறதா என்ன?  எல்லாவற்றையும் பொறுமையாக சகிக்கும் மன தைரியம் பெண்களுக்கு கர்த்தர் கொடுக்கிற கிருபைதான்.

கொஞ்ச நாட்களாக நான் ரூத் புத்தகத்தை திரும்பத் திரும்பப் படித்தேன். இன்று நாம் வாசிக்கிற வசனத்தின் வரிகள் எனக்கு நகோமியின் பொறுமையைத் தான் விளக்கியது.

கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டாள்.  நகோமி மிகக் கடினமான சூழ்நிலையில் மோவாபில் வாழ்ந்து கொண்டிருந்தாலும், அவள்  தன் மனத்தைரியத்தை விடவேயில்லை. தன்னுடைய கர்த்தரின் வழிநடத்துதலுக்காக பொறுமையாகக் காத்திருந்தாள்.

ஒருநாள் தேவனின் மெல்லிய சத்தம் அவள் செவிகளில் பேசி அப்பத்தின் வீடாகிய பெத்லெகேமுக்கு திரும்பும்படி அழைத்ததை உணர்ந்தாள்.

நம் வாழ்வின் கடினமான சூழலை பொறுமையாக சகிப்பது மட்டுமல்ல, அதை மகிமையாக மாற்றிப்போடும் திறமையும் நமக்குத் தேவை! தேவனுடைய மெல்லிய சத்தத்தைக் கேட்கும்படியாய் நம் செவிகள் திறந்திருக்க வேண்டும். தேவனோடு நாம் ஐக்கியம் கொண்டிருந்தால் தானே அவர் நமக்காக கிரியை செய்ய முடியும். நகோமி தேவனுடைய கரம் தன்னை நடத்தும்படியாய் காத்திருந்தாள்.

நாம் கடந்து வரும் பாதையில் உள்ள கற்களையும், முட்களையும் நாம் பொறுமையாக, மனத் தைரியத்தோடு கடந்து வரும்போது, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மை அப்பத்தின் வீட்டில் அவர் நமக்காக ஆயத்தம் பண்ணியிருக்கிற விருந்தை நோக்கி அழைத்து செல்வார் என்பதில் சந்தேகமேயில்லை.

அவர் இன்று உன்னிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான்! நீ கடந்து வரும் வருத்தங்களின் மத்தியில், வேதனைகளின் மத்தியில், வலிகளின் மத்தியில்,  மனம் சோர்ந்து விடாமல் தைரியமாயிரு! பொறுமையாய் இரு!

சந்தோஷத்தையும் திருப்தியையும் அளிக்கும் அப்பத்தின் வீடு உனக்காகக் காத்திருக்கிறது!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

Leave a comment