கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2002 திருப்தியாக வாழக் கற்றுக் கொள்!

1 சாமுவேல்: 1: 2  அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்திபேர் அன்னாள், மற்றவள்பேர்  பெனின்னாள்.

தமிழில் ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்னும் பழமொழி ஒன்று உண்டு.

நம்மில் பலருக்கு அடுத்தவர் வாழ்க்கையைப் பார்த்து பொறாமைப் பட்டே பழக்கம். பக்கத்து வீட்டு கிணற்றில் உள்ளத் தண்ணீரைப்  பார்த்ததும் நம்மில் பலருக்குத் தாகம் எடுக்கும்.

இங்கு தான் நம்முடைய அன்னாளின் வாழ்க்கை ஆரம்பமாகிறது. ஒரு கணவனை மணந்த இரு பெண்கள் ஒரே வீட்டில் வாழ்ந்ததால் எதுவுமே சம நிலையில் அந்தக் குடும்பத்தில் நடைபெறவில்லை.

‘கிருபையும் இரக்கமும் பெற்றவள்’ என்ற பேர் கொண்ட அன்னாள் அங்கு கணவனின் அன்பை சற்று அதிகமாகப் பெற்றிருந்தாள். ஆனால் அவள் அதிகமாக ஆசைப்பட்ட குழந்தை பாக்கியம் இல்லாதது அவளுக்கு மிகப்பெரிய குறையாகவே இருந்தது.

அந்தக் குடும்பத்தில் இருந்த அடுத்த பெண்ணான பெனின்னாள் அவளுடைய பெயரின்  ‘செழிப்பு’ அர்த்தத்துக்கு ஏற்ப  குழந்தை செல்வத்தில் செழித்திருந்தாள். ஆனால் அவள் மிகவும் விரும்பிய தன் கணவனின் அன்பு அவளுக்கு அதிகம் கிடைக்கவில்லை.

நம் கண்களுக்கு அக்கரையில் பச்சையாகத் தெரிபவை பச்சையாகத்தான்  இருக்கும் என்று நிச்சயம் இல்லை. அக்கரையில் போய்ப் பார்க்கும்போது தான் அங்குள்ள குறைகள் யாவும் தெரியும். நாம் பச்சை என்று ஏக்கத்தோடு எண்ணும் யாவும் அங்கே இருக்கலாம் ஆனால் அவை அவர்களின் மனக்குறையை நிவிர்த்தி பண்ணவில்லை என்று நமக்கு அங்கே சென்றால் தான் தெரியும்.

நம்மை சுற்றிலும் உள்ளவர்களைப் பார்த்து நாம் பொறாமைப் படுவதால் என்ன நேரிடும் என்று நாம் இன்னும் சில நாட்கள் தொடர்ந்து படிக்கப்போகிறோம். அவங்க எவ்வளவு சந்தோஷமாக இருக்காங்க , அல்லது அவர்களுடைய திருமண வாழ்க்கை எவ்வளவு ஆனந்தமா இருக்கு,  அவங்க வாழ்க்கை என்னுடைய வாழ்க்கையை விட எவ்வளவோ உயர்ந்திருக்கு என்றெல்லாம் நாம் மற்றவர்களைப் பார்த்து எண்ணுகிறோம். ஆனால் ஒவ்வொரு வாழ்க்கைக்குள்ளும் பல எதிர்நீச்சல் உள்ளன, சவால்கள் உள்ளன!

நாம் அன்னாளைப் போல கிருபையும் இரக்கமும் பெற்றவர்களாக இருக்கலாம், அல்லது பெனினாளைப் போல செழிப்பு உள்ளவர்களாக இருக்கலாம். யாராக இருந்தாலும் நாம் ஒருநாள் நம் வாழ்க்கையில் உள்ள வெறுமையையும் , குறைகளையும் பார்ப்போம்.

பழைய துணிகளை அரிக்கும் பூச்சியைப் பார்த்திருக்கிறிர்களா? அது எங்கிருந்து வருகிறது என்று தெரியாது ஆனால் துணியில் வட்ட வட்டமாக ஓட்டை போட்டு விடும் அப்படித்தான் பொறாமை என்பதும்.

தேவனுடைய பிள்ளைகளே! போதும் என்கிற மனதுடன் நமக்குக் கொடுக்கப்பட்ட வாழ்க்கையை திருப்தியாக வாழக் கற்றுக்கொள்வோம்! உன் கண்களுக்கு மிகவும் குறைவோடு காணப்படும் உன் வாழ்வு அநேகரின் கண்களுக்கு நிறைவாகக் காணப்படலாம் ஏனெனில் அவர்களுக்கு உனக்கு கொடுக்கப்பட்டிருக்கிற சிறிய மன நிம்மதி கூட இல்லாமல் இருக்கலாம்!

திருப்தியாக வாழக் கற்றுக் கொள்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment