கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2115 ஆத்துமா விரும்புவதையெல்லாம் அடைய ஆசை!

2 சாமுவேல்: 3: 21 அப்னேர் தாவீதை நோக்கி: நான் எழுந்துபோய் இஸ்ர்வேலரை எல்லாம் உம்மோடே உடன்படிக்கைபண்ணும்படிக்கு, ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் சேர்த்துக்கொண்டு வருகிறேன். அதினாலே உம் ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்றான்.

இன்றைய வசனத்தை வாசிக்கும்போது அது நம்முடைய அன்றாட வாழ்வில் நமக்கு எதைக் கற்பிக்கிறது என்று சற்று நேரம் சிந்தித்தேன்.  என்னுடைய சொந்த அனுபவங்களுக்காக நான் இன்று கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் நான் விரும்பினது எல்லாமே எனக்கு நிச்சயமாக கிடைத்ததில்லை.  ஆனாலும் சில நேரங்களில் நாம் எதிர்பார்க்காமல் வருகிற சில சந்தோஷம் தான் நமக்கு  மிகவும் திருப்தியளிப்பதாக உள்ளது!

சவுலுடைய சேனையின் தளபதியாகிய அப்னேர் தாவீதைப் பார்த்து உம் ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்பதைப் பார்க்கிறோம்.

அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் மேல் கடும் கோபமூண்டு இருந்தான் என்று நாம் பார்த்தோம். ஏனெனில் அவன் அப்னேரை ஒரு பெண்ணுடன் இணைத்து அவதூறு பேசியிருந்தான். அதற்கு பழிவாங்கவே அவன் இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் தாவீதின் ஆளுகைக்கு உட்படுத்த முயன்றான். அதை இதுவரை வெற்றிகரமாக செய்து கொண்டு வந்தான்.

இந்த நல்ல செய்தியை தாவீதிடம் சொல்ல வந்த அப்னேர், உம் ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்றான். இந்தப் பகுதியில் நான் சேர்க்க வேண்டிய வாசகம் ஒன்றே ஒன்றுதான்! உன் ஆத்துமா எதை விரும்புகிறது என்பதைக் குறித்து ஜாக்கிரதை!

தாவீதின் ஆத்துமா அப்னேரின் வார்த்தைகளை அப்படியே பற்றிக்கொண்டது போலும்! விசேஷமாக பெண்களின் விஷயத்தில்! அவன் விரும்பியதையெல்லாம் அடைய நினைத்தான்! அவனிடம் அதிகாரம் இருந்தது! வல்லமை இருந்தது!  பணம் இருந்தது! அதனால் அவன் தான் எதை விரும்பினானோ அதை அடைய நினைத்தான்!

இது பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு நடந்தது மட்டுமல்ல இன்றும் நடக்கிறது!  இன்றைக்கு மீடியா மூலமாக நாம் பார்க்கிற வாழ்க்கை நமக்கு வேண்டும் என்ற ஆசை!  கிரெடிட் கார்டுகள் கடன் கொடுப்பதால் எல்லாவற்றையும் வாங்க ஆசை! எதைப் பார்க்கிறோமோ அது நமக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஆசை! அம்பானி வீட்டுத் திருமணம் போல நமக்கும் நடக்க ஆசை!!!!!!!

தாவீது தன் வாழ்க்கையை பாழாக்கியபின்னர், தான் பத்சேபாள் விஷயத்தில் தன்னுடைய் இருதயத்தின் வாஞ்சையின் படி நடந்தது என்றோ ஒருநாள் அப்னேர் அவன் இருதயத்தில் விதைத்த விதை அல்ல என்று நன்கு தெளிவாக அறிந்த பின்னர் இப்படியாக எழுதுவதைப் பார்க்கிறோம்,

இதோ நான் துர்க்குணத்தில் உருவானேன், என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்த்தரித்தாள்.

இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர், அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்.

( சங் 51: 5,6)

நம்முடைய தேவனாகிய கர்த்தர் நாம் ஒவ்வொருவரும் உள்ளத்தில் உண்மையுள்ளவர்களாயிருக்க வேண்டுமென்று விரும்புகிறார். அதுமட்டுமல்ல அதற்கான தெய்வீக ஞானத்தையும் நமக்கு அவர் கொடுக்க சித்தமுள்ளவராயிருக்கிறார். 

 கர்த்தருடைய சித்தமில்லாத காரியத்திலும், கர்த்தருக்கு பிரியமில்லாத காரியத்திலும் மனதை அலைய விட வேண்டாம்! அவை உன்னை திருப்தி படுத்த முடியாது! இன்று நீ செய்யும் காலத்தில் பிற்காலத்தில் உன்னை மனக்கிலேசத்தில் கொண்டு போய் விடலாம்! 

உங்கள் சகோதரி

Dr பிரேமாசுந்தர் ராஜ்

Leave a comment