கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2126 திருப்தியாக வாழக் கற்றுக் கொள்!

2 சாமுவேல் 5: 13 அவன் எப்ரோனிலிருந்து வந்தபின்பு, எருசலேமில் இன்னும் அதிகமான மறுமனையாட்டிகளையும், ஸ்திரீகளையும் கொண்டான்.

1 சாமுவேல் 30: 23-24  அதற்கு தாவீது: என் சகோதரரே கர்த்தர் நமக்குத் தந்ததை நீங்கள் இப்படி செய்ய வேண்டாம்…..யுத்தத்திற்கு போனவர்களின்  பங்கு எவ்வளவோ அவ்வளவு ரஸ்துகளண்டையில்  இருந்தவர்களுக்கும் பங்குவீதம் கிடைக்கவேண்டும்; சரிபங்காக பங்கிடவேண்டும் என்றான்.

இன்றைய வேத வசனங்கள் அதிருப்தியையும், மனநிறைவையும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இவை தாவீதின் உள்ளத்தில் மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் காணப்படும் ஒரு தன்மை தான்!

ஒவ்வொருநாளும் என்னுடைய மெயில்பாக்ஸில் நான் இதை அல்லது அதை வாங்கிவிட்டால் என்னுடைய வாழ்க்கையின் தரம் உயரும் என்ற மெயில்கள் பல வந்துகொண்டே இருக்கின்றன! அடுக்குமாடி வீட்டிலிருந்து காலில் போடும் செருப்பு வரை  பலவிதமான அட்வெர்டைஸ்மெண்ட் வந்து நம்முடைய கவனத்தை ஈர்க்கின்றன. ஏதாவது அழகான ஒன்றை பார்த்துவிட்டால் அது இல்லாமல் நாம் வாழவே முடியாது என்று நினைக்கிறோம். நம்முடைய கவனத்தை திருப்பவே முடிகிறதில்லை! நமக்கு இருப்பதைக் கொண்டு திருப்தி அடையாமல் அலையும் மனம்!

பேராசை என்பது இப்படிப்பட்ட பொருட்களை அடைவது மட்டும் அல்ல என்பதை தாவீதின் வாழ்க்கையில் நாம் அதை தெள்ளந்தெளிவாகக் காண்கிறோம்.

ஒரு பெண்ணிடம் திருப்தி அடையாத அவன் ஒவ்வொரு பெண்ணாகத் தன் வாழ்க்கையில் கூட்டிக்கொண்டே இருந்தான். தான் பார்த்த, ரசித்த ஒவ்வொரு பெண்ணும் அவனுடைய மனைவி அல்லது மறுமனையாட்டி என்ற பட்டம் பெற்றார்கள். இதனால் அவன் பெற்ற பயன்? அவனுடைய சொந்தப் பிள்ளைகளின் மத்தியில் பிரச்சனைகளும் வேதனைகளும் தான்!

இந்த அதிருப்தி நிறைந்த தாவீதின் உள்ளத்தில் மிகவும் நிறைவான ஒரு குணமும் இருந்தது. தாவீதுடன் யுத்தத்திற்கு போனவர்கள் அல்லாமல் வீட்டில் இருந்தவர்களுக்கு கொள்ளையில் பங்கு இல்லை என்று அவனுடைய மனிதர் கூறியபோது, அவனோ, கர்த்தரே நமக்கு இவற்றைக் கொடுத்தர், அதை சமமாக எல்லோருக்கும் பங்கிடவேண்டும் என்று கூறுவதைப் பார்க்கிறோம்.  எத்தனை அருமையான குணம்!

நமக்கு குறைவாக கிடைக்கிறதோ அல்லது நிறைவாக கிடைக்கிறதோ அதைப்பற்றிக் கவலைப்படாமல், நமக்குள்ளவற்றைப் பகிர்ந்து கொடுக்கும் குணம்! தனக்குக் கிடைத்ததை திருப்தியாக ஏற்றுக் கொள்ளும் குணம்!

உன்னுடைய வாழ்க்கையில் திருப்தி உண்டா? உன்னுடைய அன்றாட வாழ்வில் காணப்படும் பேராசை என்ன? பொருளா? பணமா? புகழா?

நான் அடிக்கடி வானத்தின் நட்சத்திரங்களைப் பார்ப்பேன். இந்த வானத்தையும் அதில் ஒளிர் விடும் சுடர்களையும் ஆளுகை செய்யும் என் தேவனால் இந்த உலகத்தில் மிகச்சிறிய ஜீவனான இந்த பிரேமாவையும் ஆள முடியும் என்ற எண்ணம் என்னை அதிர வைக்கும்!

நான் ஏன் இந்த உலகத்தின் பொருட்களின் மேல் பேராசை படவேண்டும், அதிருப்தியாக வாழ வேண்டும், என் தேவனாகிய கர்த்தர் அதைவிட விலையுயர்ந்த பொக்கிஷங்களை, ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை எனக்காக வைத்திருக்கும் போது!

திருப்தி ஒரு ஏழையை பணக்காரனாக்கும்! அதிருப்தி ஒரு பணக்காரனை ஏழையாக்கும் என்பதை மறந்துவிடாதே!

 

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment