கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2128 சிட்சையின் மூலம் வரும் ஆசீர்வாதம்!

2 சாமுவேல் 6: 6,7 ….மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி அதைப் பிடித்தான்,

அப்பொழுது கர்த்தருக்கு   ஊசாவின்மேல் கோபம் மூண்டது. அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார். அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான்.

பரிசுத்தமான தேவனைப்பற்றி படித்துக்கொண்டிருக்கிறோம். இன்றைய வேதாகமப் பகுதி நமக்கு மிகவும் முக்கியமான ஒன்று!

யாத்திராகமம் 25 – 30 வரை வாசிப்பீர்களானால் கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியை வைக்கவேண்டிய தேவனுடைய கூடாரத்தை அவர் எப்படியெல்லாம் உருவாக்கச் சொன்னார், அதற்கு எவ்வளவு ஞானத்தை தம்முடைய பிள்ளைகளுக்குக் கொடுத்தார் என்றும் பார்க்கிறோம். அதைப்படிக்கும்போது அந்தப் பெட்டியின் மகிமை நமக்குத் தெரியும்.

ஆனால் இஸ்ரவேலின் வாழ்க்கைச் சக்ககரத்தில் எங்கோ ஒரு இடத்தில், பரிசுத்தமான கர்த்தருடைய பெட்டியின்மேல் இருந்த பயம், மரியாதை குறைந்து விட்டது. கர்த்தர் மோசேயின் மூலமாக இந்த பெட்டியை அவர்கள் எப்படி எடுத்து செல்லவேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் தாவீது இதைப்பற்றி சிந்தித்ததாகவேத் தெரியவில்லை, அதைக் கடைப்பிடிக்கவும் இல்லை.

கர்த்தருடைய பெட்டியை எருசலேமுக்கு கொண்டுவர வேண்டும் என்பது நல்ல எண்ணமாக இருந்தாலும், கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாதது ஊசாவின் மரணத்தில் முடிந்தது என்று இன்றைய வேதாகமப் பகுதியில் பார்க்கிறோம்.

 தாவீதுக்கு எப்படியிருந்திருக்கும்? கர்த்தர்மேல் சற்று வருத்தம் ஏற்பட்டிருக்கும் அல்லவா?

இதைப் படிக்கும்போது, தாவீது செய்த தவறால் கர்த்தர் எப்படி ஊசாவைத் தண்டிக்க முடியும் என்று நாம் நினைக்கலாம். இன்றும் நம்முடைய பாவமும், கீழ்ப்படியாமையும் நம்மை சார்ந்தவர்களை பாதிக்கும் என்பது தெரியுமா?

இன்று நாமும் தாவீதைப் போன்ற சூழலில் இருக்கலாம். நாம் செய்த ஒரு தவறு நம்முடைய குடும்பத்தை அல்லது நண்பர்களை அல்லது சமுதாயத்தை பாதித்திருக்கலாம். இன்று ஒருவேளை நாம்  நம்முடைய கீழ்ப்படியாமையின் விளைவையும், அதனால் கர்த்தர் நம்மை சிட்சிப்பதையும் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கலாம்.

ஆனால் நாளை நாம் இந்த சிட்சையின் மூலம் கர்த்தர் நமக்கு கொண்டு வந்த ஆசீர்வாதத்தை நிச்சயமாகப்  பார்ப்போம்.

யாரோ ஒருவர் எழுதிய விதமாக,

கர்த்தர் இன்று நம்மை நம்முடைய நோயின் மூலம் திருத்தலாம்,

ஏழ்மையின் மூலம் நம்மை ஆத்துமத்தில் பணக்காரராக்கலாம்,  

பெலவீனத்தின்மூலம் பெலசாலிகளாக்கலாம்!

பொறுமையாயிரு!

 

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment