கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2193 வலையில் சிக்கிய உன்னை விடுவிப்பார்!

2 சாமுவேல்: 12:7 அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்

தாவீது சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறான்! இஸ்ரவேலை ஆளும்படி தேவனாகிய கர்த்தரால் நியமிக்கப்பட்ட ராஜா,  அவன் மகா வல்லமையுள்ளவனாய் இருந்தான்!

அன்றைய தினம்,அரண்மனைக்கு  ஒரு விருந்தாளி வந்திருக்கிறார். இந்தமுறை அந்த விருந்தாளி ஒன்றும் தேநீர் குடிக்க வரவில்லை! தேவனுடைய செய்தியோடு வந்திருக்கிறார் அவர்! முதலில் அவர் ஏதோ ஒரு பணக்காரனால் திருடப்பட்ட ஒரு ஆட்டுக்குட்டியின் கதையோடு வந்த மாதிரி இருந்தாலும், சீக்கிரமே அவர் வந்த காரியத்தின் நோக்கம் வெளிப்பட்டுவிட்டது.

தாவீது உச்சகட்ட கோபத்தில் இரக்கமே இல்லாமல் ஏழையின் ஆசைக்கு சொந்தமான ஆட்டுக்குட்டியைத் திருடி சமைத்து விட்ட அந்த பணக்காரன் மேல் மரண தண்டனையை வீசிக் கொண்டிருக்கும்போது அவன் செவிகளில்  தாவீதே நீயே அந்த மனுஷன் என்ற தெளிவான இன்னொரு குரல் கேட்டது,

வேதத்தில் தேவன் தம்முடைய பிள்ளைகளை அணுகப் பலவிதமான வழிமுறைகளை உபயோகப்படுத்துகிறார். இன்று கூட கர்த்தர் என்னிடமும் உங்களிடமும் பேசத்தான் முயற்சி செய்கிறார்.  நாம் வழி விலகிப் போகும்போது நம்மைத் தம்மிடமாய் இழுத்துக்கொள்ள ஆசைப்படுகிறார்.

இந்தப் பகுதியை வாசிக்குக்போது என்னை நான் தாவீதின் இடத்தில் வைத்துப் பார்த்தேன். கர்த்தரின் தீர்க்கதரிசி என்னைப் பார்த்து உரத்த சத்தமாய், நீயே அந்த மனுஷி , இந்தக் கதை உன்னைப்பற்றியதுதான் என்று சொன்னால் நான் எப்படி இருந்திருப்பேன். வெட்கத்தாலும், அவமானத்தாலும் கூனிக் குறுகி எங்காவது ஓளிந்து கொண்டிருப்பேன் என்று நினைக்கிறேன்.ஆதாமும் ஏவாளும் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு ஒளிந்து கொண்டதைப் போல!

அதுமட்டுமல்ல! என் முன்னால் தவறு செய்பவர்களை நான் எப்படி நடத்துவேனோ அப்படியே கர்த்தரும் என்னை நடத்துவார் என்றுதான் நினைத்திருப்பேன்.  என்னைத் தண்டனையோடு ஒதுக்கிவிட்டு, நான் மறுபடியும் அந்தத் தவறை செய்கிறேனா என்று கவனிப்பார் என்றும் நினைத்திருப்பேன்.

நாம் இன்று நடந்து கொள்வதுபோல தான் அன்று தாவீதும் நடந்தான். தன்னுடைய பணத்தாலும், புகழாலும், பதவியாலும் தனக்குத் தானே நன்மை செய்து கொள்ளமுடியும் என்று நினைத்தான். அதன்விளைவாக சிலந்தி வலையில் சிக்கிய பூச்சி போல மாட்டிக்கொண்டான்.

நம்முடைய ஆசைகளும், இச்சைகளும், ஒரு நிமிடத்தில் நாம் அனுபவிக்கத் துடிக்கும் சிற்றின்பங்களும் நம்மை தாவீதைப் போல சிலந்தி வலையில் சிக்கச் செய்கின்றன!  ஆனால் நம்மை அதிலிருந்து தப்புவிக்க நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மை ஒரு நண்பனின் குரலிலோ, ஒரு போதகரின் குரலிலோ, அல்லது நம்மை நேசிக்கும் யார் மூலமாகவோ அழைக்கிறார்.

நாத்தான் தாவீதை அழைத்த சத்தம் தாவீதின் வாழ்வில் ஒரு மாறுதலைத் தந்தது! அவன் மறுபடியும் கர்த்தரின் அன்பை உணரச் செய்தது!

உங்களால் இன்று கர்த்தரின் குரலைக் கேட்க முடிகிறதா? எல்லாம் நன்மைக்கே! அவருக்குக் கீழ்ப்படி! சிக்கிய வலையிலிருந்து விடுதலை கிடைக்கும்! உன் வாழ்க்கை மாறும்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment