கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2195 நீ பெற்றுக் கொண்டது போதாதா?

2 சாமுவேல் 12:7  ….இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னை சவுலின் கைக்கு தப்புவித்து, உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கையளித்தேன். இது போதாதிருந்தால் இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன்.

நாத்தான் தீர்க்கதரிசி தாவீதின் முன்னால் நின்று  ஒரு ஐசுவரியவான் ஒரு ஏழையினுடைய ஆட்டுக்குட்டியைத் திருடி சமைத்த கதையைக் கூறியது மட்டுமல்லாமல், தாவீது கோபத்தால் கொதித்தவுடன், நீயே அந்த மனுஷன் என்று கூறியதையும் பார்த்தோம்.

உண்மையில் பார்த்தால் ராஜாவாகிய தாவீதைப் பார்த்து நாத்தான் கூறிய அந்த இரண்டு வார்த்தைகள் போதும் அவன் நாத்தானின் தலையை வாங்கும்படி உத்தரவு கொடுக்க!

அங்கு நாத்தான் சிறு பயமும் இல்லாமல் கர்த்தர் தனக்கு கொடுத்த செய்தியைத் தொடருவதைப் பார்க்கிறோம்.

நாத்தான் தாவீதுக்கு தேவனாகிய கர்த்தரே அவனை இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் ராஜாவாக்கியதை நினைவூட்டுகிறான். தாவீது ஒன்றும் தானாய் இந்த சிங்காசனத்துக்கு வரவில்லை. எங்கோ ஒரு இடத்தில் தன்னுடைய இளமையும், அழகும், வீரமும் தன்னை இந்தப் பதவிக்குக் கொண்டு வந்ததாக தாவீது ஒருவேளை தன் மனதில் நினைத்திருக்கலாம். ஆதலால் நாத்தான் அவனுக்கு சற்றும் தாமதிக்காமல் கர்த்தரே உன்னை ராஜாவாக உயர்த்தினார் என்று ஞாபகப்படுத்துகிறான்.

அதுமட்டுமல்ல தாவீதுக்கு சொந்தமான யாவும், அவனுடைய குடும்பம் கூட கர்த்தர் அவனுக்கு பரிசாக அளித்ததுதான்.

நாத்தான் இதைக் கூறிய பின்னர், என்னை உடம்பு ச்லிர்க்க வைத்த ஒரு வாக்கியத்தையும் கூறுகிறார்.  ஒருவேளை தாவீது தனக்குக் கர்த்தர் கொடுத்ததுபோதாது, தனக்கு இன்னும் வேண்டும் நினைத்திருந்தால்  இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன் என்று கர்த்தர் கூறியதாகவும் நாத்தான் உரைக்கிறான்.

வேதத்தை வாசிக்கும்போது எத்தனைமுறை நாம் அதில் புதைந்திருக்கும் முத்துகளை கவனிக்காமல் விட்டு விடுகிறோம். அப்படிப்பட்ட ஒரு முத்து தான் இந்த வரியும்  இது போதாதிருந்தால் இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன்.

தாவீதின் பரலோக தேவன் அவன் கேட்டதை அருள சித்தம் கொண்டிருந்தார். ஆனால் அவன் எப்படி தன்னுடைய ஊழியனின் மனிவியாகிய பத்சேபாளைக் கேட்டிருக்க முடியும்? அதனால் தான் தாவீது தன்னுடைய அதிகாரத்தை உபயோகப்படுத்தி பத்சேபாளை அடைந்து விட்டான். ஆனால் இந்தத் தருணத்தில் நாத்தான் அவன்முன்னால் வந்து கர்த்தருக்கு அவன் செய்த எல்லா செயலும் தெரியும் என்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறான். அவன் பெற்ற யாவுமே கர்த்தருடைய பரிசு என்பதையும், உனக்கு போதாதிருந்தால் என்னை ஏன் கேட்கவில்லை என்றும் கர்த்தர் கேட்பதாகக் கூறுகிறான்.

அதே கர்த்தர் இன்று உன்னையும் என்னையும் பார்த்து கூறுகிறார்,

இது போதாதிருந்தால் இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன் என்று. நம்முடைய தேவன் நமக்கு சகலத்தையும் அருள வல்லவர்!

 நாம் வேண்டிக்கொள்வதற்கும், நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு  (எபே 3:20)

என்று பவுல் எழுதியது நமக்கு  மறந்து விட்டதா?  கர்த்தருடைய சமுகத்தில் உங்களுடைய குறைகளை எடுத்துச் செல்லுங்கள். கர்த்தர் எல்லா குறைகளையும் தீர்க்க வல்லவர்.

ஆனால் நம்முடைய சுய முயற்சியில் தவறான எதையும் அடைய மட்டும் நினைக்க வேண்டாம்! 

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment