கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2204 ஒருநாள் நிச்சயமாக புரிந்து கொள்வாய்!

 2 சாமுவேல் 12: 16,18  அப்பொழுது தாவீது அந்தப் பிள்ளைக்காகத் தேவனிடத்தில் பிரார்த்தனைப்பண்ணி, உபவாசித்து, உள்ளே போய் இராமுழுதும் தரையிலே கிடந்தான்.

ஏழாம்நாளில் பிள்ளை செத்துப்போயிற்று.

கேட்கப்படாத ஜெபம் உங்கள் வாழ்க்கையில் உண்டா? எனக்கு உண்டு!

1977 ல் என்னுடைய அம்மா  நோய்வாய்ப்பட்டு படுத்திருக்கும்போது நானும் தாவீதைப்போலத்தான் அழுது, உபவாசம் பண்ணி, தரையில் விழுந்து கிடந்து ஜெபித்தேன். அப்பொழுது அம்மாவிற்க்கு 42 வயதுதான். கர்த்தர் என்னுடைய ஜெபத்தை நிச்சயம் கேட்பார் என்று வாலிப பிராயத்தில் இருந்த நான் விசுவாசத்தோடு இருந்தேன்.அந்த நாட்களில் கர்த்தரோடு அதிகமாக நெருங்கி இருந்த நான் பலருடைய தேவைகளுக்காக ஜெபித்திருக்கிறேன், பதிலும் பெற்றிருக்கிறேன்.  ஆனால் நான் அதிகமாக கெஞ்சிய ஒரே காரியம் அம்மாவுக்காகத்தான்,  அந்த என் ஜெபம் கேட்கப்படவேவில்லை! அதன் பின் 47 வருடங்கள் உருண்டோடி விட்டன! ஆனால் அம்மாவை இழந்தது என்னால் இன்றும் மறக்க முடியாத ஒரு சோகம் தான்!

கர்த்தர் நம்முடைய ஜெபத்துக்கு ஆம், இல்லை, காத்திரு என்று மூன்று விதமாக பதில் அளிப்பார் என்று நமக்குத் தெரியும். ஆனால் நம்முடைய எல்லா ஜெபத்துக்கும் ஆம் என்ற பதில் வர  வேண்டும் என்று நம் எல்லோருக்கும் ஆசை அல்லவா? நாம் விரும்பிய அல்லது எதிர்பார்த்த பதிலைத் தேவன் கொடுக்க வேண்டும் என்பதே நாம் ஜெபிப்பதின் நோக்கம்! கர்த்தர் இல்லை என பதில் கொடுத்தார் நமக்கு ஏற்றுக்கொள்ள எவ்வளவு கடினமாயிருக்கிறது!  காத்திரு என்றால் காத்திருக்க பொறுமை இல்லை!

நாத்தான் உன்னுடைய பிள்ளை சாகும் என்று சொல்லிய பின்பும் தாவீது அந்தப்பிள்ளைக்காக உபவாசித்து ஜெபிப்பதைப் பார்க்கிறோம்.  தாவீது மட்டும் அல்ல! பத்சேபாளும் ஜெபித்துக் கொண்டிருந்திருப்பாள் என்று நிச்சயமாக நம்புகிறேன். அவளது பிள்ளை சாகும் என்ற தீர்ப்பு அவள் உள்ளத்தை சுக்கு நூறாக்கியிருக்கும். ஆனால் தாவீதும் பத்சேபாளும் விரும்பிய விதமாக இந்த ஜெபத்துக்கு பதில் கிடைக்கவில்லை.

நம்முடைய ஜெபத்துக்கு பதில் கிடைக்காதபோது நான் சரியானதைத்தானே கேட்டேன், நான் ஒன்றும் தவறாகக் கேட்கவில்லையே? உம்மால் முடியும் என்று விசுவாசித்ததால்தானேக் கேட்டேன் என்றெல்லாம் என்னைப்போல நீங்களும் புலம்பியிருக்கலாம்! ஆனால் நம்முடைய தேவனாகியக் கர்த்தர் நம்முடைய தேவைகளைப் பரலோகத்தின் கோணத்திலிருந்து பார்க்கிறார் என்பது அப்பொழுது நமக்குப் புரியாத ஒன்று.

நான் என்னுடைய வாழ்நாட்கள் முவதும் அவரையே நேசிக்கவும், அவரையே சார்ந்து வாழவும் எனக்கானத் திட்டங்களை வகுக்கிறார். இன்று எனக்கு அவர் என்னைக் கைவிட்டு விட்டதுபோலவும், என் ஜெபத்துக்கு செவி சாய்க்காதது போலவும் தோன்றும் ஒரு காரியம் நாளை என்னுடைய பரலோக வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையலாம்!

இன்று உன் ஜெபத்துக்கு பதில் வராமல் இருக்கிறதா? கலங்காதே? அன்பே உருவான உன் தேவன் அமைதியாய் இருப்பதுபோலத் தோன்றினாலும் அவர் உனக்கு நன்மையானதை செய்யும்படி கிரியை செய்து கொண்டிருக்கிறார்!

அதைப்புரிந்து கொள்ளும் நாளிலே உன் உள்ளம் அவரை ஸ்தோத்தரிக்கும்!

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment