கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2207 கண்ணின் பனித்துளியில் உதிக்கும் வானவில்!

2 சாமுவேல் 12: 14  உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய்ச் சாகும்.

நாம் என்றைக்காவது கடவுளிடம் நம்முடைய வேதனை, கண்ணீர், மனக்குளைச்சல் இவற்றைப்பற்றி நேரிடையாக பேச முடியும் என்று நினைக்கிறீர்களா? முடியாது என்று நினைத்தால் எரேமியா தீர்க்கதரிசியின் வார்த்தைகளைப் பாருங்கள்!

கர்த்தாவே உம்மோடே நான் வழக்காடப்போனால் தேவரீர் நீதியுள்ளவராமே, ஆகிலும் உம்முடைய நியாங்களைக் குறித்து உம்மோடே நான் பேசும்படி வேண்டுகிறேன். ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகஞ்செய்துவருகிற அனைவரும் சுகித்திருக்கிறதென்ன? (எரே12:1)

இந்த மனிதனின் துணிச்சல் எனக்கு மிகவும் பிடிக்கும்! எனக்கு அந்தத் துணிச்சல் ஒரு துளி கிடைத்தால் எரேமியா கேட்ட கேள்விக்கு மேல் ஏன் குற்றமற்றவர் பழியை சுமக்கிறார்கள் என்பதையும் சேர்த்து விடுவேன்.

தாவீது பத்சேபாள் என்ற இருவரின் பாவத்தால் ஒரு குற்றமற்ற குழந்தை இறந்து போயிற்று. அந்தக் குழந்தையைக் கர்த்தர் அடித்தார் என்பதையும், அந்த வேதனையை அது அனுபவித்தது என்ற உண்மையையும் மறைக்க முடியாது. குழந்தையை பெற்று வளர்த்த நம்மாலும் இதை ஏற்றுக்கொள்ளக் கஷ்டமாகத்தானே இருக்கிறது!

இந்தக் குழந்தையின் வேதனை யாருடைய கீழ்ப்படியாமையால் வந்தது? பல நேரங்களில் அப்பாவிகள்தான் எவரோ செய்த பாவத்தின் தண்டனையை அனுபவிக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை!

ஆனால் சிறிது நேரம் தாவீதின் வாழ்க்கையைப் படித்தபோது தேவனுடைய நியாயத்தீர்ப்பு  தவறாகாது என்றுதான் புரிந்தது. ஒருவேளை அந்தக்குழந்தை உயிருடன் இருந்திருந்தால், அந்த அரண்மனையில் அந்தக் குழந்தை எப்படி இருந்திருக்கும்? தாவீதின் அரண்மனையில் வாழ்ந்தவர்கள் அதை எப்படி நடத்தியிருப்பார்கள். நாத்தான் தீர்க்கதரிசி தாவீதின் பாவத்தின் பலனாக நடக்கும் என்று சொல்லிய காரியங்கள் நிறைவேறியபோது அந்தக் குழந்தை அந்த அரண்மனையில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?  அந்தக் குழந்தை அங்கு நிம்மதியாகவே இருந்திருக்க முடியாது!

பத்சேபாளின் குழந்தை மரித்ததால் அது குற்றவாளியாகத் தீர்க்கப்படவில்லை! நம்முடைய கண்களுக்கு அநியாயமாய்த் தோன்றினாலும் பரலோக தேவனின் கண்களுக்கு அதில் ஒரு நியாயம் தென்பட்டது. உரியாவின் மனைவியாகிய பத்சேபாளுக்கு தாவீதின் மூலம் பிறந்த பிள்ளை என்ற அவச்சொல்லை வாழ்நாள் முழுதும் ஏற்று அவமானத்தில் கூனி நிற்க வேண்டாம் என்று கர்த்தர் சீக்கிரம் எடுத்துக்கொண்டாரோ என்னவோ?

இன்று நாம் எரேமியாவைப் போன்ற கேள்வியோடு வாழ்ந்து கொண்டிருக்கலாம்! கர்த்தர் எரேமியவைப் பார்த்து கோபப்படவில்லை. ஏனெனில் கர்த்தர் கிரியை செய்வது இன்று நம் கண்களில் புலப்படாமல் இருக்கலாம் ஆனால் ஒருநாள் அதின் முழு அர்த்தமும் நமக்கு  விளங்கும்!  

இன்று அவருடைய பிள்ளைகள் அனுபவிக்கும் எல்லாத் துன்பங்களும் அவர்களை கர்த்தரிடம் நெருங்கச் செய்யத்தான். இன்று நமக்கு அநீதியாய்க் காணப்படும் காரியம் பரலோக தேவன் பார்க்கும் கோணத்தில் வானவில்லாய்த் தோன்றலாம் அல்லவா?

நம்முடைய கண்களில் கண்ணீர் இல்லாவிடில் நம்முடைய ஆத்துமாவில் வானவில் எப்படி ஏற்படும்? சிந்தியுங்கள்! ஜெபியுங்கள்!

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment