கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2228 உம்மை மட்டுமே நேசிக்கும் உள்ளம் வேண்டும்!

2 சாமுவேல் 15: 4-6  பின்னும் அப்சலோம்: வழக்கு வியாஜ்யமுள்ளவர்கள் எல்லோரும் என்னிடத்தில் வந்து நான் அவர்களுக்கு நியாயம் செய்யும்படிக்கு என்னைத் தேசத்திலே நியாதிபதியாக வைத்தால் நலமாயிருக்கும் என்பான். எவனாவது ஒருவன் அவனை வணங்க வரும்போது அவன் தன் கையை நீட்டி அவனைத்தழுவி முத்தஞ்செய்வான். இந்தப்பிரகாரமாக அப்சலோம் ராஜாவினிடத்தில் நியாத்திற்காக வரும் இஸ்ரவேலருக்கெல்லாம் செய்து, இஸ்ரவேல்  மனிதருடைய இருதயத்தைக் கவர்ந்து கொண்டான்.

பரலோக தேவன் நமக்கு அருளியிருக்கும் நன்மையான வாழ்வு என்ன என்று நாம் தாவீதின் வாழ்க்கையிலிருந்து ஒவ்வொருநாளும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

தாவீது ராஜாவின் தரமில்லாத நடத்தையால் உரியாவின் மனைவியைத் தனக்கு சொந்தமாக்கியது மட்டுமல்லாமல், உரியாவைக் கொலை செய்த காரியம் அரண்மனைக்கு வெளியே மட்டுமல்ல அரண்மனைக்கு உள்ளும் எல்லோராலும் அறியப்பட்டிருந்தது. இந்தக் காரியம் அவனுடைய பிள்ளைகளை எவ்வாறு பாதித்திருந்தது என்பதை அவர்களுடைய நடத்தையிலிருந்து பார்க்கிறோம்.  தான் நினைத்த எதையும் அடையலாம் என்ற எண்ணத்தில் தன் சொந்த சகோதரியை கற்பழித்த அம்னோன், விருந்துக்கு அழைத்து சகோதரனாகிய அம்னோனை கொலை செய்த அப்சலோம் என்று தாவீதின் பிள்ளைகள் செய்த காரியம் அவன் தகப்பனின் நடத்தையின் பிரதிபலிப்புதானே!

இன்றைய வேதாகமப்பகுதியில் அப்சலோம் இஸ்ரவேல் மக்களிடம் நாவுக்கினிய வார்த்தைகளைப் பேசி அவர்களைத் தன் வசப்படுத்துவதைப் பார்க்கிறோம். வேதம் அப்சலோம் மிகவும் சௌந்தரியமானவன் என்று நமக்கு சொல்கிறது. நல்ல உயரம்! நல்ல முகக் களை! அனைவரையும் திரும்பிப்பார்க்க வைக்கும் உருவம்!

அதுமட்டுமல்ல! அவன் மக்களை மகிழ வைக்கும் திறமை வாய்ந்தவன்!  ஒவ்வொருநாளும் அவன் பட்டணத்து வாசலில் உட்கார்ந்து மக்களை சந்தித்து, ராஜாவிடம் நியாயம் கேட்டு வந்தவர்களை அவனே நியாயம் தீர்த்து மக்களைத் தன் வசப்படுத்திக் கொண்டான். அந்த வேளையில், என்னை இந்த தேசத்து நியாதிபதியாக்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஜனங்களின் மனதில் வேறுபாடு கொண்டுவரும் விதையை விதைத்தான்.

உங்கள் துக்கம் என்னுடைய துக்கம்! ராஜாவுக்கு உங்கள் துக்கத்தை விசாரிக்க எங்கே சமயம் இருக்கிறது? நான் ஆடுகள் மயிர் கத்தரிக்கும் விருந்துக்கு அழைத்தபோது அதற்கு வரக்கூட ராஜாவுக்கு நேரம் இல்லை! உங்களுக்கு எப்படி நேரம் கொடுப்பார்? நானும் உங்களைப்போலத்தான்! அதனால் உங்கள் துக்கத்தை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்! என்று நாவில் தேன் சொட்ட சொட்ட பேசியிருப்பான்.

அவன் செய்த இந்தக் காரியத்தை ‘ ஆடுகளைத் திருடுதல்’ என்று சொல்லலாமே! இரகசியமாக அவன் ராஜாவுக்கு சொந்தமான ஆடுகளைத் திருடிக் கொண்டிருந்தான்.  வெகு சீக்கிரமே இஸ்ரவேல் மக்கள் அப்சலோமின் வலையில் விழ ஆரம்பித்தனர்.

இவையெல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்ததால்தானோ என்னவோ சாலொமோன் தான் எழுதிய நீதிமொழிகளில் இவ்வாறு எழுதுகிறான்,

பிறனுக்கு முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான். துஷ்டனுடைய துரோகத்திலே கண்ணியிருக்கிறது.. ( நீதி: 29:5,6) என்று

எதை அறிய வேண்டுமோ அதைமட்டும் அறியும் அறிவு!

எதை நேசிக்க வேண்டுமோ அதை மட்டும் நேசிக்கும் மனது!

தேவனை மட்டுமே புகழும், துதிக்கும் நாவு!

எல்லாவற்றுக்கும் மேலாக தேவனை மட்டுமே பிரியப்படுத்தும் உள்ளம்!

இவையே நமக்கு நன்மையான வாழ்வை அமைத்துத் தரும்!  இதனையே நாம் ஒவ்வொருநாளும் பெற கர்த்தராகிய இயேசு நமக்கு உதவி செய்வாராக!

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment