கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 7 இதழ்: 578 ஒருவருக்குத்தான் இடம் உண்டு!

1 சாமுவேல் 5: 4 அவர்கள் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்த போது, இதோ தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துக்கிடந்ததுமல்லாமல், தாகோனின் தலையும் அதின் இரண்டு கைகளும் வாசற்படியின்மேல் உடைபட்டுக் கிடந்தது; தாகோனுக்கு உடல் மாத்திரம் மீதியாயிருந்தது.

பெலிஸ்தர் மிகுந்த ஆர்ப்பரிப்போடு இருந்தனர். இஸ்ரவேல் மக்களை யுத்தத்தில் தோற்கடித்தது மட்டுமல்ல, திரும்பும்போது ஒரு பெரிய பதக்கம் கிடைத்தது போல கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியும் கிடைத்தது. அதைக் கொண்டு போய் தாகோனின் கோவிலிலே, தாகோனண்டையிலே வைத்தார்கள். எவ்வளவு பெரிய சாதனை! கொண்டாட வேண்டாமா! உங்கள் கடவுளுக்கு பெலனில்லை, பாருங்கள் யார் பெரியவர் என்று இஸ்ரவேலரை ஏளனம் செய்ய வேண்டாமா!

தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படியாமல், அவரையும் அவருடைய உடன் படிக்கைப் பெட்டியையும் மின் சாதனம் போல உபயோகப்படுத்தின இஸ்ரவேல் மக்களுக்கு இதுவும், இதற்கு மேலும் தேவை தான்! ஆனால் கர்த்தருடைய நாமம் அல்லவா அவதூறுக்குள்ளாகிறது! நாம் கூட எத்தனை முறை கர்த்தரையும், அவருடைய கிருபையையும் நம்முடைய சுயாதீனத்துக்காக உபயோகப்படுத்தி கர்த்தருடைய நாமத்தை அவதூறுக்குள்ளாக்குகிறோம். அப்படிப்பட்ட வேளைகளில் நமக்கும் மரியாதை இல்லை! கர்த்தரும் அவமதிக்கப்படுகிறார் அல்லவா!

மறுநாள் காலையிலே அஸ்தோத் ஊரார் வந்த போது, இதோ தாகோன் தலைக்குப்புற கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக விழுந்து கிடந்தது, உடனே தாகோனை எடுத்து மறுபடியும் அதின் ஸ்தானத்திலே வைத்து விட்டு சென்று விட்டார்கள். மறுபடியும் மறுநாள் காலையிலே அவர்கள் வந்தபோது, அந்தோ பரிதாபம்! தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துக்கிடந்ததுமல்லாமல், தாகோனின் தலையும் அதின் இரண்டு கைகளும் வாசற்படியின்மேல் உடைபட்டுக் கிடந்தது!தாகோன் இருக்கும் இடத்தில் நானும் இருப்பதா என்று அவனை கீழே தட்டி, கர்த்தர் அவன் தலையையும், கையையும் வாங்கி விட்டார்!

நம்மில் எத்தனைபேர் நம் வாழ்க்கையில் தாகோனையும், கர்த்தராகிய தேவனையும் ஒரே இடத்தில் வைக்க முயற்சி செய்கிறோம்?எத்தனை முறை பெலிஸ்தர் போன்ற தேவனை அறியாதவர்கள் நம்மைப் பார்த்து, நம்முடைய பெலவீனத்தைப் பார்த்து கைகொட்டி சிரிக்கும் நிலையில் நாம் வாழ்கிறோம்? தாகோனுக்கு வல்லமை அதிகம் என்று எண்ணி அவனுக்கு முதலிடம் கொடுப்பதில்லையா?

ஆனால் கர்த்தர் நம்மை நோக்கி, உன் வாழ்க்கையில் ஒருவருக்கே இடமுண்டு! எனக்கு இடம் கொடு, நான் தாகோனை கிழே தள்ளி அவன் தலையை நசுக்கி விடுவேன் என்று வாக்களிக்கிறார்!

தேவனுடைய வல்லமையால் தலை நசுக்கப்பட வேண்டிய தாகோன் இன்று உன் வாழ்க்கையில் உண்டா? உன்னை அடக்கி ஆளுகை செய்கிற தாகோனை கர்த்தரிடம் ஒப்புவி! அவர் பார்த்துக் கொள்வார்! அவர் மகா வல்லமையுள்ள தேவன்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment