கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 815 பிறரை உபயோகப்படுத்தும் சுயநலம்!

ஆதி:  38:16 “( யூதா ) அந்தவழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடம் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி எனக்கு என்ன தருவீர் என்றாள்.

தாமார் தன் கைம்பெண் வேஷத்தை கலைத்து தன்னை வேசியைப்போல அலங்கரித்து, முக்காடிட்டு, திம்னாவுக்கு போகிற வழியில் நீருற்றண்டையில் அமர்ந்தாள் என்று பார்த்தோம்.

ஆடுகளுக்கு மயிர்கத்தரிக்கும் காலம் அது,  ஆதலால் யூதா தன் சிநேகிதனுடன் சேர்ந்து தன் மந்தையை மயிர்கத்தரிப்பதர்காக திம்னாவுக்கு அழைத்து சென்றான்.

யூதாவின் மனைவி சூவா இறந்து சில காலமே ஆகியிருந்தது. மனைவியில்லாத அவனுக்கு பெண் சுகம் தேவைப்பட்டது. அந்த காலத்தில், வேலை சம்பந்தமாக, சொந்த ஊரை விட்டு சென்றவர்கள் வேசியிடம் தங்கள் தேவையை நிவிர்த்தி செய்வது, ஒன்றும் புதிதான காரியம் அல்ல என்று வேதாகம வல்லுனர்கள் கூறுகின்றனர். அப்படிப்பட்ட செயல் இன்றைய சமுதாயத்தில்  கூட புதிதான காரியம் அல்ல என்பது தான் வருந்தத்தக்க விஷயம்.

யூதா தன் இச்சையை பூர்த்தி செய்ய ஏதாவது ஒரு பெண் கிடைப்பாளா என்ற தேடினான் என்று பார்க்கிறோம். இன்றைய நமது சமுதாயத்தில், தங்களுடைய வேலை ஸ்தலத்தில் கூட தங்கள் ஆசையை நிறைவேற்ற யாராவது பெண்கள் கிடைப்பார்களா என்று ஆண்களும், எவனாவது கிடைத்தால் அவனை கைக்குள் வைத்துக்கொண்டு, அவன் மூலம் தங்கள் காரியத்தை சாதிக்கலாம் என்று பெண்களும் அலைவதில்லையா? நம்மில் யாராவது இப்படி ஒரு பெண்ணினால் அல்லது ஒரு ஆணினால் அவர்களது சுயநலத்துக்காக  உபயோகப்படுத்தப் பட்டிருப்போமோனால், இந்த வலியின் கொடுமை நமக்கு தெரியும்!

யூதாவுடைய மாமிச இச்சை, அவன் கண்களை மூட, அவன் முக்காடிட்ட ஒரு வேசியைப் பார்த்தானேயொழிய, தன் வீட்டில் மகளாய் வாழ்ந்த தன் மருமகளைக் காணவில்லை. முக்காடிட்டிருந்த பெண்ணை வேசி என்று எண்ணினான். வெளிப்புற தோற்றம் அவனை அவள் வேசி என்று நம்ப வைத்தது.

தேவனுடைய பிள்ளைகளே, நாம்  எத்தனை முறை யூதாவைப் போல நம் வாழ்வில் இப்படி தவறான முடிவுகள் எடுத்திருக்கிறோம்? நான், எனக்கு, என்ற சுயநல ஆசைகள் நம் உள்ளத்தை நிரப்பும் போது, நம் கண்கள் மங்கிப் போகின்றன. நாம் யாரை ஏமாற்றி நம் தேவையை பூர்த்தி செய்யலாம் அல்லது காரியத்தை சாதிக்கலாம் என்று நினைப்போமே தவிற, அதனால் பாதிக்கப்பட போகிறவர்களைப் பற்றி சிறிது கூட நினைப்பதில்லை.

யூதா அவளை தன் இச்சைக்கு உபயோகப்படுத்த விரும்பினானே தவிர,  அவளுக்கு கொடுக்க அவன் கரத்தில் ஒன்றுமே இல்லை. வெறும் கையுள்ளவனாய் இப்பொழுது என்னிடத்தில் சேரு, பின்னர் உனக்கு ஒரு வெள்ளாடுக்குட்டியைத் தருகிறேன் என்று பேரம் பேசுவதைப் பார்க்கிறோம். என்ன வருத்தத்துக்குரிய காரியம்! நாம் மற்றவர்களை உபயோகப்படுத்தும்போது நம் தேவைகள் தான் நம் கண்ணில் படுகிறதே தவிர, மற்றவர்களுடைய தேவைகள் நம் கண்ணில் படுவதில்லை!

பிலிப்: 2:3.4 ல் பவுல் கூறுகிறார், “ ஒன்றையும் வாதினாலாவது, வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.

 நாம் ஒவ்வொருவரும் பிறரை மதிக்கவும், பிறரை நம்மைவிட மேன்மையானவர்களாக நடத்தவும்  கற்றுக்கொண்டால் , இன்றைய சமுதாயத்தில் , தாமாரைப் போல  ஒருவரும் , ஏமாற்றப்படுதல், உபயோகப்படுத்தபடுதல் , என்ற வேதனையையும், வலியையும் மறைத்து முக்காடிட்டு அமர்ந்திருக்க வேண்டியதில்லை!

சுயநலம் என்பது நாம் விரும்பிய விதமாய் வாழ்வது அல்ல! மற்றவர்களை நாம் விரும்பிய விதமாய் உபயோகப்படுத்துவதுதான்!

 இன்று உன்னுடைய சுயநலம்  யாருடைய வாழ்க்கையையாவது பாதித்திருக்கிறதா?

ஜெபம்: ஆண்டவரே! என்னை சுற்றயுள்ளவர்களை மதித்து, அவர்களை அன்போடும் பண்போடும் நடத்த எனக்கு உதவி தாரும். யாரையும் என் சுய நலத்துக்கு பணயமாக்காமல் வாழ கிருபை தாரும். ஆமென்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

Leave a comment