கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 818 யாரும் இல்லாத தனிமையில்???

ஆதி:  39:14 – 15 “ அவள் தன் வீட்டு மனிதரைக் கூப்பிட்டு: பாருங்கள், எபிரேய மனுஷன் நம்மிடம் சரசம்பண்ணும்படிக்கு அவனை நமக்குள் கொண்டுவந்தார், அவன் என்னோடே சயனிக்கும்படி என்னிடத்தில் வந்தான்; நான் மிகுந்த சத்தமிட்டு கூப்பிட்டேன்,

நான் சத்தமிட்டு கூப்பிடுகிறதை அவன் கண்டு, தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு வெளியே ஓடிப்போய்விட்டான் என்றாள்

 போத்திபாரின் மனைவி யோசேப்பின் மேல் கண்ணைப் போட்டு வலை வீசினாள் என்று நேற்று பார்த்தோம்!

அவனது சௌந்தர்யம், இளமை, திறமை, இவை அவளை காந்தம் போல கவர்ந்தன! வீட்டின் பொறுப்புகளை திறமையாக கவனித்த அவனை பல நாட்கள் கண்களால் வலை வீசியிருப்பாள்! அவன் அந்த வலையில் விழாததே அவன் மீது அதிக தாபத்தை கொடுத்திருக்கும். பெண்களுக்கு எப்பொழுதுமே கிடைக்காததை அடைய ஆசைதான். அதுவும் பணக்காரியான போத்திபாரின் மனைவிக்கு ‘கிடைக்காதது’ என்றதே அகராதியில் இல்லை!

வேதம் கூறுகிறது (ஆதி:39:11), ஒருநாள் அவன் தன் வேலையை செய்வதற்கு வீட்டுக்குள் போனான், வீட்டு  மனிதரில் ஒருவரும் வீட்டில் இல்லை என்று.

அழகிய மாளிகை,  யாரும் இல்லாத தனிமை, அருகே ஒரு சௌந்தர்யமுள்ள வாலிபன்!……… ஒரு நிமிடம்! நமக்கு எதை இது நினைவுட்டுகிறது?

ஏதேன் தோட்டத்தில் ஏவாள் தனிமையில் உலாத்தியதல்லவா? வேதம் கூறுகிறது, அவள் தனிமையில் இருந்தபோது, யாரும் பார்க்காத வேளையில் சர்ப்பம் அவளை வஞ்சித்தது என்று.

இன்றுகூட நாம் தனிமையில் இருக்கும்போது தான், சாத்தான் நம்மை வஞ்சிக்க வருவான். தனிமை என்னும் வல்லமையான, ஆபத்தான காந்தம்  நம்மை தவறான வழிக்குள் இழுத்துவிட வல்லது.

போத்திபாரின் வீட்டுக்குள் தான் தனியாக இருப்பதை உணர யோசேப்புக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. அவன் ஏவாளைப் போல சர்ப்பத்துக்கு செவி சாய்க்கவில்லை. லோத்துவைப் போல அங்கிருந்து ஓடிப்போக தயங்கவும் இல்லை. வேதம் கூறுகிறது ‘அவன் தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான் என்று.

தினமும் சோதனைகளை சகிக்கிற நமக்கு யோசேப்பு ஒரு நல்ல உதாரணமாக அமைகிறான் அல்லவா? நம் வாழ்க்கையில் திரு.போத்திபாரையும், திருமதி போத்திபாரையும் சந்திக்கும்போது, அங்கே பேச்சுக்கு இடம் இருக்க கூடாது, யோசேப்பைப் போல அங்கிருந்து ஓடிவிட வேண்டும்!

தனக்கு கிடைக்காதது, யாருக்கும் கிடைக்க கூடாது என்ற எண்ணத்தில், திருமதி போத்திபார், எபிரேய அடிமையாகிய யோசேப்பு தன்னோடு சயனிக்க முயற்சி செய்தான் என்று , அவனுடைய வஸ்திரத்தை கையில் பிடித்துக்கொண்டு பறைசாற்றுகிறாள். என்றாவது, யாராவது உங்களிடம் நடந்தது உங்களுக்கு பிடிக்காததால், இப்படி பாம்பைப் போல படம் எடுத்திருக்கிறீர்களா? அதனால் தான் இந்த வஞ்சம் தீர்க்கிற குணத்தை சர்ப்பத்தின் குணத்தோடு ஒப்பிடுகிறார்கள் போலும்!

வேதாகம வல்லுநர் கூறுகின்றனர், திரு போத்திபார் அதை முழுவதும் நம்பியிருந்தால், யோசேப்பை மறுகணமே கொலை செய்யும்படி கட்டளையிட்டிருப்பான். ஆனால் அவன் தன் மனைவி யோசேப்பின் மேல் கண் போட்டதைப் பற்றி சிறிதாவது கேள்விப்பட்டிருப்பான். இப்பொழுது யோசேப்பின் வஸ்திரத்தை  அவள் கையில் வைத்துக்கொண்டு ‘ உம்முடைய வேலைக்காரன் என்ன செய்துவிட்டான் பாருங்கள்’ என்று கத்தியதால், வேறுவழியின்றி , யோசேப்பை அவன் சிறைச்சாலைக்கு அனுப்பினான் என்று.

ஒருநாள் யோசேப்பு போத்திபாரின் அரண்மனையில்! மறுநாள் நாற்றமுள்ள சிறைச்சாலையில்!  ஆனால் தேவன் அவனோடிருந்தார்! கர்த்தருக்கு தெரியும் அவருடைய பிள்ளை எங்கு இருக்கிறான் என்று!

ஜெபம்: ஆண்டவரே! என்னுடைய சிந்தனையிலும், செயலிலும், வாஞ்சையிலும், வேதனையிலும், தனிமையிலும் உம்மையே நோக்கி, எனக்கு வரும் சோதனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள பெலன் தாரும்! ஆமென்.

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

1 thought on “இதழ்: 818 யாரும் இல்லாத தனிமையில்???”

  1. வாழ்க்கை என்பது… வாழ வழி காட்டுவதும், வழியை கேட்டுப் பெறுவதும் தான்.

Leave a comment