கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ் 1017 பிள்ளைகளை வளர்ப்பதில் தவறிய ஒரு தேவனை அறிந்த குடும்பம்!

ஆதி:  27:13 அதற்கு அவன் தாய், என் மகனே, உன்மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும்; என் சொல்லை மாத்திரம் கேட்டு , நீ போய், அவைகளை என்னிடத்தில் கொண்டுவா என்றாள்.”

யாக்கோபு தன் தாயின் நேசத்தை பெற்றான். ஈசாக்கு வயதான போது குடும்பத்தின் ஆசீர்வாதத்தை மூத்த குமாரனுக்கு வழங்கும் நேரம் வந்த போது, ரெபெக்காள் தன் இளைய குமாரனுக்கு அந்த ஆசீர்வாதம் கிடைக்க வேண்டுமென்று எண்ணுகிறாள்.

 ஆண்டவர் வாக்குத்தத்தம் பண்ணிய பிள்ளையை பெற்றுக்கொள்ள சாராள் அவசரப்பட்டு ஆகாரை ஆபிரகாமுக்கு மறுமனையாட்டியாக்கியது போல அவள் மருமகள் ரெபெக்காளும் , ஆண்டவர் மூத்தவன் இளையவனை சேவிப்பான் என்று அவன் சந்ததியைப் பற்றி சொன்ன வார்த்தையை நிறைவேற்றுவதாக எண்ணி ஏமாற்று வேலையில் இறங்குகிறாள்.பட்சபாதம், ஏமாற்று, பொய் , புரட்டு இவைதான் ரெபெக்காள் என்ற தாயிடம் இருந்த பண்பாடுகள்.

ஒரு நிமிஷம்!

பிள்ளைகளுக்காக எத்தனை முறை கணவரிடம் பொய் சொல்லியிருக்கிறீர்கள்? பிள்ளைகள்  செய்த தவறை எத்தனை முறை யாருக்கும் தெரியாமல் மறைத்திருக்கிறீர்கள்? பிள்ளைகள் தவறு செய்யும்போது எத்தனை முறை தட்டிக்கேட்காமல் மறைத்து இருக்கிறீர்கள்? ரெபெக்காள் மாத்திரம் இந்த தவறை செய்யவில்லை. நாமும் நம் வாழ்க்கையில் இப்படிப்பட்ட தவறுகளை செய்து கொண்டிருக்கிறோம் அல்லவா?

இங்கு ஈசாக்கு ஒரு நல்ல தகப்பனாக நடந்து கொண்டானா? என்று சற்று பார்ப்போம். ஈசாக்கு தியானிப்பதை வழக்கமாய் கொண்டிருந்தவன், தன் மனைவி மலடியாயிருந்த போது, தனக்கென்று வேறொரு பெண்ணைத் தேடாமல், தன் மனைவிக்காக தேவனிடம் முறையிட்டு, 20 வருடங்கள் காத்திருந்து பெற்றுக் கொண்டான் என்று ஈசாக்கைப் பற்றி பார்த்திருக்கிறோம். ஆனால் பிள்ளைகளை வளர்த்தது எப்படி? ரெபெக்காள் யாக்கோபை நேசித்தாள் என்றால், இவனும், ஒருதலை பட்சமாக ஏசாவை நேசித்தான். ஏசா வேட்டையாடி வந்த மாமிசம் அவன் உள்ளத்தை கொள்ளை கொண்டதால், புற ஜாதியான இரண்டு பெண்களை மணந்து தேவனுடைய ஆசீர்வாதத்தை பெரும் தகுதியை இழந்து,  உலகப் பிரகாரமாய், அவிசுவாசியாய் அலைந்து கொண்டிருந்த ஏசாவுக்கு ஆசீர்வாதத்தை கொடுக்க நாடினான்.

கணவன் மனைவிக்குள்  ஒற்றுமை இல்லாமல் அவரவர்கள் சொந்தமாய் முடிவெடுத்து ஒருவரையொருவர் ஏமாற்றி வாழும் குடும்பத்தை தேவன் ஆசீர்வதிக்க முடியுமா? குடும்பத்தின் தலைவனான ஈசாக்கு தன் இரு பிள்ளைகளையும் வைத்து, தேவனுடைய சமுகத்தைத் தேடியிருக்க வேண்டும். பிள்ளைகள் வயிற்றில் இருக்கும்போதே கர்த்தர் மூத்தவன் இளையவனை சேவிப்பான் என்று ரெபெக்காளிடம் கூறியது அவனுக்கும் தெரியும். இதன் அர்த்தத்தை கர்த்தரிடம் தானே கேட்டு அறிந்திருக்கவேண்டும். அப்படியல்லாமல் அவன் ஏசா சமைத்து கொடுத்த உணவில் மயங்கியவனாய் ஏசாவை ஆசீர்வதிக்க வாஞ்சித்தான்.

நடந்தது என்ன? பிறப்புரிமைக்கே மரியாதை  கொடுக்காத  ஏசாவுக்கு திடீரென்று அப்பாவின் ஆசீர்வாதத்தின் மேல் அக்கறை ஏன்? அம்மா யாக்கோபை தான் நேசிக்கிறாள் என்று தெரியும், இனி அப்பாவின் ஆசீர்வாதத்தின் மூலம் சொத்தும், அதிகாரமும் தனக்கு கிடைத்துவிடும். அப்புறம் பார்க்கலாம் அம்மா யாரை நேசிக்கிறாள் என்று… என்று நினைத்தான் போல! வேட்டையாட ஓடுகிறான், அவன் வருமுன் ரெபெக்காள் யாக்கோபை விட்டு ஏமாற்றி ஆசீர்வாதத்தை அடைய செய்கிறாள்.

வேட்டையிலிருந்து திரும்பிய ஏசா, தன் தாயும்  தம்பியும் சேர்ந்து தன்னை ஏமாற்றியதை உணர்ந்து கொலை செய்ய எழும்பினான். இதை அறிந்த ரெபெக்காள் யாக்கோபை ஆரானுக்கு அனுப்புகிறாள். யாக்கோபு  மறுபடியும் தன் தாயின் முகத்தை பார்த்ததாக வேதம் கூறவில்லை. ஏசாவும் வீட்டை விட்டு வெளியேறுகிறான். ரெபேக்காள் மரிக்கும்போது எந்த பிள்ளையும் அருகில் இல்லை.

என்ன பரிதாபம்! பட்சபாதம், பொய், புரட்டு, ஏமாற்று, ரெபெக்காளுக்கு என்ன சந்தோஷத்தைக் கொடுத்தது? பிள்ளகளுக்குள்ளே அடிதடி, கொலைவெறி, என்று வீடே இரண்டு பட்டு போயிற்று. கடைசியில் அவள் மரிக்கும்போது கண்ணீர் விட ஒரு பிள்ளையும் அருகில் இல்லை. அவள் விதைத்த பட்சபாதம் என்ற விதை, நம்பிக்கையின்மை, கசப்பு, பழிவாங்குதல் என்று கனி கொடுத்தது விட்டது.

இன்று நம்மில் எத்தனை குடும்பங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன! பிள்ளைகளை வளர்ப்பதில் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இல்லாமல் ஆளுக்கொரு பிள்ளைக்கு ஆதரவு கொடுத்து குடும்பத்தை இரண்டு பண்ணிக்கொண்டிருக்கிறீர்களா? எத்தனை குடும்பங்களில் கணவன் ஒரு ஆலயத்துக்கும், மனைவி ஒரு ஆலயத்துக்கும் செல்வதைப் பார்த்திருக்கிறேன்! அப்படியானால் பிள்ளைகள்??

தேவனை அறிந்த, ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒரு தாயும் தகப்பனும் பிள்ளைகளை வளர்ப்பதில் செய்த தவறுகளைத்தான் நாம் ஈசாக்கு, ரெபெக்காள் வாழ்க்கையில் பார்க்கிறோம். அதனால் வந்த விளைவுகள் நமக்கு எச்சரிக்கையாகட்டும்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment