யோசுவா: 8:1 ”… நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து ஆயிபட்டணத்தின்மேல் போ,..”
ஒவ்வொருநாள் காலையிலும் நான் என்னுடைய எல்லா பெலவீனங்களையும் அறிந்த என் பரமபிதாவிடம் அப்பா இந்த நாளைக்குரிய பெலனைத்தாரும் என்று ஜெபிப்பதுண்டு! சரீர பெலவீனத்தை மட்டும் நான் இங்கு குறிப்பிடவில்லை! ஆவிக்குரிய பெலவீனமும்தான்! ஒவ்வொருநாளும் இன்று நான் விழுந்து விடாமல் நிற்க உதவிதாரும் என்று தான் கெஞ்சி ஜெபிப்பேன்!
எரிகோவில் பெரிய வெற்றியைக் கண்ட இஸ்ரவேல் மக்கள் ஆயியில் தோல்வியைக் கண்டனர் என்று பார்த்தோம். ஆகோர் பள்ளத்தாக்கின் வேதனையையும், தோல்வியையும் தாங்கமுடியாமல், கர்த்தருடைய பிரசன்னத்தில் முகங்குப்புற கிடந்த யோசுவாவை நோக்கி கர்த்தர் எழுந்திரு என்பதைப் பார்க்கிறோம். யோசுவா! நீ முகங்குப்புற விழுந்துகிடப்பதென்ன?
எழுந்திரு! நீ எழுந்து நிற்க வேண்டிய நேரம் வந்தாயிற்று!
முகங்குப்புற விழுந்து கிடந்த யோசுவாவின் ஆவிக்குரிய பெலவீனத்தை கர்த்தர் அறிந்திருந்தார். அவனை உள்ளும் புறமுமாக அறிந்திருந்த அவருக்கு அவனுடைய உள்ளத்தில் ஏற்பட்ட காயம், வலி, வேதனை அத்தனையும் தெரியும். ஆதலால் கர்த்தர் யோசுவாவை நோக்கி எழுந்திரு என்று சொன்ன ஒரே வார்த்தையில் உன்னுடைய சொந்த பலத்தில் எழும்ப முயற்சி செய்யாதே யோசுவா விழுந்து விடுவாய். உன்னுடைய பயம், கலக்கம் எல்லாவற்றையும் என்மேல் வைத்து விட்டு, என்னைப் பிடித்துக்கொண்டு எழுந்திரு என்கிறார்.
கர்த்தர் யோசுவாவை மட்டும் அல்ல நம்மையும் பார்த்து, ‘ நான் உன்னை அறிவேன்! உன்னுடைய உள்ளும் புறமும் அறிவேன், உன்னுடைய தோல்வியையும், வேதனையும் அறிவேன். நீ முகங்குப்புற விழுந்து கிடப்பதையும் அறிவேன். நீயே எழும்ப முயன்றால் ஒருவேளை விழுந்துவிடுவாய், என்னைப் பிடித்துக்கொண்டு எழுந்திரு! நீ ஒருவேளைக் காணவில்லையானாலும் என் கரம் உன்னைத் தாங்கிப் பிடித்திருக்கிறது. நீ பயப்படவும், கலங்கவும் வேண்டாம் என்கிறார்.
இன்று எப்படிப்பட்ட நிலையில் நீ இருந்தாலும், கர்த்தருடைய பலத்தை சார்ந்து எழுந்திரு! தேவனாகிய கர்த்தர் நம் தேவன்! அவரே நம் பெலன்! ஆயியின் தோல்விகளைத் திரும்பிப் பார்க்காதே! கர்த்தரை நோக்கி, அவர் கரம் பிடித்து எழும்பு! உன் பெலவீனங்களை அவரிடம் ஒப்புக்கொடு, உனக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு.
உம்முடைய மேய்ச்சலின் பாதையில் அயராது நடந்து உமக்கு பின்செல்ல
எனக்கு பெலன் தாரும்!
தண்ணீரைக் கடந்து வரும்படி நீர் அழைக்கும்போது பயமின்றி கடக்க
எனக்கு பெலன் தாரும்!
மலைகளைத் தாண்டும்படி நீர் அழைக்கும்போது மகிழ்சியாகத் துள்ளியோட
எனக்கு பெலன் தாரும்!
உம்முடைய ஒளிமுகப் பிரகாசத்தை முகமுகமாய்க் காணும்வரை உம் வழிநடக்க
எனக்கு பெலன் தாரும்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
premasunderraj@gmail.com