கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1447 உன் குடும்பம் உனக்கு அடகு வைக்கப்பட்ட பொருளா?

2 சாமுவேல் 11:27 …. தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பாயிருந்தது.

எனக்கு நம்முடைய டிவி யில் பார்க்கவே பிடிக்காத ஒரு நிகழ்ச்சி எது என்றால் அது அரசியல்வாதிகளின் பேச்சுதான்.அவர்கள்  எந்தக் கட்சியினராகவும் இருக்கட்டும், யாருமே நேரிடையாக ஆம் அல்லது  இல்லை என்ற பதிலை சொல்லவே மாட்டார்கள். இந்த குத்துசண்டை வீரர்கள் தலைக்கு வரும் ஆபத்தை கையால் தடுப்பதுபோல சுற்றி வளைத்து பேசுவார்கள்.

இங்கே வேதம் சுற்றி வளைத்து பேசவில்லை. நேரிடையாக, தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பாயிருந்தது என்று சொல்கிறது. கர்த்தர் தாவீது செய்த பாவத்தை ஒருபோதும் வெள்ளை சுண்ணாம்பு அடித்து மறைக்கவும் இல்லை.

தாவீதின் குடும்பம் மிகவும் பெரியது. அவனை சுற்றியுள்ளவர்கள் அதிலும் பெரிய எண்ணிக்கை. இஸ்ரவேல் தேசமே அவனை ஒவ்வொரு நிமிடமும் கண்காணித்துக் கொண்டிருந்தது. அவர்கள் அனைவருக்குமே அவன் தான் முன்மாதிரி.  நம்முடைய தவறான சாட்சியின் மூலம் நாம் அதிக பாதிப்பைத்தானே ஏற்படுத்துவோம். எத்தனைமுறை நாம் அதிகமாக நேசிக்கும் பாஸ்டரோ, அல்லது டிவியில் காணும் பிரசங்கிமாரோ செய்யும் தவறைக்கண்டு நம்மில் அநேகர் தவறி விழுந்திருக்கிறோம்.

எத்தனையோ பேர் பயங்கரமாக தவறு செய்து விட்டு பிடிபடாமல் தப்பித்துப் போவதைப் பார்த்திருக்கிறேன். எத்தனையோ ஊழியர்கள் அரசியல்வாதிகள் கால்களில் விழுந்து தப்பித்துக் கொள்கிறார்கள். தாவீதைப் பொறுத்தவரை முதலில் அவன் செய்த பாவங்களிலிருந்து எளிதாக அவன் தப்பித்ததைப் போலத்தான் இருந்தது. அவன் கொலை செய்ததாகவே கருதப்படவில்லையே, உரியா ஏதோ போரில் மரித்தது போலத்தானே காணப்பட்டது.

இதுதான் பொல்லாப்பு என்பது!  நம்மை சுற்றியுள்ளவர்களை ஏதோ அழிந்து போகும் பொருட்களைப் போலப் பார்ப்பது. அவர்களும் கர்த்தரின் பார்வையில் விசேஷமானவர்கள் என்று உணராமல் இருப்பது. உண்மையில் தாவீது பத்சேபாளையும், உரியாவையும் ஏதோ தன்னிடம் அடகு வைக்கப்பட்ட பொருளை அடகுக்காரன் நடத்துவது போல நடத்தினான். அவன் தீட்டிய திட்டத்தில் அவர்களை விழ வைத்தான்.

தாவீதின் வாழ்வில்  இருந்த பொல்லாப்பு நம்முடைய வாழ்வில் உண்டா? நம்மை சுற்றியுள்ளவர்களை நாம் எப்படி பார்க்கிறோம், எப்படி நடத்துகிறோம்?  பொல்லாப்பை விட்டு நாம் விலகும்போது அது நம்மை விட்டு விலகும். நாம் பற்றவருக்கு செய்யும் பொல்லாப்பு நமக்கு நாமே பொல்லாப்பு செய்வதுபோலத்தான்.

தாவீது, உரியாவுக்கும், பத்சேபாளுக்கும் செய்த செயல் கர்த்தரின் பார்வையில் பொல்லாப்பாயிருந்தது! உன்னுடைய செயல்கள் இன்று கர்த்தரின் பார்வையில் எப்படி உள்ளன! உன்னை சுற்றியுள்ள உன் குடும்பத்தை உனக்கு அடகு வைக்கப்பட்ட பொருட்களைப் போல நடத்துகிறாயா? உன்னுடைய அம்மா அப்பா உனக்கு வேண்டாத பொருளாகி விட்டனரா?  சிந்தித்துப் பார்! ஜெபி!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

Leave a comment