- இது தேவன் நமக்கு அளித்த கட்டளை (உபாகமம் 10:13) நாம் அவரை நேசிப்பதையும், அவரை சேவிப்பதையும், அவருடைய வழிகளில் நடப்பதையும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்வதையும் தவிர வேறே எதைக் கர்த்தர் நம்மிடத்தில் கேட்கிறார்! சங்கீதம் 1:1,2 கூறுகிறது இரவும் பகலும் வேதத்தை தியானிக்கிற மனுஷன் பாக்கியவான் என்று!
இதழ்:1930 உம்முடைய சத்தியத்தினாலே என்னை பரிசுத்தமாக்கும்!
எனது அன்பான சகோதர சகோதரிகளே! உலகத்தின் பற்பல நாடுகளிலிருந்து என்னுடைய ராஜாவின் மலர்கள் தோட்டத்துக்கு வருகை தரும் உங்கள் யாவருக்கும் நம்முடைய இரட்சகராகிய இயேசுவின் நாமத்தில் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது கர்த்தருடைய வழி நடத்துதலுக்காகவும் , பாதுகாப்பிற்காகவும் என் உள்ளம் அவரை நன்றியால் ஸ்தோத்தரிக்கும் அதே வேளையில், இந்தப் புதிய வருடம் 2024 நம் ஒவ்வொருவருக்கும் எதிர்பாராத ஆசீர்வாதங்களைக் கொண்டு வரும் வருடமாக அமையவேண்டுமென்று என் உள்ளம் ஜெபத்தையும் ஏறெடுக்கிறது !
ஒவ்வொரு புதிய ஆண்டிலும் புதிய தீர்மானங்கள் எடுப்பது நம்மில் அநேகரின் வழக்கம்! அந்தத் தீர்மானம் தேவனுடைய வார்த்தையை ஆழமாய்ப் படிப்பேன் என்ற தீர்மானமாக ஏன் இருக்கக்கூடாது என்று சிந்தியுங்கள்! நாம் ஏன் தேவனுடைய வார்த்தையை படிக்க வேண்டும் என்று சற்று ஆலோசிக்கலாம் வாருங்கள்!
