கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2141 பரலோக தேவனை பரிகாரத்துக்குள்ளாகாதே!

2 சாமுவேல்: 7: 15  உனக்கு முன்பாக நான் தள்ளிவிட்ட சவுலிடத்திலிருந்து என் கிருபையை விலக்கினது போல அவனைவிட்டு விலக்கமாட்டேன்.

பரலோகத்தின் ஆசீர்வாதத்தைப் பெற்ற தாவீதிடம் கர்த்தருக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. உன்னை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லும் கர்த்தருக்கு உன்னிடமும் பெரிய எதிர்பார்ப்பு உண்டு!

சங்கீதம் 139:16 ல் என் கருவை உம் கண்கள் கண்டது.  என் அவயங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும்…. உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது என்ற தாவீதின் வார்த்தைகள் எனக்கு பயத்தைக் கொடுக்கும் வார்த்தைகள். உங்களைப்பற்றி எனக்குத் தெரியாது ஆனால் தேவனாகிய கர்த்தர் நான் கருவில் உருவாகும் போதே என்னைத் தெரிந்து கொண்டிருக்கிறார், என்னுடைய வாழ்வில் அவருடைய நோக்கம் பெரிது என்று எண்ணும்போது எனக்கு சற்று பயம் தான் வரும்.

தேவனை நேசிக்கும் ஒவ்வொரு பிள்ளைகளின் வாழ்க்கையிலும் அவர் மிகப்பெரிய நோக்கம் வைத்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல! இஸ்ரவேல் மக்களும் கூட தாவீதிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். தாவீதின் வாழ்க்கையில் தேவனுடைய ஆசீர்வாதம் பலவகைகளில் அருளப்படுவதைக் கண்ட மக்கள்,  தாவீது எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தனர். தாவீதுடைய நடை, உடை, பாவனையெல்லாம் கர்த்தரை பிரதிபலிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர்.

தாவீதிடம் கர்த்தருடைய குணமான இரக்கம், தயவு போன்ற நற்குணம் நிறைந்து காணப்பட்டது. தாவீதின் நற்குணங்களைக் கண்ட மக்கள் தாவீதின் தேவனாகியக் கர்த்தரின் குண நலன்களைத்  தாங்களும் அடைய வேண்டினர். ஒருவரையொருவர் அன்புடன் நடத்தினர். இஸ்ரவேலை சுற்றியுள்ள மக்களும் இதைக் காண முடிந்தது.

தாவீது தேவனை நோக்கிப்பார்த்து, அவரால் கனம் பெற்றபோது, அவனையும் அவன் சந்ததியையும் அவர் ஆசீர்வதித்தபோது, அவன் எப்படிப்பட்ட சாட்சியை தன் மக்கள் முன்பு வைக்கிறான் பாருங்கள்!

ஆனால் அப்படிப்பட்ட விசேஷமாய் ஆசீர்வதிக்கப்பட்ட ஒருவன் சரீரப்பிரகாரமான பாவத்தில் விழுந்தபோது அவனுடைய ஜனம் மட்டுமல்ல, அவர்களை சுற்றியிருந்த அனைவரும் தாவீதையும், அவனுடைய தேவனையும் கூட பரிகாரம் செய்தனர்.

இது நம்மை எச்சரிக்கும் காரியம் அல்லவா?

கர்த்தர் உன்னை நேசிப்பதால், உன்னை ஆசீர்வதிப்பதால், உன்னோடு பேசுவதால், உன்னை நோக்கிப்பார்க்கும் உன் குடும்பமும், உன்னுடைய சமுதாயமும் உன் வாழ்க்கையின் மூலம் அநேக காரியங்களைக் கற்றுக் கொள்ள ஆவலாய் உள்ளனர். ஆனால் உன்னுடைய சாட்சி தவறும் போது நீ மட்டுமல்ல, உன் தேவனாகிய கர்த்தரும்கூட பரிகாரத்துக்குள்ளாகிறார்.

நான் கருவாய் உருவானபோதே என்னைக்கண்ட தேவன் என் வாழ்க்கையில் என்ன நோக்கம் கொண்டிருக்கிறார் என்று நான் நினைக்கும்போது அதைத்தான் நானும் என் வாழ்க்கையின் நோக்கமாகக் கொள்ளவேண்டும் என்று ஜெபிப்பேன்! நீங்கள் எப்படி?

உங்கள் சகோதரி,

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment