கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2190 A VERY BLESSED AND HAPPY NEW YEAR 2025!

யோவான்: 14: 6 அதற்கு இயேசு; நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில்  வரான்

பல ஆண்டுகளுக்கு முன்னர்  நானும் என் மகனும், தென்னிந்தியாவில் உள்ள பல மாகாணங்களில் உள்ள எங்கள் ஊழிய மையங்களுக்கு, கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள , காரில் பிரயாணப்பட்டோம்.

இப்பொழுதெல்லாம் புதிய கார்கள்  GPS பொருத்தப்பட்டே வருகின்றன. ஆனால் அப்பொழுதெல்லாம் அப்படியல்ல. நாங்கள் எங்களுடைய காரில் GPS என்ற வழி காட்டும் கருவியை வாங்கி  பொருத்தியிருந்தோம்.

ஒருநாள் நாங்கள் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில், நான்கு வழி சாலையில் வந்து கொண்டிருந்த போது எங்களுடைய வழிகாட்டும் கருவியிலிருந்து ஒரு குரல் வந்தது ‘ Take a right at the next exit’ என்று. நெடுஞ்சாலையில் எந்த பிரிவும் காணப்படவில்லை, ஒரு ஒற்றையடி பாதை மட்டும் கண்ணில் பட்டது, கரடு முரடான அந்த பாதையில் செல்லும்படி  எங்கள் கருவி எங்களை வற்புறுத்தியது. ஏனெனில் அந்த கருவியின் வேலை குறுக்கு பாதையை காட்டுவது தான்.  அந்தக் கருவியின் வழியை நாங்கள் பின்பற்றினாலும் நாங்கள் போக வேண்டிய இடத்துக்கு ஒருவேளை எங்களை கொண்டு போயிருக்கும், நெடுஞ்சாலையை விட  அந்தக் குறுக்கு வழியின்  தூரம் சற்று குறைவாகவே இருந்திருக்கும். ஆனால் பாதையானது கல்லும், முள்ளும்,மேடும், பள்ளங்களும் நிறைந்து, எங்களுடைய பிரயாணத்தை துயரத்தில் ஆழ்த்தியிருக்கும்.

இயந்திர வழிகாட்டியை சொல்லி குற்றமில்லை. அதற்கு குறுக்கு வழியைக் காட்ட தான் தெரியுமே தவிர, அந்த பாதை நன்றாக உள்ளதா, ஒருவழிப் பாதையா, அந்த வழியில் நம் வாகனம் நுழைந்து விடுமா என்றெல்லாம் நிச்சயமாகத் தெரியாது.  ஆனால் நெடுஞ்சாலையோ ஆபத்திலாத பாதை, நம்பிக்கையான பாதை, சற்று  அதிகம் தூரம் என்றாலும், சாலை நன்றாக இருப்பதால் வேகமாக சென்று விடலாம்.

யோவான் 14:4,5 ல் இயேசு தம் சீஷர்களை நோக்கி ‘நான் போகிற இடத்தையும் அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள்’ என்றார்.

தோமா எப்பொழுதும் போல தம்முடைய சந்தேக பாணியில் ‘ஆண்டவரே!  நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம்? என்றான்.

இதை சற்று நாம் சொல்லுவது போல நினைத்துப் பாருங்கள்! ‘ “ஆண்டவரே நீர் எங்கே போகிறீர், என்ன செய்யப்போகிறீர் என்று எங்களுக்கு தெரியாது, அப்படி இருக்கும்போது நீர் எந்தப் பாதையில் செல்லப் போகிறீர், அங்கே எப்படி வந்து சேருவது என்று எப்படி எங்களுக்கு தெரியும்?”

இப்படிப் பட்ட எண்ணங்கள் உங்களுக்கு வந்தது உண்டா?

புதிய ஆண்டுக்குள் பிரவேசிக்கிற நாம் ஆண்டவரை நோக்கி, ஆண்டவரே இந்த வருடத்தில் நான் எதை சந்திக்கப் போகிறேன்? என் வாழ்க்கை என்னும் பாதை என்னை எங்கே வழி நடத்தும்? என்று கேட்கும்போது நமக்குள் சிறிது அச்சம் கூட உண்டு அல்லவா?

எங்களுடைய காரில் உள்ள GPS கருவி போல அநேகக் குரல்கள் நம்மைக் குறுக்கு பாதை வழியாய் ஓட்டத்தை தொடரும்படி  ஏவும். அவை நம் பந்தயப் பாதையில் குறுக்காய் செல்ல உதவுவதுபோலத் தோன்றினாலும், உண்மையில் அவை நம்மை கரடு முரடான பாதையில் நடத்தி நம்முடைய ஓட்டத்தை தாமதிக்கப் பண்ணும்.

வழியை அறியோம் என்று பதிலளித்த தோமாவை நோக்கி நம் ஆண்டவர்

நானே வழி என்றார்.  கிரேக்க மொழியில் வழி என்றால் சாலையை குறிக்கும்.

இந்த புதிய ஆண்டில் நாம் வழி தெரியாமல் கரடு முரடான பாதைக்குள் செல்ல வேண்டாம், ஒரே இடத்தை சுற்றி வர வேண்டாம், போக வழியில்லாத ஒற்றையடி பாதைக்குள் புகுந்து திணற வேண்டாம்.

நம் ஆண்டவராகிய கிறிஸ்து நமக்கு தடையில்லாத சாலை போல , பாதுகாப்பான வாழ்க்கைப் பிரயாணத்தை வாய்க்க செய்வார்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அடியும் அவரை பின்பற்றும்போது, இந்தப்  புதிய ஆண்டு 2025   நமக்கு மகிழ்ச்சியும், சந்தோஷமும், பெலமும் உள்ள ஆண்டாக மாறும். 

உங்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

 

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

 

Leave a comment