1 சாமுவேல்: 10:9 அவன் சாமுவேலை விட்டுப் போகும்படித் திரும்பினபோது, தேவன் அவனுக்கு வேறே இருதயத்தைக் கொடுத்தார்.
இஸ்ரேவேலின் முதல் ராஜாவாகும்படி தெரிந்து கொள்ளப் பட்ட சவுல் தான் ஒரு பென்யமீன் கோத்திரத்தான் என்றும், மிகவும் அற்பமானக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும் கூறியதைப் பார்த்தோம்.
தேவனுடைய உத்தம தீர்க்கதரிசியான சாமுவேல், சவுலை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகிக்க வந்தபோது அவர் சவுலை நோக்கி, கர்த்தருடைய ஆவி உம் மேல் இறங்கும்போது நீ பழைய மனிதனைப்போல அல்ல புதியவனாவாய் என்றார். இன்றைய வேதாகமப் பகுதி கூறுகிறது, கர்த்தர் சவுலுக்கு வேறே இருதயத்தைக் கொடுத்து அவனை புதியவனாக்கினார். அவன் தன்னை தேவனுடைய அழைப்புக்கு ஒப்புக் கொடுக்குமுன்னர் இருந்த பழைய சவுல் இல்லை, முற்றும் புதிய இருதயத்துடன் புதிய மனிதனானான் என்று பார்க்கிறோம்!
அவன் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பபட்டதைக் கண்டு,சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ என்று ஜனங்கள் ஆச்சரியப் பட்டனர்!
பரலோகத் தேவன் அவனுக்கு ஒரு கணத்தில் இருதய மாற்று சிகிச்சை செய்தார்!
நாம் எப்படிப் பட்ட நிலமையில் இருந்தாலும், எப்படிப்பட்ட குடும்ப சூழலில் இருந்தாலும், எப்படிப்பட்ட பின்னணி நமக்கு இருந்தாலும், கர்த்தருடைய அழைப்புக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் போது, கர்த்தர் நம்மை அவருடைய ஊழியத்தை செய்யத் தகுதியுள்ளவர்களாய் மாற்ற வல்லவர் என்பது சவுலின் வாழ்க்கை நமக்கு காட்டுகிறது அல்லவா!
ஆனால் சவுலின் வாழ்க்கையைப் படிப்போமானால், ஒரு காலகட்டத்தில் அவன் கர்த்தர் அவனுக்கு இலவச ஈவாய்க் கொடுத்த புதிய இருதயத்தை உதறித் தள்ளியபோது, வேதம் கூறுகிறது அவனுடைய இருதயத்தில் அசுத்த ஆவி புகுந்து கொண்டது என்று. ஆம்! பரிசுத்த ஆவியானவரை நாம் வெளியேற்றும் போது, காலியான இருதயத்தை நிரப்ப அசுத்த ஆவிகள் புகுந்து கொள்ளும் என்று வேதம் கூறுகிறது!
சவுலின் வாழ்க்கையையும், அவனுடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் சரிவையும், அவன் கர்த்தர் ஈவாய்க் கொடுத்த சுத்த இருதயத்தை இழந்து அசுத்த ஆவியால் அலைக்களிக்கப் பட்டதையும் நன்கு அறிந்த தாவீது ராஜா, தான் பாவம் செய்ததை உணர்ந்தவுடன் தன்னுடைய பாவம் நிறைந்த இருதயத்தை மாற்றி சுத்த இருதயத்தைத் தன்னிலே சிருஷ்டிக்கும் படியும், நிலைவரமான ஆவியை புதுப்பிக்கும் படியும் கர்த்தரிடம் கெஞ்சினான் (சங்:51).
இன்று கர்த்தர் நமக்கு கிருபையாய் ஈந்திருக்கிற புதிய, பரிசுத்த வாழ்க்கையை நம்முடைய கீழ்ப்படியாமையினால் இழந்து போவோமானால், பரிசுத்த ஆவியானவர் வாசம் பண்ணும் இடத்தில் அசுத்த ஆவிகள் புகுந்து கொண்டு நம் வாழ்க்கையைத் தலைகீழாக்கி விடும் என்பதற்கு சவுலின் வாழ்க்கை ஒரு எச்சரிக்கை!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்