கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 634 ஏன் இந்தக் கோபம்!

1 சாமுவேல் 25: 10-13  நாபால் தாவீதின் ஊழியக்காரருக்கு பிரதியுத்தமாக, தாவிது என்பவன் யார்? ஈசாயின் குமாரன் யார்?….  நான் என் அப்பத்தையும், தண்ணீரையும் என் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்களுக்காக நான் அடித்து சமையல் பண்ணுவித்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனுஷருக்குக் கொடுப்பேனோ என்றான். தாவீதின் வாலிபர் தங்கள் வழியேத் திரும்பி, மறுபடியும் தாவீதினிடத்தில் வந்து, இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது தாவீது தன் மனுஷரைப்பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக் கொள்ளுங்கள் என்றான்…. தாவீதும் தன் பட்டயத்தைக் கட்டிக்கொண்டான். ஏறக்குறைய நானூறுபேர் தாவீதுக்குப் பின்சென்று புறப்பட்டுப் போனார்கள்.

நாபால் ஒரு முட்டாள்த்தனமான பொல்லாத மனிதன் என்று நாம் பார்த்தோம். தாவீது அவனுடைய வேலைக்காரருக்குக் காட்டிய கருணையை அவன் மதிக்கவில்லை என்று இன்றைய வேதாகமப்பகுதி கூறுகிறது.

நாபால்   தாவீதுக்கு அளித்த பதிலைக் கேட்டவுடன் இவன் ஒரு புத்திகெட்டவன், இவனிடமிருந்து என்ன பதிலை எதிர்பார்க்க முடியும் என்ற எண்ணம்தான் நமக்கு வந்திருக்கும். புத்திசாலியான தாவீதும் அப்படி நினைத்து அவனைப் பொருட்படுத்தாமல் விட்டிருக்கலாம். தாவீது ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு இவன் ஒரு ஆளா, இவனைப்போல முட்டாளிடம் நான் தவறாக, என் உதவிக்கு பதிலை எதிர்பார்த்துவிட்டேன் என்று நினைக்காமல் போனதுதான் எனக்குமட்டுமல்ல, உங்களுக்கும்கூட இன்றைய பாடமாக அமைகிறது.

எத்தனையோ முறை நானும்கூட இப்படி நடந்து கொள்வதுண்டு! ஒருவருடைய பொல்லாத குணத்தை நான் நன்கு அறிந்தபின்னும், அவர்கள் என்னைப்பற்றி ஏதாவதுகூறிவிட்டார்கள் என்று கேள்விப்படும்போது உடனே கோபம் வந்துவிடுகிறது.  இந்தக் கோபம் நமக்கு எவ்வளவு கெடுதி தெரியுமா? நமக்கு கோபத்தை வர வைத்ததே அந்த சம்பவத்தைவிட நம்முடைய கோபம் நம்மை கடுமையாக பாதிக்கும்.

தாவீது தன்னுடைய ஊழியக்காரர் தன்னிடம் நாபால் கூறியதைச் சொன்னபோது சற்று அமைதியாக இருந்து, தன்னுடைய ஊழியரையும் அமைதிப்படுத்தியிருக்கலாம். எல்லோருடைய நாவையும் அடக்கியிருக்கலாம். இப்படிப்பட்ட சூழலில் கர்த்தர் தன்னிடம் எதை விரும்புவார் என்று சற்று எண்ணியிருக்கலாம். அவனுடன்  இருந்த ஊழியரை சமாதானப்படுத்துவற்குப் பதிலாக தாவீது, பட்டயத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கட்டளைக் கொடுத்தான்.

இதைப்படிக்கும்போது இன்னொரு சம்பவமும் ஞாபகத்துக்கு வந்தது. கர்த்தராகிய இயேசுவைப் பிடிக்கவந்தவர்களைப் பார்த்ததும் பேதுரு பட்டயத்தை உருவினாரே அது தான். ஆனால் நம்முடைய ஆண்டவர் பேதுருவை நோக்கி உன் பட்டயத்தை உறையிலே போடு என்றார் என்பது நமக்குத் தெரியும்.

நாபாலுக்கும் தாவீதுக்கும் நடுவே யாரும் வராதிருந்தால் எத்தனை உயிர்களின் இரத்தம் தரையிலே சிந்தியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். நாபால் செய்த காரியத்தை  நிச்சயமாக நான் சரியென்று சொல்லவில்லை!  ஆனால் அதைப்பழிவாங்க தாவீது ஆத்திரத்தில் எடுத்த முடிவுதான் எனக்கு சரியென்றுத் தோன்றவில்லை. நாபாலுக்கு நான் யாரென்று காட்டுகிறேன் என்று தாவீது நினைத்ததுதான் சரியென்றுத் தோன்றவில்லை.

அதேசமயம் தாவீது நாபாலை மன்னிக்க முடிவு எடுத்திருந்தால் எப்படியிருந்திருக்கும்! அதுதானே தாவீதின் குணம்!  கர்த்தரைக் கேட்காமல் முடிவு எடுக்கமாட்டானே! பட்டயத்தை எடுங்கள் என்று கூறுமுன் சற்று யோசித்திருக்கலாம்!

இந்த சம்பவம் பரலோக தேவன் நாம் தவறிவிடாமல் நம்மைப் பாதுகாக்க, வழிநடத்த நமக்கு அளிக்கும் இன்னொரு பாடம்! தாவீதைப்போல நாம் கோபத்தில் செயல் படாமல் சிந்தித்து செயல்பட வேண்டுமென்பதே கர்த்தருடைய ஆவல்.

யாரோ ஒருவர் கூறியதைப் போல ‘கோபம்வந்தால் பத்துவரை எண்ணுங்கள்! மிகவும் கோபம் வந்துவிட்டால் நூறுவரை எண்ணுங்கள்!’

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

Leave a comment