கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 643 தேவனால் அனுப்பப்பட்ட வார்த்தைகள்!

1 சாமுவேல்: 25: 32 அப்பொழுது தாவீது அபிகாயிலை நோக்கி : உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

மிகப்பிரமாதமான விருந்தோடும், சாந்தமான வார்த்தைகளோடும் வந்த அபிகாயில் பேசி முடித்தவுடனே தாவீது அவளிடம் கூறிய வார்த்தைகளைத்தான் இந்த வசனத்தில் பார்க்கிறோம்.

உண்மையை சொன்னால் இந்த வார்த்தைகள் பல காரணங்களுக்காக  என்னை மிகவும்  தொட்டு விட்டன!  முதலாக தாவீது அவளை தேவன் தாமே அனுப்பியதாகக் கூறுகிறான். ஏனெனில் அவள் தாவீதிடம் பேசிய வார்த்தைகள், தேவனாகியக் கர்த்தர் அவனோடு பேசியவை போல இருந்தன! தாவீது தேவனோடு ஒவ்வொருநாளும் தொடர்பில் இருந்ததால் அவனால் கர்த்தரின் சத்தத்தைக் கேட்க முடிந்தது.

உன்னைக் கர்த்தர் தம்முடைய செய்தியோடு யாரிடமாவது அனுப்பியதுண்டா? நீ அந்த நபரிடம் பேசியபோது அவர், கர்த்தர் தாம்  உங்களை என்னிடம் அனுப்பியிருக்கிறார் என்று கூறியதைக் கேட்டிருக்கிறாயா?

என்னுடைய ராஜாவின் மலர்களை வாசிக்கும் பலர் அப்படி எனக்கு எழுதுகிறதைப் பார்க்கிறேன். ஒவ்வொருமுறையும் அவை என் கண்களில் நீரை வர வைக்கும்!

இந்த வசனத்தில், இஸ்ரவேலை ஆளப்போகும் ராஜா, கர்த்தராகிய இயேசுவின் குடும்பத்தில் இடம் பிடிக்கப்போகும் ஒரு ராஜா, அபிகாயிலின் வார்த்தைகளைக் கேட்டவுடன், உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று தேவனுக்கு மகிமையை செலுத்துவதைப் பார்க்கிறோம்.

அபிகாயிலின் வார்த்தைகள் தேவனுக்கு மகிமையைக் கொண்டுவந்தன!

அபிகாயில் ஒர் நல்ல குடும்பத்தில் வாழ்க்கைப்படவில்லை! ஒரு அன்பான கணவனோடு வாழவில்லை! ஒவ்வொரு நிமிடமும் பேலியாளின் மகனோடு வாழ்ந்து கொண்டிருந்த அவள் கர்த்தரை சபிக்கவில்லை! கர்த்தர்தான் தன்மேல் இந்த பாரத்தைக் கொடுத்துவிட்டார் என்று முணுமுணுக்கவில்லை! அவளுடைய குடும்ப சூழலால் அவள் தேவனைவிட்டு பின்வாங்கவும் இல்லை! தேவனுடைய சித்தத்துக்குள் வாழ்ந்து கொண்டிருந்தாள்.

அபிகாயில் சிந்தித்து செயல் பட்ட ஒரு பெண்! அவள் பெருந்தன்மையோடு நடந்து கொண்டாள். தாவீதைக் கண்டவுடன், தாழ்மையோடு நடந்தாள். கடைசியில் அவள் பேச ஆரம்பித்த போதோ, அவள்  தேவனோடு கொண்டிருந்த உறவு அவளுடைய வார்த்தைகளில் வெளிப்பட்டது.  அவை தாவீதுக்கு தேவன் தன்னுடன் பேசிய வார்த்தைகள் போல் தோன்றின!

உனக்கும் எனக்கும் முன்பு அபிகாயிலின் வாழ்க்கை எப்படிப்பட்ட ஒரு சாட்சியாக இருக்கிறது என்று பாருங்கள்! நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் பேசும் வார்த்தைகள் யாருக்காவது ஆசீர்வாதமாக உள்ளதா?

கர்த்தாவே பேசும்! உம்முடைய வார்த்தைகளை என் வாழ்க்கையின் மூலம் உரத்த சத்தமிட எனக்கு உதவும் என்பதே இன்று என் ஜெபம்! நீங்கள் எப்படி?

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

Leave a comment