கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 680 பழிவாங்குதலுக்கு பதிலாய் மன்னிப்பு!!

1 சாமுவேல்: 26:8,9  அப்பொழுது அபிசாய் தாவீதைப் பார்த்து: இன்று தேவன் உம்முடைய சத்துருவை உம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார். இப்பொழுதும் நான் அவனை ஈட்டியினால் இரண்டு குத்தாகக் குத்தாமல், ஒரே குத்தாக நிலத்தில் உருவக்குத்தட்டுமா என்றான்.

தாவீது அபிசாயைப் பார்த்து: அவரைக் கொல்லாதே. கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கைகளைப்போட்டு, குற்றமில்லாமல் போகிறவன் யார்? என்று சொன்னான்.

 

தாவீது இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தான். கோலியாத்தைக் கொன்றபின்னர் சவுலின் சேவகனாகவும், சவுல் அசுத்த ஆவியால் அலைக்கழிக்கப்பட்டபோது அவனை அமைதிப்படுத்தும் இசைக்கலைஞனாகவும் சேர்ந்தான். ஆனால் சவுலோ அவனுடைய உயிரை எடுக்கவேண்டி அவனை ஒரு பறவையைப்போல வேட்டையாடினான்.

அப்படிப்பட்ட வேளையில்தான் அவன் துராகிரதனாகிய நாபாலை சந்தித்தான். நாபால் அவனை நடத்திய விதம் தாவீதை நாபாலின் மொத்தக்குடும்பத்தையும் அழிக்கத் தூண்டியது. புத்திசாலியான அபிகாயிலால் அது தடுக்கப்பட்டது. தாவீது பழிவாங்குவதை விட்டு பின்வாங்கி, கர்த்தரே பழிவாங்கும்படி விலகினான்.

இப்படியாகப் பழிவாங்கும் சூழ்நிலை அவனுக்கு  பலமுறை வந்துள்ளது. இன்றைய வேதாகமப்பகுதியில் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையைத் தான் பார்க்கிறோம்.  இங்கு அபிசாய் தாவீதைப் பார்த்து இன்று தேவன் உம்முடைய சத்துருவை உம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்கிறான்.

ஒருநிமிஷம்! அபிசாயின் வார்த்தைகளை கவனித்துப் பாருங்கள்! ஒரு இஸ்ரவேலனாகிய அபிசாய் தேவனுடைய நாமத்தில் ஒரு அட்வைஸ் கொடுக்கிறான். அதை தேவனே கூறிய விதமாக நினைத்து அந்த புத்திமதியை ஏன் தாவீது ஏற்றுக்கொள்ளவில்லை?  நல்லவேளை தாவீது தன்னுடைய பரமபிதாவின் சத்தத்தை நன்கு அறிந்திருந்தான். அதைப்போல சில நேரங்களில் ஒரு நல்ல கிறிஸ்தவனின் வாயில் இருந்து வரும் எல்லா வார்த்தைகளும் கிறிஸ்துவின் வார்த்தைகள் ஆகாது! நம்முடைய பரம பிதாவின் சத்தத்தை நாம் வேதத்தின் மூலமாய் அறிந்து கொள்ள வேண்டும்.

தாவீது அபிசாயிடம் கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கைகளைப்போட்டு, குற்றமில்லாமல் போகிறவன் யார்? என்றான். தன்னை ஒரு பறவையைப்போல கண்ணி வைத்து வேட்டையாடிக்கொண்டிருந்த சவுலைப்பற்றி தாவீது கூறிய வார்த்தைகள்தான் இவை.  எப்படிப்பட்ட உள்ளம் பாருங்கள்! பழிவாங்குதலுக்கு பதிலாய் மன்னிப்பு!

பவுல் கொலோசேயருக்கு எழுதும்போது, ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்கு குறைபாடு உண்டானால் கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் ( 3:13) என்கிறார்.

தாவீது அபிசாயிடம் பெற்ற புத்திமதிக்கு இது முற்றிலும் மாறானது!  ஆனால் இந்த ஒரு அட்வைஸ் தான் நமக்கு அமைதியைக் கொடுக்கும்.

நாம் மன்னிக்குபோது ஒரு கடந்த காலத்தை மாற்ற முடியாது ஆனால் நிச்சயமாக எதிர் காலத்தை மாற்றமுடியும்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

Leave a comment