கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 713 பதவியும், பணமும் கொடுக்கும் தவறான கருத்து!

2 சாமுவேல்: 11:4  அவள் அவனிடத்தில் வந்தபோது அவளோடே சயனித்தான்.

இன்றைய வேதாகமப்பகுதியை வாசித்தபோது, சக்திவாய்ந்த பதவி மனிதரை ஊழல் செய்விக்காது. மனிதர் தான் சக்திவாய்ந்த பதவியை ஊழல் பண்ணுகிறார்கள் என்று யாரோ எழுதியது கவனத்துக்கு வந்தது.

ஒருகாலத்தில் பக்கத்து வீட்டு நண்பராக இருந்தவர் கூட,  பிசினஸ் ஆகட்டும் அல்லது அரசியல் ஆகட்டும் ஏதோ ஒரு இடத்தில் உயர்ந்த பதவியைப் பிடித்தவுடன் ஆளே மாறிப்போவதில்லையா?

கிறிஸ்தவ ஊழியக்காரர் கூட சிலரைப் பார்த்திருக்கிறேன். ஞாயிற்றுக் கிழமைகளில் அவர்கள் ஊழியத்துக்காக ஜனங்களிடம் பணம் கேட்பார்கள். திங்கள் கிழமைகளில் விமானத்தில் பறப்பார்கள். பணமும், புகழும், பாராட்டுகளும், பதவியும் மனிதரை அப்படியே மாற்றிவிடுகிறது. இந்தப் பதவியில் நான் இருப்பதால் நான் இப்படி வாழலாம் என்று முன்கூட்டியே தங்கள் மனதில் ஒரு தவறான கருத்தை ஏற்படுத்திக்கொள்வார்கள் போலும்.

இங்கு தாவீது ஒரு மிகப்பெரிய பதவியில் இருக்கிறவன். ஒரு தேசத்தை ஆளும் ராஜா. மிகவும் சௌந்தரியமும் , திறமையும் கொண்டவன். யுத்தத்தில் வல்லவன். அவனைக்கண்ட பெண்கள் எல்லோரும் சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று போற்றிப் பாடிய ஹீரோ அவன். ஒவ்வொருவருடைய கவனத்தையும் ஈர்ந்த இஸ்ரவேலின் முன்னோடி அவன்.

அதே சமயத்தில் அவனிடம் கர்த்தரைத் தேடும் இதயம் இருந்தது. கர்த்தரை பிரியப்படுத்தும் வாஞ்சை இருந்தது. தேவனுடைய பாதையை தன் சிறு வயது முதல் தெரிந்து கொண்டவன். இன்று அவனிடம் பணம், புகழ், பெரிய பதவி இவை வந்தபோது அவன் மனதிலும் நான் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற தவறான கருத்து ஏற்பட்டு விட்டது. அடுத்தவனின் மனைவி மேல் கை போடவும், அவளை அடையவும் கூட தனக்கு உரிமை உள்ளது என்று எடுத்துக் கொண்டானோ என்னவோ! பதவி வந்தவுடன் எதையும் தான் செய்யலாம் என்ர தவறான கருத்து! மற்றவருக்கு இல்லாத உரிமை எனக்கு உண்டு என்ற தவறான கருத்து! என்ன முட்டாள்த்தனம்!

என்ன  பரிதாபம்! இன்று  இந்த உலகத்தின் பதவி, இந்த உலகத்தின் புகழ், இந்த உலகத்தின் சொத்து, இவை நாம் எதை வேண்டுமானாலும் செய்ய நமக்கு உரிமை உண்டு என்ற எண்ணத்தை நமக்குள் கொண்டு வருமானால் அது மிகப்பெரிய தவறு.  அது  நம்மையும், நம்மை சார்ந்தவரையும் அழித்துவிடும்.

கர்த்தரை நேசித்த, அவருடைய இருதயத்திற்கேற்றவன் என்று எண்ணப்பட்ட  தாவீதே இந்தக் கண்ணியில் விழுந்தால்  நீயும் நானும் எப்படி? ஜாக்கிரதை!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

Leave a comment