கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 719 குற்ற மனசாட்சி என்ற நரகம்!

2 சாமுவேல் 11:10  உரியா தன் வீட்டுக்குப்போகவில்லையென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாவை நோக்கி, நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா, நீ உன் வீட்டிற்கு போகாதிருக்கிறது என்ன என்று கேட்டான்.

என்னுடைய அம்மா நன்றாக லேஸ் பின்னுவார்கள். என்னையும் ஏதாவது ஒரு டிசைனைப் பின்பற்றி பின்னச் சொல்வார்கள். ஒருநாள் நான் பின்னிய போது ஒரு சிறு தவறு பண்ணிவிட்டேன். ஒரே ஒரு பின்னல்தானே விட்டு விட்டேன் ஒன்றும் ஆகாது என்று அதைத் தொடர்ந்து பின்னிக் கொண்டிருந்தேன். அம்மா என்னிடம் வந்து அதை கையில் வாங்கி , நான் ஒரு பின்னலை தவர விட்ட இடத்தில் ஒரு சிறு இழையை இழுத்தார்கள். அப்படியே முழுவதும் உருவி வந்து விட்டது. ஒரு சின்ன பின்னலைத் தவற விட்டது அந்த முழு வேலையையும் பாழாக்கி விட்டது.

இதைத்தான் தாவீதின் வாழ்க்கையிலும் பார்க்கிறோம். தாவீது உரியாவை போர்க்களத்திலிருந்து வரவழைத்து, தந்திரமான வார்த்தைகள் பேசி, மது அருந்தக் கொடுத்து அவன் வீட்டில் போய் அவன் மனைவியின் தோளில் இளைப்பாற சொன்னது நிறைவேறவில்லை. இந்த உத்தமமான சேனை வீரன் தன் வீட்டுக்கு போகாமல் மற்ற ஊழியரோடே படுத்துக் கொண்டான்.

தன் திட்டம் நிறைவேறாத மன உளைச்சலில் அவன் உரியாவைப் பார்த்து நீ ஏன், எதற்கு  வீட்டிற்கு போகவில்லை என்று கேள்வி கேட்கிறான். ஏதோ உரியா தான் தவறு செய்துவிட்டால் போல் கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறான். நான் குற்றமுள்ள மனதோடு இருக்கும்போது என் முன்னால் இருக்கும் ஒருவர் நியாயமாகத்தான் நடப்பேன் என்றால் என் மனநிலை கூட இப்படித்தான் இருந்திருக்கும். உரியா தன் தேவனுக்கு முன்பாகவும், ராஜாவுக்கு முன்பாகவும், தன் சக ஊழியருக்கு முன்பாகவும் நீதியுள்ளவனாய் இருந்தான். ஆனால் தாவீதோ குற்றமுள்ள மனசாட்சியுடன் அவனிடம் கேள்வி கேட்கிறான்.

இந்த குற்றமனசாட்சி என்பது சரி எது தவறு எது என்று நன்கு அறிந்தது. நம்முடைய ஏதேன் தோட்டத்துக்கு வாருங்கள். ஆதாம் ஏவாள்  இருவரும் கர்த்தரோடு எவ்வளௌ ஐக்கியமாய் உறவாடினர். ஆனால் அந்தக் கீழ்ப்படியாமை வந்தபோது பின்னாலேயே வந்தது இந்த குற்ற மனசாட்சி! ஏய் நீ செய்தது குற்றம் என்று! அதனால் தான் அவர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர்.

குற்ற மனசாட்சியைப் போல நரகம் ஒன்றும் இல்லை என்று அதை அனுபவித்தவர்கள் சொல்ல முடியும்! ஏன் தாவீதிடம் சற்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே! தூக்கமற்ற இரவு! உரியா தன் வீட்டுக்கு போனானா இல்லையா என்ற படபடப்பு! காலையில் எழுந்தவுடன் யாரையாவது கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற அழுத்தம்! அவன் போகவில்லையென்று தெரிந்ததும் பாதி கோபம் பாதி ஆத்திரம்! நரகம் தான்! பத்சேபாளிடம் கொண்ட சில நிமிட உறவு இப்பொழுது இனிக்கவே இல்லை.

இந்த குற்ற உணர்வுடன் நீங்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறீகளா?

ஒரு சிற்றின்பம், சற்று நேரம் நிலை தளர்ந்தது, தாவீதை அவன் அதிகமாய் நேசித்த அவனுடைய பரம பிதாவாகிய தேவனாகிய கர்த்தரை விட்டு  பிரித்து,  அவனுடைய வாழ்க்கையையே நரகமாக்கிவிட்டது.

ஒரு சின்ன பின்னல் போல ஒரு சின்ன நிலை தடுமாறுதல், ஒரு சிறு சிற்றின்பம் உன் வாழ்க்கையையே நரகமாக்கிவிடும். கர்த்தரிடம் வா!

பழைய பாவத்தாசை வருகுதோ – பிசாசின்

மேலே பட்சமுனக்கு திரும்ப வருகுதோ?

அழியும் நிமிஷத்தாசை காட்டியே

அக்கினிக்கடல் தள்ளுவானேன்?

நீயுனக்கு சொந்தமல்லவே மீட்கப்பட்ட 

பாவி நீயுனக்கு சொந்தமல்லவே!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

Leave a comment