கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 724 சோதனைகளைக் கடந்த உண்மையான விசுவாசம்!

2 சாமுவேல் 11:11  உரியா தாவீதை நோக்கி: பெட்டியும், இஸ்ரவேலும், யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவனின் சேவகரும் வெளியே பாளயமிறங்கியிருக்கையில் நான் புசிக்கிறதற்கும், குடிக்கிறதற்கும் என் மனைவியோடே சயனிக்கிறதற்கும் என் வீட்டிற்குள் பிரவேசிப்பேனா? நான் அப்படி செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும், உம்முடைய ஆத்துமாவின் பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன் என்றான்.

இன்றைய வேதாகம வசனத்தில் பார்க்கும் சம்பவத்தில்  உரியா ராஜாவகிய தாவீதுக்கு முன்னால் நின்றது என் கற்பனையில் வந்தது. நான் அவ்விடத்தில் இருந்திருக்க வேண்டும் என்ற ஆசையும் வந்தது. உரியா தன்னுடைய சுத்தமான குரலில் ராஜாவிடம் தைரியமாக, தெளிவாகத் தன்னுடைய வாழ்வில் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதே தன் தலையாய நோக்கம் என்று விளக்கிக் கூறுகிறான்.

உறுதியான கற்பாறை மேல் அஸ்திபாரம் போடப்பட்ட அவனுடைய விசுவாசமும் சாட்சியும் கேட்க அருமையாக இருந்திருக்கும்!

தேவனாகிய கர்த்தரே தன்னுடைய வாழ்வில் முதலிடம் என்று தெரியப்படுத்தியது மட்டுமல்லாமல், யோவாபும், அனைத்து இஸ்ரவேலும் யுத்த களத்தில் உறங்கிக்கொண்டிருக்கும் போது தானும் அங்குதான் இருக்கவேண்டும் என்றும் கூறுகிறான்.

இப்படிப்பட்ட விசுவாசமுள்ள ஒருவனைக் காண்பது அபூர்வம். அதிகாரமுள்ள ராஜாவுக்கு விசுவாசமுள்ளவனாய் இருந்தால்  அதில் ஆச்சரியமேயில்லை.  ஏனெனில் உரியாவின் உயிரை எடுக்கக்கூடிய அதிகாரமும் ராஜாவுக்கு இருந்தது.  ஆனால் இங்குதான் உரியா மற்றவரைவிட ஒரு தனிப்பட்ட மனிதனாக உயர்ந்து நிற்கிறான். அவனுடைய விசுவாசம்  வெளியில் பாளயமிறங்கியிருந்த யோவாபிடமும், இஸ்ரவேலின் சேவகருடனும்  இருந்தது. உரியாவின் விசுவாசம் ராஜாவோடு போகவில்லை, ராஜாவின் சேவகரோடும் இருந்தது அவனுடைய அருமையான ஜொலிக்கும் குணத்தைக் காட்டுகிறது. அவன் உண்மையிலேயே ஜொலிக்கும் ஒரு விசேஷமான கல் தான்.

உரியாவைப்பற்றி நாம் படிக்கும்போது அவன் நம்பகமான போர் வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றதைப் பார்த்தோம். இந்த உயர்ந்த ஸ்தானம் அவனுக்கு பெருமையைக் கொண்டு வந்திருக்கலாம். நம்முடைய இந்திய ஆர்மியில் உள்ள ஒரு மேஜர் போல. அவனுக்கு கீழ்ப்பட்டசாதாரண சேவகர்களை அவன் தனக்கு சமமாக நடத்தவேண்டிய அவசியமே இல்லை! அப்படித்தான் மற்றவர்கள் நடந்து கொள்வார்கள். ஆனால் இந்த மனிதன் தன்னுடைய விசுவாசத்தை தேவனாகிய கர்த்தருக்கு முதலிலும், அதிகாரம் உள்ள ராஜாவுக்கு இரண்டாவதும், தன்னோடு யுத்தத்தில் போராடும் சக ஊழியருக்கு மூன்றாவதும் காண்பிக்கிறான். எந்த சோதனையும் அதற்கு அணை கட்டவே முடியவில்லை!

உரியாவைப்போல விசுவாசமுள்ள வாழ்க்கையை நாமும் வாழ வேண்டும் அல்லவா? இதுவே என்னுடைய அன்றாட ஜெபமாகும்.

நம்முடைய தேசத்தில் ஊழியம் செய்த அன்னை தெரெசா அவர்கள் கூறியது என்னை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். அவர்கள், ‘கர்த்தர் நம்மை வெற்றிகரமான வாழ்க்கைக்கு அழைக்கவில்லை, விசுவாசமுள்ள வாழ்க்கைக்கே அழைத்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார்கள்.

விசுவாசம் ஒன்றையே கர்த்தர் இன்று நம்மிடம் விரும்புகிறார்! எந்த சோதனைகளையும் தாண்டும் விசுவாசம் நம்மில் காணப்பட இன்று ஜெபிப்போமா!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

Leave a comment