கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 743 அப்பத்தை பகிர பின்வாங்காதே!

2 சாமுவேல் 12: 4    அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல்…..

நாத்தான் தாவீதிடம் கூறிய கதையில் பணக்காரன் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியை இச்சித்ததாகப் பார்த்தோம். அந்த இச்சை தான் அவனை தரித்திரன் வீட்டில் இருந்த ஆட்டுக்குட்டியைத் திருட வைத்தது.

இன்றையதினம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய சுயநலமற்ற, இரக்க மனப்பான்மையை பற்றிப் பார்ப்போம். இது நாம் பார்த்த இச்சை, பெருமை இவற்றிற்கு நேர் மாறானது.

நாம் ஒருவேளை பிறக்கும்போதே இரக்கம் இல்லாதவர்களாக இருந்திருக்க மாட்டோம். நாம் பார்க்கும் எதையும் வாங்க, நாம் நினைக்கும் எதையும் நடத்த, நாம் விரும்பும் வாழ்க்கையை வாழ நமக்குத் தருணம் கிடைக்கும்போதுதான் எல்லாமே தலைகீழாக மாறிவிடுகிறது. அதிக பணம் இருக்கும் சிலர் நடந்து கொள்வது நமக்கு அருவருப்பாக இருக்கும் அல்லவா?

இதனால் தான் நம்முடைய கர்த்தராகிய இயேசு இந்த உலகத்தில் இருந்தபோது, அதிகமாக சொத்து குவித்தவர்களைப் பார்த்து, அதிக ஆஸ்தியினால் வரும் ஆபத்தைக்குறித்து பேசினார்.  அதிக ஆஸ்தி உள்ளவர்கள் பரலோக ராஜ்யம் செல்வது ஒட்டகமானது ஊசியின் காதில் நுழைவது போல இருக்கும் என்றும் எச்சரித்தார்.

சிலருக்கு இரக்க குணமே கிடையாது. ஆனால் பேரும் புகழும் கிடைப்பதற்காக சுயநலத்தோடு நான் நான் நான் என்று தாங்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல  காரியத்தையும் கூவி அம்பலப்படுத்துபவர்கள் பரலோகராஜ்யத்துக்குரியவர்கள் அல்ல என்று கூறினார். தாங்கள் செய்வது  தங்களது மற்ற கரத்துக்கே தெரியாமல் செய்பவர்கள் தான் சுயநலமில்லாமல்இரக்க குணமுள்ளவர்கள்.  அவர்கள் இரக்கம் காண்பிப்பது அவர்களுக்கு இயல்பாக இருக்குமே தவிர உள்நோக்கம் இருக்காது.

இங்கே நாத்தானின் கதையில் வந்த ஐசுவரியவானும் அவனிடம் வந்த வழிப்போக்கருக்கு சமைக்க தன்னுடைய ஒரு ஆட்டைக்கூட இழக்க மனதில்லாதிருந்தான் என்று பார்க்கிறோம். அவன் வழிப்போக்கன் மேல் இருந்த இரக்கத்தால் சமைக்கவில்லை. தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியின் மேலுள்ள இச்சையால் தான் சமையல் செய்வித்தான்.

இந்த மனதில்லாமல் என்ற வார்த்தைக்கு பின்வாங்குதல் என்றும் அர்த்தம். யாருக்காவது உதவி தேவைப்பட்டபோது, உதவிசெய்யும் நிலையில் நாம் இருந்தாலும் பின்வாங்கியிருக்கிறோமா என்று நம்மை சோதித்து அறிவோம்!

நீ ஒருவேளை உதவ மனதில்லாதவனாக இருக்கலாம், உன்னுடைய பணத்தால் இரக்கம் செய்ய பின்வாங்கலாம், கஞ்ஞனாகவே  இருக்கலாம் ஆனால் ஒரு கிறிஸ்தவனாக மட்டும் இருக்க முடியாது!  சிந்தியுங்கள்!

போய் பசியாயிருப்போருக்கு அப்பத்தை பகிர்ந்து கொடு

என்றான் தேவ தூதன்!

நான் திரும்பத் திரும்ப இதை செய்ய வேண்டுமோ

என்றேன் நான்!

அப்படியல்ல! தேவன் உனக்குக் கொடுப்பதை நிறுத்தும் வரை கொடுத்துக்கொண்டே இரு

என்றான் தேவ தூதன்!

இதுவே என்னுடைய சாட்சி!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

Leave a comment