கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1254 கலக்கமும் தயக்கமும் அற்ற விசுவாசம்!

ரூத்: 2: 11 ” அதற்கு போவாஸ் பிரதியுத்தரமாக; உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும், உன் தாயையும், உன் ஜந்மதேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும், எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது.”

ஒருமுறை  நாங்கள் ஊட்டிக்கு காரில் சென்று கொண்டிருந்தோம். போகும் வழியில் மலைப் பாதையில், சாலையின் இரண்டு பக்கமும் வானுயர்ந்த மரங்கள் நின்றன. அவற்றின் நடுவே வானைத்தொடும் நெருப்பு போல , சிவப்பு நிறப் பூக்களோடு வானளாவிய மரங்கள் நின்றன.

நாங்கள் ஊட்டிக்கு செல்வது இதுதான் முதல் தடவை அல்ல. எங்களுக்கு மிகவும் பழகிய ஊர் அது , ஆனால் அந்த மரங்கள் எங்கள் கண்களில் பட்டதேயில்லை. என் கணவர் இவை புதிதாக வளர்க்கப்பட்டுள்ளன என்று ஆணித்தரமாகக் கூறினாலும், அந்த மரங்கள் பார்க்க இளம் மரங்கள் போலத் தோன்றவேயில்லை. அவற்றுக்கு எப்படியும்  50 வயதுக்கு மேலிருக்கும். மிகவும் பழக்கமான சாலையிலேயே ,அந்த சாலைக்கே அழகூட்டும் வண்ணமாய் பூத்திருந்த இந்த மரங்கள் எங்கள் கண்களுக்குத் தப்பிவிட்டிருந்தன!

இப்படித்தான் நான் ரூத் புத்தகத்தை வாசிக்கும்போதும் எனக்கு நன்கு தெரிந்த கதைதானே என்று அழகிய புதைபொருட்களைத்  தவற விட்டிருக்கிறேன் என்று நான் இந்தமுறை படிக்கும்போது தான் உணர்ந்தேன். ரூத்தின் புத்தகம் எனக்கு எப்பொழுதுமே  அநேக காரியங்களைக் கற்றுக் கொடுத்த அழகிய புத்தகம்தான் ஆனாலும் எப்படியோ நான் எப்படியோ இத்தனை வருடங்களும் அந்தப் புத்தகத்துக்கே அழகு கொடுக்கும் கருத்துகளைத் தவற விட்டு விட்டேன்.

அப்படி என்ன புதிதாக கற்றுக்கொண்டேன் என்று கேட்கிறீர்களா?

நகோமியை ஒரு கற்றுக்கொடுப்பவராகப்  (mentor) பார்த்தேன். தன்னிடம் கர்த்தரால் ஒப்படைக்கப்பட்ட இளம் பெண்ணின் வாழ்க்கையை அவள் தன்னுடைய சாட்சியினாலும், தன்னுடைய புத்திமதிகளாலும், தன்னுடைய வழிகாட்டுதலாலும் எவ்விதமாக கர்த்தருக்கு உகந்த பாத்திரமாக உருவாக்கினாள் என்பது என்னை ஆச்சரியப்பட வைத்தது.

ரூத்தின் வாழ்க்கை எனக்கு ஒரு சிறந்து கற்றுக் கொள்பவராகத்தான் (mentee) தெரிந்தது. நகோமியின் சாட்சியைப் பற்றிக்கொண்டு, விசுவாசத்தில் உறுதியாய், எந்த சூழ்நிலையையும் தன்னுடைய தாழ்மையினாலும், பணிவினாலும் கையாண்டதால் புறக்கணிக்கப்பட்ட மோவாபியப் பெண்ணாகிய அவள் கர்த்தராகிய இயேசுவின் வம்ச வரலாற்றில் இடம் பெற்றது என் மனதை தொட்டது.

 இவற்றை மனதில் கொண்டு இன்னும் சில நாட்கள் நாம் ரூத் புத்தகத்திலேயே தரித்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

ரூத்திடம் எனக்கு மிகவும் பிடித்தது  அவளுடைய உறுதியான விசுவாசம்தான். கடினமானப் பாதையில் கடக்க நேரிடும் போதெல்லாம் நாம் விசுவாசத்தை தவற விடுகிறோம் அல்லவா? எத்தனை முறை பயத்தால் கலங்கி சோர்ந்து போயிருக்கிறோம்? ரூத்திடம் எந்த தயக்கமோ கலக்கமோ இல்லாமல் இஸ்ரவேலின் தேவனை விசுவாசித்தாள்.

 இஸ்ரவேல் மக்களை பாவத்தில் விழப்பண்ணிய மோவாபிய பெண்களின் மரபில் வந்த இவள், மோவாபைத் துறந்து, தேவனாகிய கர்த்தருக்குத் தன்னை ஒப்புக்கொடுத்ததால்,கர்த்தருடைய நோக்கம் அவள் வாழ்வில் நிறைவேறிற்று.

ரூத்திடம் காணப்பட்ட உறுதியான விசுவாசம் இன்று நம்மிடம் உள்ளதா? எல்லா காரியங்களும் நமக்கு சாதகமாகவே நடக்கும்போது நம்மிடம் வெளிப்படும் அல்லேலூயா ஸ்தோத்திரத்தை நான் சொல்லவில்லை!  இழப்புகளும், தவிப்புகளும், முள்ளும், கல்லும், வனாந்திரமும் நம்முடைய வாழ்வின் அங்கமாகும் போதும், அன்றன்றைய ஆகாரத்துக்கே நாம் கடினமாக உழைக்க வேண்டிய நிலையில் தள்ளப்படும்போதும் நம்முடைய விசுவாசம் எங்கே உள்ளது?

நம்மை சற்று ஆராய்ந்து பார்ப்போம்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment