கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1389 நம்பும்போதுதான் அவரது நம்பகத்தன்மை தெரியும்!!

எரேமியா: 17:7  கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

நம்பிக்கை! இந்த வார்த்தைக்கு அர்த்தத்தைத் தேடி நான் அகராதிக்கு போகவேண்டாம்! அந்த வார்த்தையின் அர்த்தத்தை என் அம்மாவிடம் கண்டிருக்கிறேன். தன்னை நம்பி யார் எந்த பொறுப்பைக் கொடுத்தாலும் தன்னால் முடிந்தவரை சரியாக செய்து முடிக்கும் குணம் அம்மாவிடம் இருந்தது. ஒரு காரியத்தை மறுபடியும் ஞாபகப்படுத்தவே தேவையில்லை! எப்படியாவது அது நடந்து விடும்!

ஆனால் அம்மாவைவிட நான் நம்பக்கூடியவர் யார் தெரியுமா?  என்னுடைய பரம பிதாவைத் தான்! அவரும் என் காரியம் எதையும் மறப்பதே இல்லை!

இதோ என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன் ( ஏசா:49:16) என்று என்னிடம்  கூறுகிறார்.

கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றுமுள்ளது  ( சங்:100:5)

D.L. மூடி பிரசங்கியார் அவர்கள் கர்த்தரை மிகவும் அதிகமாக நெருங்கி, அவரை முழுவதுமாக விசுவாசித்து, அவர்மேல் நம்பிக்கை வைத்த ஒருவர். அவர் வெறும்தரையில் முழங்கால் போட்டு ஜெபித்த இடம் தான் இன்று மூடி வேதாகமக் கல்லூரியாக பல்லாயிரக்கணக்கான வேத வல்லுநர்களை உருவாக்க்கிக்கொண்டிருக்கிறது. அதே இடத்தில் நிற்கும் சிலாக்கியத்தை கர்த்தர் எனக்கும் தந்தருளினார். அவர் இப்படியாக எழுதுகிறார்,

உன்னை நம்புவாயானால் நீ நிச்சயமாக சோர்வடைவாய்!

உன்னுடைய நண்பர்களை நம்புவாயாகில் அவர்கள் மரித்து உன்னை விட்டு செல்வார்கள்!

உன்னுடைய சொத்தை நம்புவாயாகில் அது உன்னைவிட்டு எடுபட்டு போகலாம்!

உன்னுடைய பேரையும் புகழையும் நம்புவாயாகில் ஒரு அநீதனுடைய நாவு அதை அழித்துவிடும்!

ஆனால் கர்த்தரை நம்புவாயாகில் அவர் இம்மையில் மட்டுல் அல்ல மறுமையிலும் கைவிடமாட்டார்!

முழுவதும் நம்பத்தக்க ஒருவரை எதிர்பார்க்கிறாயா? உன் வாழ்க்கையில் உன்னைக் கைவிட்டுவிடாமல் உன்னோடு பயணிக்க ஒருவரைத் தேடுகிறாயா?  கர்த்தராகிய இயேசு உன்னை மறக்கவும் மாட்டார், கைவிடவும் மாட்டார்.  எந்த சூழ்நிலையிலும் உனக்கு நம்பிக்கையானவர் அவர்  மட்டுமே!

நாம் அவரை  எவ்வளவு அதிகம் நம்புகிறோமோ அவ்வளவு அதிகம் அவர் எவ்வளவு நம்பிக்கையானவர் என்று அறிந்து கொள்ளலாம்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

Leave a comment