கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 1407 உன் பாதையில் வெளிச்சம் வேண்டுமா? இளைப்பாறு!

2 சாமுவேல் 7:1  கர்த்தர் ராஜாவைச் சுற்றியிருந்த அவனுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் அவனை நீங்கலாக்கி, இளைப்பாறப்பண்ணினபோது…

சில தினங்கள் என்னால் எழுத முடியாமல் தடைபட்டு போனதற்கு வருந்துகிறேன். இன்று மீண்டும் தொடருவோம்!

நான் என்னுடைய அவசரத்தால் 2 சாமுவேல் 11 ம் அதிகாரத்தில் உள்ள தாவீதும் பத்சேபாளும் கதைக்குத் தாவ முயன்றபோது கர்த்தர் அஅற்கு தடைபோட்டர். தாவீதுக்கும் மீகாளுக்கும் வாரிசு இல்லாமல் இருந்தது என்பதை முடித்தவுடன், தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் ஒரு வாரிசு  பிறந்ததை ஆரம்பிக்க நினைத்த என்னை கர்த்தர் இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் உள்ள அதிகாரங்களை படிக்கத் தூண்டினார்.

2 சாமுவேல் 7 ம் அதிகாரம் இளைப்பாறுதல் எவ்வளவு முக்கியம் என்று நமக்குப் போதிக்கிறது. கர்த்தர் ராஜாவை இளைப்பாறப்பண்ணினபோது என்ற வார்த்தை கர்த்தர்தாமே  இந்த இளைப்பாறுதலை தாவீதுக்கு அருளினார் என்பதை உணர்த்துகிறது.

தாவீது யுத்தம் பண்ணுவதிலும், திருமணம் பண்ணுவதிலும், நாட்டை ஆளுவதிலும் மிகவும் மும்முரமாக இருந்துவிட்டான். கர்த்தர் இப்பொழுது சற்று இளைப்பாறுதலைக் கொடுத்து வாழ்க்கையில் மிக முக்கியமானது என்ன என்று அவன் சிந்திக்க நேரம் ஏற்படுத்தினார்.

நாம் எத்தனைமுறை நம்முடைய வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு, நமக்கென்று சற்று நேரம் ஒதுக்க முடியாமல் அவதிப்படுகிறோம். நம்மால் நேராக சிந்திக்ககூட முடியாத நிலை. ஒரே குழப்பமான மனநிலை!  வெளியில் உள்ள எத்தனை சக்திகள் நம்மை விரட்டுகின்றன! யாருடைய வேலையை செய்வது என்றே தெரியவில்லை! அவை நாம் விரும்பும் அமைதியை கெடுத்து விடுகின்றன!

இதே மனநிலையில் தான் அன்று தாவீதும் இருந்திருப்பான். வெளியே யுத்தத்துக்கு மேலே யுத்தம்!  உள்ளே மீகாளைப்போன்ற மனைவிமாரால் பிரச்சனை! நாட்டை ஆளுவது சுலபமா என்ன? எத்தனை சக்திகள் தான் அவனை ஆட்டிப்படைக்கின்றன! பம்பரம் போல சுழன்ற அவன் வாழ்வில் கர்த்தருக்கு இடமே இல்லாமல் போயிற்று! நம்மைப் போலவேத்தான்!

தேவனாகிய கர்த்தர் நம்முடைய பாதையில் வெளிச்சம் காட்டவேண்டுமென்று நாம் விரும்பினால், நாம் நம்முடைய நேரத்தை கர்த்தருக்கென்று ஒதுக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் சரியான வெளிச்சத்தை பின் தொடருகின்றோமா என்று நமக்குத் தெரியும்! சில நேரங்களில் சாலைகளில் கண்களை கூசச் செய்யும் ஹெட் லைட் போல சில தவறான வெளிச்சம் நம்மை தேவனுடைய சித்தம் என்ற பாதையை விட்டு விலக செய்துவிடும்.

கர்த்தர் தாவீதை இளைப்பாறப்பண்ணினபோது அவன் நிச்சயமாக கர்த்தரை நோக்கிப்பார்த்து அவரோடு பேசி, உறவாடியிருப்பான்.

நம்மால் சற்று நேரம் கர்த்தருக்கென்று கொடுக்க முடிகிறதா? வாழ்க்கை எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அதன் மத்தியில் கர்த்தருடன் செலவிடும் நேரத்தை மட்டும் விட்டு விடாதே!

கர்த்தருடைய சமுகத்தில் அமைதியாக இருக்கும்போது தான் நமக்கு நல்ல இளைப்பாறுதல் கிடைக்கும்! தேவன் தாமே இந்த வார்த்தைகளோடு உங்களிடம் இடைபடுவாராக!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

Leave a comment