கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1408 தாவீதின் மனதை அழுத்திய பாரம்!

2 சாமுவேல் 7: 2,3 ராஜா தீர்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், கேதுருமரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது,தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே என்றான்.

அப்பொழுது நாத்தான் ராஜாவை நோக்கி: நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும். கர்த்தர் உம்மோடு இருக்கிறாரே என்றான்.

உங்களுடைய மனதில் என்றாவது ஒரு பாரம் அழுத்துவது போல உணர்ந்திருக்கிறீர்களா? ஆனால் அது என்ன பாரம் என்றே தெரியவில்லை அல்லவா? ஒருவேளை யாருக்கோ ஒருவருக்கு நம்முடைய உதவி தேவைப்படுகிறது என்ற ஒரு பாரம். அல்லது ஒருவேளை எங்கோ உடனே போகவேண்டும் என்ற ஒரு பாரம்!

இதைப்போன்ற ஒரு பாரமும், மன உருத்தலும் தான் தாவீதை வாதித்தது. கர்த்தர் அவன் வீட்டில் இளைப்பாறும் சூழ்நிலயை அவனுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். தன்னுடைய வீட்டில் இளைப்பாறிய அவன் தேவனோடு உறவாடிக் கொண்டிருந்தபோது அவன் கண்கள் திறந்தது. அவன் தேவனாகிய கர்த்தருக்கு தான் செய்ய வேண்டிய கடமை ஒன்று உள்ளதை உணர்ந்தான்.

தன்னுடைய நண்பனும் தீர்க்கதரிசியுமான நாத்தானை அழைத்து, தன் உள்ளத்தின் பாரத்தை பற்றி கூறுகிறான்.  நான் கேதுருமரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம் பண்ணும்போது தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே என்று தன் பாரத்தை கூறுகிறான்.

தாவீது தன் வேலைகளிலிருந்து சற்று ஒய்ந்து இளைப்பாறியபோது தேவனுடைய பெட்டிக்கு ஒரு நிரந்தர வாசஸ்தலம் வேண்டும் என்பதை உணர்ந்தான். உலகத்தின் பல்வேறு சத்தங்களுக்கு நம்முடைய செவிகள் அடைபட்டு நம்முடைய ஆத்துமா கர்த்தரை மட்டும் தேடும்போதுதான் தேவன் நம்முடைய செவிகளில் மெல்லிய சத்தத்தோடு கூறும் காரியங்கள் நமக்கு கேட்கும். இந்த உலகத்தில் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய பணி நமக்கு புலன்படும்.

இன்று நம்முடைய செவி தேவனுடைய சத்தத்தைக் கேட்கவும், நம்முடைய கண்கள் தேவனுடைய தரிசனத்தைக் காணவும் தயாராக உள்ளதா? தாவீதைப் போல உன்னுடைய எல்லா வேலைகளிலிருந்தும் சற்று விடுபட்டு கர்த்தரிடம் சற்று நேரம் செலவிடு! தாவீதைப் போல உன் கண்கள் திறக்கப்படும்!

நீ உனக்குள் காணும் தரிசனம் உன் கடமையாக மாறும்!

நீ உன்னை சுற்றிக் காணும் தரிசனம் உன் ஆர்வமும், நாட்டமுமாகும்!

நீ மேல் நோக்கி காணும் தரிசனம் உன் விசுவாசமாகும்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

Leave a comment