கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 1415 தேவனுக்கு அர்ப்பணித்து வாழ்ந்தால் வரும் நன்மை!

2 சாமுவேல் 11: 1 மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்துக்கு புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கை போடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமிலே இருந்துவிட்டான்.

தாவீது தேவனால் விசேஷமாக ஆசீர்வதிக்கப்பட்டவன்!  விசேஷித்த பெலத்தால் எதிரிகளை வென்றான். அதினால் கிடைத்த பொருட்களை விசேஷமான பெருந்தன்மையாக  கர்த்தருக்கு அர்ப்பணித்தான் என்று பார்த்தோம். பெலத்தாலும், பெருந்தன்மையாலும் மட்டுமல்ல விசேஷமான நீதியையும் நியாத்தையும் கொண்டு தன் மக்களை அரசாண்டான் என்றும் பார்த்தோம்.

பரலோக தேவனுக்குத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்து அரசாட்சி செய்ததால் அவனை சுற்றியுள்ள பலநாடுகள் அவனுக்கு கப்பம் கட்டின. கர்த்தராகிய தேவனைப் பார்த்து கை கொட்டிய அத்தனை நாடுகளும், அதே தேவனின் சித்தப்படி வாழ்ந்த தாவீதுக்கு அடிமையாயின.

இப்பொழுது மறுவருடம் என்ன நடக்கிறது பாருங்கள்! மறுபடியும் யுத்தங்கள் ஆரம்பிக்கும் காலம் இது! தாவீது தன்னுடைய படையை யுத்தத்துக்கு அனுப்ப சிரமப்படவே இல்லை! எல்லோரும் தயாராகவே இருந்தனர்! தாவீதின் வாழ்க்கை கர்த்தரால் வழிநடத்தப் படுவதை உணர்ந்த மக்கள் யுத்தத்துக்கு செல்லத் தயங்கவேயில்லை!

கர்த்தருடைய சித்தத்துக்குள் வாழும் ஒருவருடைய வாழ்க்கை இப்படித்தான் மற்றவர்களையும் தேவனை சார்ந்து வாழ உதவி செய்யும். நமக்குள் கிரியை செய்யும் அதே ஆவியானவர் , நம்முடைய வாழ்வை மட்டும் அல்ல, நம்மை சார்ந்தவர்களின் வாழ்வையும் சிறப்பாக்குவார்.

தாவீது சாட்சியுள்ள அல்லது ஒரு அர்த்தமுள்ள வாழ்வைத் தெரிந்து கொண்டதால் இஸ்ரவேலர் அத்தனை பேரும் கர்த்தரைப் பின்பற்றினர். கர்த்தருடைய சித்தத்துக்கு தங்களை முற்றிலும் அர்ப்பணித்து வாழ்ந்தனர்! யுத்தத்துக்கு அழைப்பு வந்தபோது அனைத்து இஸ்ரவேலும் தயங்காமல் முன் சென்றனர்.

நம் வாழ்வில் அர்த்தம் உள்ளதா? அர்த்தமற்ற வாழ்க்கையில் ஆசீர்வாதம் இருக்காது! அர்த்தமற்ற வாழ்க்கை பலனளிக்காது!

தாவீதைப்போல அர்ப்பணிப்பான, அர்த்தமுள்ள, தேவனுடைய சித்தத்துக்குள்ளான வாழ்க்கையை நாம் தெரிந்து கொள்வோம்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

Leave a comment