கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1428 நம் உள்ளத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் அக்கிரமம்!

2 சாமுவேல் 11: 4  அவள் அவனிடத்தில் வந்தபோது அவளோடே சயனித்தான்.

அக்கிரமம்  என்ற வார்த்தை நமக்கு பிடிக்காத ஒன்று என்பது எனக்குத் தெரியும். ஆனால் இந்த வார்த்தை வேதத்தில் பல இடங்களில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. ஆதியாகமம்: 6:5 ல் மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்று சொல்கிறது.

இந்த வார்த்தை தாவீது பத்சேபாளுடைய வாழ்க்கைக்கு மிகவும் பொருந்தும் என்று நினைக்கிறேன். அக்கிரமம் பெருகின இடத்தை  நன்மை இல்லாத இடம் என்று சொல்லாமல், நன்மையே தீமையாக மாறின இடம் என்று சொல்லலாம். கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கிற எல்லையை தாண்டிப் போகும் இடம்.

இந்த வார்த்தையை நாம் சற்று அதிகமாக பார்ப்பதின் காரணம், நாம் சிலவேளைகளில் சாதாரணமாக செய்யும் செயல்கள் கூட, கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கும் எல்லையைத் தாண்டும் போது தீமையாக மாறிவிடுகிறது.

கொஞ்சம் விளக்கமாகப் பார்க்கலாம்!

தாவீது யுத்தத்துக்கு போகாமல் தன் அரமனையின் மாடியில் உல்லாசமாக ஓய்வெடுத்தது அக்கிரம செயல் இல்லை. அவன் அங்கு உலாவும் போது ஒரு பெண் குளிப்பதை தற்செயலாகப் பார்த்தான் அதுவும் அக்கிரமம் இல்லை. அந்தப் பெண்ணைப் பற்றி விசாரிக்க ஆள் அனுப்பி, சற்று நேரத்தில் கர்த்தருடைய எல்லையை மீறி, அவளை அவனுடைய படுக்கை அறைக்கு அழைத்து சென்றானே அந்த செயல்தான் அக்கிரம செயல்.

தாவீதின் இந்த அக்கிரம செயலால் ஒரு குழந்தை உருவானது. கர்த்தருடைய திட்டம் என்னும் எல்லைக்கு அப்பால் உருவான குழந்தை.

நம்மை சுற்றிலும் நடக்கும் அக்கிரம செயல்களை பார்த்து அவர்களை அக்கிரமக்காரர் என்று நாம் பெயர் கொடுக்கலாம். ஆனால் நம்முடைய இருதயத்தை நாம் ஆராய்ந்து பார்த்தால் எத்தனைமுறை நாம் கர்த்தர் நமக்கு பாதுகாப்பாக  கொடுத்திருக்கும் எல்லையை தாண்டியிருக்கிறோம் என்று தெரியும்.

பாவம் என்பது நாம் செய்யும் பொல்லாப்பான செயல்கள் மட்டும் அல்ல, நமக்குள்ளாக வாழும் அக்கிரமம் தான்! நாம் தினசரி பார்க்கும் பெரிய பெரிய ஆட்களின் வாழ்க்கையில் உள்ள பொல்லாப்பை கண்டு அதைப்பற்றி விமசரிக்கும் நம் உள்ளத்தில் எத்தனை அக்கிரமம் ஒளிந்து கொண்டுள்ளது?  எத்தனைமுறை நாம் தாவீதின் இந்த செயலைப் பற்றி படிக்கும்போது தாவீது செய்தது அக்கிரமம் என்று தீர்ப்பு கொடுக்கிறோம்.

அதனால் தான் கர்த்தராகிய இயேசு, நாம் மற்றவருடைய கண்களில் உள்ள குறைகளைப் பற்றி பேசுமுன் நம்முடைய கண்களில் உள்ள குறையைப் பார்க்க வேண்டும் என்று கூறினார்.  தேவனுடைய சித்தம் என்ற எல்லையைத் தாண்டி நாம் தீமையான பாதையில் கால் எடுத்து வைக்காமல் இருக்க ஒவ்வொருநாளும் கர்த்தருடைய கிருபை நமக்குக் கொடுக்கப்பட வேண்டுமாறு ஜெபிப்போம்.

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

Leave a comment