கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 1431 சிறியவராயிருந்தபோதே உன்னை தெரிந்து கொண்டதை மறந்து போகாதே!

2 சாமுவேல் 11:8 பின்பு  தாவீது உரியாவை நோக்கி: நீ உன் வீட்டுக்குப்போய் பாதசுத்தி செய் என்றான். உரியா ராஜ அரமனையிலிருந்து புறப்பட்டபோது ராஜாவினிடத்திலிருந்து உச்சிதமான பதார்த்தங்களவன் பின்னாலே அனுப்பப்பட்டது.

 

நாம் 1 சாமுவேல் 15:17 ல் சாமுவேல் சவுலைப் பார்த்து நீர் உம்முடைய பார்வைக்கு சிறியவராயிருந்தபோது அல்லவோ …… கர்த்தர் உம்மை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணுவித்தாரே என்பதைப் பார்க்கிறோம்.

அடிக்கடி யாராவது நம் ஒவ்வொருவருக்கும் இதை ஞாபகப்படுத்தினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். பதவியும் புகழும் பணமும் ஒவ்வொரு மனிதனையும் தான் யாரென்று மறந்து போக செய்கிறது. நம்முடைய பார்வைக்கு நாம் சிறியவராகத் தோன்றுவதே இல்லை.

என்ன பரிதாபம்! கர்த்தருக்கேற்ற இருதயம் உள்ள தாவீது கூட,  பணமும், புகழும், அதிகாரமும் வந்தவுடன் அடுத்தவனுடைய மனைவியைத் தனக்கு சொந்தமாக்கினதுமல்லாமல், அதை மறைக்கத் திட்டமும் தீட்டும் அளவுக்கு தாழ்ந்து போனான். தாவீது தன்மேலும், தன் கள்ளத்தனத்தை மறைக்கும் திட்டங்கள் மேலும் சார்ந்து போகையில் அவன் கர்த்தரை விட்டு மிகவும் தூரமாக விலகிக் கொண்டிருந்தான்.

நம்மில் பலருக்கும் இந்த அனுபவம் இருக்கலாம். நாம் நம்முடைய தவறை மறைக்க முயற்சி செய்தால் மேலும் மேலும் பாவத்தில் தான் விழுவோம். அவனுடைய சேனைத் தலைவன் யோவாபுடைய கூட்டோடு, உச்ச கட்ட போர்க்களத்தில் இருந்த பத்சேபாளின் கணவனை  வீட்டுக்கு அழைத்து தன்னுடைய பாவத்தை மறைக்கப்பார்க்கிறான்.

அந்தக்காலங்களில் ராஜாவும் சேனையும் சேர்ந்துதான் யுத்தத்துக்கு செல்வார்கள். தோல்வியோ வெற்றியோ சேர்ந்து தான் அனுபவித்தனர். வெற்றியை சேர்ந்தே கொண்டாடி மகிழ்ந்தனர். இங்கு இந்த வீரன் உரியாவை மட்டும் மற்ற வீரர்களை விட்டு பிரித்து வீட்டுக்கு  அழைத்து, போரில் காய்ந்து போய் வந்த அவன் முன் அல்வாவை வைப்பது போல உச்சிதமான பதார்த்தங்களை வைத்ததின் அர்த்தம் தான் என்ன?

சோர்ந்து போய் வந்த உரியாவிடம் தந்திரமான வார்த்தைகளை பேசி, ஏதோ ராஜா நம்மைப் பார்க்க, நம்மிடம் பேச இவ்வளவு ஆசைப்படுகிறாரே நான் அவ்வளவு முக்கியமானவனா  என்று அவன் எண்ணும்படி வைத்து, அவன் ராஜாவிடம் எந்த பயமுமில்லாமல் இருக்கும்போது அவனுக்கு கதவைத் திறந்து அவன் மனைவியிடம் சென்று சற்று இளைப்பாறுமாறு ஆசை காட்டுகிறான். இஸ்ரவேலின் சேனை அனைத்தும் போர்க்களத்தில் இருந்தபோது தன்னுடைய மனைவியின் தோளில் இளைப்பாறும் சிலாக்கியம் இந்த வீரனுக்கு மட்டும் எதற்காக கொடுக்கப்பட்டது?

பாவங்களை மறைக்கிறவ்ன் வாழ்வடைய மாட்டான் என்பது நமக்குத் தெரியும். தாவீது தன்னுடைய பாவத்தை மூடி மறைக்கும் செயலில் கர்த்தரை விட்டு மிகவும் தூரம் போய்விட்டான்.

நம்முடைய வாழ்க்கை இன்று எப்படியிருக்கிறது? நம்முடைய இருதயம் கர்த்தரை பின்பற்ற ஆவலாய் உள்ளதா? அல்லது சிலவற்றை மட்டும் கர்த்தருக்கு தெரியப்படுத்தினால் போதும் மற்றவை எனக்கு சொந்தம் என்று  மூடி மறைத்து உள்ளதா?

நீ உன்னுடைய பார்வையில் மிகச்சிறியவனாய் இருந்தபோது கர்த்தர் உன்னைத் தெரிந்து கொண்டார் என்பதை மறந்து போக வேண்டாம்.

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment