ஆதி:25:1-2 “ ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரியையும் விவாகம்பண்ணியிருந்தான்”
ஆபிரகாம் தன் முதிர் வயதில் கேத்தூராள் என்னும் பெண்ணை மணந்து அவள் மூலமாய் ஆறு குமாரர்களைப் பெற்றான் என்று இந்த வேத பகுதியில் பார்க்கிறோம். ஒருவேளை சாராளை இழந்த தனிமை அவனை இன்னொரு பெண்ணிடம் விரட்டியது போலும். தனிமையை போக்க தேவனைத் தேட வேண்டிய வயதில் பெண்ணைத் தேடினான் ஆபிரகாம்.
தேவன் ஆபிரகாமைத் தெரிந்து கொண்டு அவனைத் திரளான ஜனத்துக்கு தகப்பனாக்குவேன் என்றார். தன் மனைவியாகிய சாராளோடு விசுவாச வாழ்க்கையை ஆரம்பித்த ஆபிரகாம் செய்த தவறுகளில் ஒன்று கானானுக்கு போகாமல் எகிப்துக்கு போனதும், அடிமைப் பெண்ணான ஆகாரை மறுமனையாட்டி ஆக்கியதும் என்று ஏற்கனவே பார்தோம்.
இப்படி பலமுறை தவறுகள் செய்த ஆபிரகாமின் வாழ்க்கையின் வெற்றி சின்னம் என்ன?
கர்த்தர் இந்த தம்பதியினருக்கு சிறிது சிறிதாக விசுவாச வாழ்க்கையை கற்றுக் கொடுத்தார். அவனுடைய விசுவாசம் என்னும் பாடத்தின் உச்ச கட்டம் , கர்த்தர் ஆபிரகாமிடம் அவன் ஒரே குமாரனாகிய ஈசாக்கை பலியிட கேட்டது. ஆபிரகாம் ‘ பலியிட ஆட்டுக்குட்டியை கர்த்தர் பார்த்துக் கொள்வார்’ என்று விசுவாசித்ததின் மூலம் விசுவாசம் என்னும் பரீட்சையில் தேர்வு பெற்றான்.
சாரளும் மரிக்கும்போது ஈசாக்குக்கு ஒரு நல்ல தாயாக மரித்தாள் என்று காண்கிறோம்..அவள் பல தவறுகள் செய்திருந்தாலும் தேவன் அவளை ராஜ குமாரியாக பார்த்து ( ஆதி:17:15) அவளை விசுவாசத்தின் ராணியாக்கினார் ( எபி: 11:11). பரிசுத்த பேதுரு அவளை கிறிஸ்தவ பெண்களுக்கு ஒரு சாட்சியாகவும் ( II பேதுரு: 3: 1- 6), பரிசுத்த பவுல் அவளை கர்த்தருடைய கிருபை விசுவாசியின் வாழ்க்கையில் எப்படி வேலை செய்கிறது என்பதற்கும், உதாரணமாக்கினார் ( கலாத்தியர்: 4: 21-31).
ஆபிரகாம் மரிக்கும்போது தன் குடும்பத்தாருக்கு அநேக ஆஸ்தியையும், இந்த உலகத்தாருக்கு அநேக ஆசீர்வாதத்தையும் விட்டு சென்றார்.
பலமுறை தவறினாலும் ஆபிரகாம், இஸ்ரவேல் மக்களையும், கிறிஸ்து இயேசுவையும் இந்த உலகத்துக்கு பரிசாக அளித்த விசுவாசத்தின் தந்தையல்லவா? யாக்கோபு 2:23 அவன் தேவனுடைய சிநேகிதன் என்னப்பட்டான் என்று வாசிக்கிறோமே! அவன் விசுவாச வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருந்த போதும் ஆபிரகாம் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடந்ததாலே (எபி: 11:8) அவனும் ஆசிர்வதிக்கப்பட்டான், நமக்கும்
ஆசிர்வாதமானான்.
கர்த்தருடைய வார்த்தைக்கு செவிகொடுத்து, கீழ்ப்படிந்து
வாழ்வோமானால் நாமும் நம்முடைய பின் வரும் சந்ததியாருக்கு பெரிய ஆசிர்வாதத்தை விட்டு செல்வோம். தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவதே நம் வாழ்க்கையில் வெற்றி சிறக்கப் பண்ணும.
ஜெபம்:
ஆண்டவரே! உம்முடைய வார்த்தையை தியானித்து, உம்முடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிய எனக்கு உதவி தாரும். ஆமென்!
