கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 617 பெற்ற மகளை அடகு வைத்தத் தகப்பன்!

1 சாமுவேல் 18:17  சவுல் தாவீதை நோக்கி: இதோ என் மூத்த குமாரத்தியாகிய மேராவை உனக்கு மனைவியாகக் கொடுப்பேன். நீ எனக்கு நல்ல சேவகனாய் மாத்திரம் இருந்து கர்த்தருடைய யுத்தங்களை நடத்து என்றான்.

இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலால் தாவீதைக் கொல்லமுடியவில்லை. அவனிடம் கர்த்தரின் ஞானம் இருந்ததால் சவுல் அவனைக்கண்டு பயந்தான் என்று படித்தோம் அல்லவா?

இப்பொழுது சவுல் ஒரு தந்திரமான திட்டம் தீட்டுவதை இந்த வசனத்தில் பார்க்கிறோம். என்னத் திட்டம் அது? என் குமாரத்தியை உனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கிறேன், அதற்கு பதிலாக நீ பெலிஸ்தருடன் யுத்தம் பண்ண வேண்டும் என்று சொல்கிறான்.  பெலிஸ்தருக்கு எதிரான யுத்தத்தில் தாவீது நிச்சயமாகத் தோற்றுப் போவான் என்று எண்ணி சவுல் தந்திரமாக இந்தத் திட்டத்தைத் தீட்டுகிறான்.

இங்கே என்ன நடந்தது என்றால் சவுலை மாமனாராக ஏற்றுக்கொள்ள தாவீது தயாராக இல்லை ஆதலால் ராஜாவுக்கு மருமகனாகிறதற்கு நான் எம்மாத்திரம் என்று மறுத்துவிட்டான் இந்தப் புத்தியுள்ள வாலிபன்.( 18:18).

சவுல் என்ற தகப்பன் செய்தது எப்படிப்பட்ட காரியம் பாருங்கள்? தாவீதை பெலிஸ்தரின் யுத்தத்தில் கொல்லத் திட்டம் போட்டு அதற்குத் தன் மகளை உபயோகப்படுத்தத் துணிந்தான் அவன்.

வேதாகமத்தில்  தெபோராள், யாகேல், நகோமி, ரூத், ராகாப் போன்ற பெண்கள் தேவனாகியக் கர்த்தரால் உபயோகப்படுத்தப்  பட்டாலும், யெப்தாவின் மகளைப் போன்ற பலியாடுகளும் இருந்தார்கள். பெண்களின் வாழ்க்கை மலர் தூவியதாக இல்லவே இல்லை. காரணம் இஸ்ரவேல் மக்கள் கானானியரின் பழக்க வழக்கங்களைக் கைக்கொண்டதுதான். கர்த்தர் ஒருவனுக்கு ஒருத்தி என்று ஏற்படுத்திய திருமண பந்தம் மாறி, வேறே பெண்களையும் மணந்தனர். அதுமட்டுமல்ல அவர்கள் தங்களுடைய பெண் பிள்ளைகளையும் கூட மதிக்கவில்லை.

இங்கே இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுல் தன்னுடைய குமாரத்தி  மேராவை அடகு வைக்கத் துணிந்ததும் அதே பட்டியலில் சேரும் அல்லவா! ஒருவனை கொலை செய்ய தன் மகளின் வாழ்க்கையை அல்லவா  உபயோகப்படுத்த நினைத்தான்  சவுல்!

இன்றைக்கும் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தங்களுடைய சுயநலத்துக்காக அடகு வைப்பதைப் பார்த்திருக்கிறேன். எத்தனை குடும்பங்களில் மூத்த பிள்ளைகளின் வாழ்க்கை இளைய பிள்ளைகளுக்காக பலியாக்கப்படுகிறது!

கிறிஸ்தவர்களாகிய நாம் நம்முடைய பிள்ளைகளை கர்த்தருடைய பார்வையில்  நேர்மையாக  நடத்துகிறோமா? அல்லது நம்முடைய சுயநலத்துக்காக அவர்களை உபயோகப்படுத்துகிறோமா?

ஒருவேளை உன்னுடைய வாழ்க்கை மேராவின் வாழ்க்கையைப்போல இருக்கலாம்!  உன் குடும்பத்தின் லாபத்துக்காக நீ உபயோகப்படுத்தப்படுவதை நினைத்து வெளியே சொல்ல முடியாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கலாம்!

உன்னுடைய இன்றைய நிலை ஒருவேளை மேராவைப் போல இருந்தாலும்   நீ ஒருநாளும் கைவிடப்படுவதில்லை!  கர்த்தர் உன் அடைக்கலமும் உன் கோட்டையுமாயிருப்பார்!  உன் நம்பிக்கையும் சந்தோஷமும் அவரே! அவரைப்பற்றிக் கொள்! 

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

Leave a comment