கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 748 நீ என்ன அவ்வளவு பெரியவனா?

2 சாமுவேல் 12:7  ….இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி…..

நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும்  வெள்ள நீர் தலைமேல் போய் நாம் மூச்சுத்திணறுவது போன்ற காலம் வருவதுண்டு அல்லவா?  அப்படிப்பட்ட நேரங்களில் நான் இரவில் வெளியெ வெறித்துப் பார்ப்பதுண்டு! நட்சத்திரக் கூட்டங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை!  அவைகளைப் பார்க்கும்போது கர்த்தர் எவ்வளவு அழகான வடிவமைப்பாளர் என்று யோசிப்பேன்!

யோபு 38:31ல்   ஆறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பத்தை நீ இணைக்கக்கூடுமோ? அல்லது மிருக சீரிஷத்தின் கட்டுகளை அவிழ்ப்பாயோ?  என்ற வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடித்தவை.   இத்தனை பெரிய மகத்துவமுள்ள தேவன் எனக்கு அருகாமையில் இருந்து என் கால்கள் வழுவாமல் காப்பது போலத் தோன்றும். என் வாழ்க்கை அமைதியாக சீராக இருக்கும்போது மட்டும் அல்ல, நான் அலையில் தத்தளிக்கும்போதும் கூட இந்த சர்வவல்லவரை  மீறி என்னை எதுவும் ஒன்றும் செய்து விட முடியாது என்று நினைப்பேன்.

இப்பொழுது தாவீதின் அரண்மனைக்குள் செல்லலாம்! நாத்தான் அவனிடம் நீ உன்னை மறந்து மிகவும் உயரத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறாய் ஆனால் நீ ஒன்றும் அவ்வளவு பெரியவனல்ல,  உன்னை இந்த உயரத்துக்குக் கொண்டு வந்ததே தேவனாகிய கர்த்தர் தான் என்று கூறுகிறான். சவுல் ராஜாவின் கையிலிருந்து தப்புவித்து இஸ்ரவேலையும், யூதாவையும் ஆளும்படி அவனை உயர்த்தியது கர்த்தரே என்று நாத்தான் நினைவு படுத்துகிறான்.

வானத்தின் நட்சத்திரங்களை அதினதின் இடத்தில் வைத்த தேவன் தானே தாவீதை இந்த சிங்காசனத்தில் உட்கார வைத்தது. அதை தாவீது எப்படி மறக்க முடியும்? அப்படியே மறந்து போயிருந்தால் அவனுக்கு இப்பொழுது பெரிய உதவி தேவை! யாராவது அவனுக்கு ஞாபகப்படுத்த வேண்டும்! பரலோகத்தின் தேவனாகிய கர்த்தரே இதை யாவையும் அவனுக்கு செய்தார் அவன் அல்ல என்று அவனுக்கு சொல்ல வேண்டும்! அதைத்தான் நாத்தான் தீர்க்கதரிசி செய்வதைப் பார்க்கிறோம்.

இந்த உதவி உனக்கும் எனக்கும் இன்று தேவைப்படுகிறதா? நீ இன்று அமர்ந்திருக்கும் உயர்ந்த அடைக்கலத்தில் உன்னைக் கொண்டுவந்தது யார்? நீயே உயர்ந்து விட்டாயா? நீ என்ன அவ்வளவு பெரியவனா?  பரலோகத்தின் தேவன் உன்னை வடிவமைத்து, எல்லாத் தடைகளையும் தாண்டி நீ இருக்கும் இந்த இடத்திற்கு அழைத்து வந்ததை எப்படி மறப்பாய்? அப்படியானால் இன்றைய வேத வசனங்கள் உன்னோடு பேசட்டும்! உன்னுடைய பெருமையிலிருந்து இறங்கி வா!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

 

 

Leave a comment