கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 899 சூரியனின் பிரகாசத்தைப் போல் இருப்பாய்!

நியா: 5: 31 “அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று பாடினார்கள். பின்பு தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது.”

ஆனைமலை என்றழைக்கப்படும் மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ள வால்பாறை என்ற பட்டணத்துக்கு நான் அடிக்கடி செல்வதுண்டு. மலையின் மேல் இருக்கும் நாட்களில் , சில்லென்று காற்று  அடித்தாலும், சூரியனின் வெப்பத்தை சற்று அதிகமாகவே உணர முடியும். சூரியனுக்கு அருகாமையில் இருப்பதுபோல வெப்பம் கூர்மையாகத் தாக்கும்.

அதேவிதமாக ஒருமுறை வெப்பத்தின் கூர்மையை நான் சென்னையில்  உணர்ந்தேன். என்னிடம் வேலை செய்யும் பெண்களை முட்டுக்காடு அழைத்து சென்று படகு சவாரி சென்ற போது தண்ணீரிலிருந்து வெப்பம் சற்று அதிகமாகவே வந்தது! ஏனெனில் சூரியன் நீரில் பிரதிபலிப்பதால் நாம் சூரியனுக்கு சற்று அருகாமையில் இருப்பது போன்ற வெப்பம்!

நாம் எதற்கு அருகாமையில் இருக்கிறோமோ அதை சற்று அதிகமாகவே உணர முடியும் என்பதுதான் உண்மை!

இன்று நாம் வாசிக்கிற வசனத்தில் , அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று தெபோராளும், பாராக்கும் பாடுவதைப் பார்க்கிறோம். நீதியின் சூரியனான தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய அருகாமையில் நாம் சேரச் சேர அந்த சூரியனை நாம் அதிகமாகப் பிரதிபலிக்கிறவர்களாகவும் இருப்போம்.

சற்று யோசித்துப்பாருங்கள்! இருபது வருடங்கள் இஸ்ரவேல் மக்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாங்கானதை செய்தனர். ஆனால் அவர்கள் தங்களை மனப்பூர்வமாய் ஒப்புக்கொடுத்தபோது, தெபோராளின் மூலமாகக் கர்த்தருடைய அழைப்புக்கு இணங்கியபோது, அவர்கள் மறுபடியும் புதுப்பெலெனடைந்து கழுகளைப்போல செட்டைகளடித்து எழும்பினார்கள். அவர்களுடைய வாழ்க்கை   தேவனாகிய கர்த்தரை பிரதிபலித்தது!

இதோ தெபோராள், பாராக், யாகேல் என்பவர்களின் சரிதை உங்கள் முன்னால்! அவர்கள் யாரை நேசிக்க முடிவு செய்தனர் என்று கவனியுங்கள்! அவர்கள் உலகத்தை நேசியாமல், தேவ்னாகிய கர்த்தர் மேல் அன்பு கூர்ந்ததால் , அவரைத் தங்கள் வாழ்க்கையில் பிரதிபலித்தனர்.

அவரில் அன்புகூரும் கிருபையை தேவனாகிய கர்த்தர் எனக்கும் என் குடும்பத்துக்கும் அனுதினமும் வழங்க வேண்டும் என்பதும், அவருடைய அன்பை நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பிரதிபலிக்கவேண்டும் என்பதுமே என்னுடைய அன்றாட ஜெபம். இதுவே உங்கள் ஜெபமாகவும் இருக்கும் என நம்புகிறேன்.

இன்னும் ஒன்றை இந்த வசனத்தில் கவனியுங்கள்! இஸ்ரவேல் மக்கள் தேவனிடத்தில் அன்பு கூற ஆரம்பித்தபோது , நாற்பது வருடங்கள் அவர்களுடைய தேசத்தில் அமைதியிருந்தது! தேவனண்டை நெருங்கி, அவருடைய அன்பினால் நம் வாழ்க்கை மாறும் போது நம் வாழ்விலும் அமைதி கிடைக்கும்.

இருபது வருடங்கள் பொல்லாங்கானதை செய்து, யாபீனுக்கு அடியில் கசங்கிக் கொண்டிருந்த இஸ்ரவேல் மக்கள் தங்களை மனப்பூர்வமாய் ஒப்புக்கொடுத்த போது, தேவனுடைய அன்பை உணர்ந்த போது, கர்த்தர் , அவர்களுடைய இருபது வருட அடிமைத்தனத்துக்கு பதிலாக, நாற்பது வருடங்கள் அமைதியைக் கட்டளையிட்டார்! 

யோவேல் 2: 25 ல் , ” நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப்பூச்சிகளும், பச்சைப்புழுக்களும், பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன் “,என்று கர்த்தர் வாக்குத்தத்தம் கொடுத்த வண்ணமாய், அவர்களுக்கு இரட்டிப்பான சந்தோஷத்தைத் திரும்பக் கொடுத்தார்.

நம்மையும் மனப்பூர்வமாய்க் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து, நாம் அவரை நேசிக்கும்போது, இரட்டிப்பான சந்தோஷமும், ஆசீர்வாதமும், சமாதானமும் நமக்குக் கொடுப்பார்.

தேவனாகிய கர்த்தரின் இருதயம் உன்னுடைய அன்புக்காக ஏங்கியிருக்கிறது!  அவருக்கு அருகாமையில் நெருங்கி வா! வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல பிரகாசிப்பாய்! உன் குடும்பத்திலும் சமாதானம் உண்டு! இரட்டிப்பாய் உண்டு!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment